புதன், 24 ஜூன், 2015

பூப்பூவாய் பூத்திருக்கு..


இட்லி செய்வது எப்படி? னு மட்டுமே பார்த்தா போதுமா, என்னையும் கொஞ்சம் உலக உலா அழைத்துச் செல்லேன் என்ற இட்லிப்பூவின் வேண்டுகோளை சிரமேற்க் கொண்டு இதோ இங்கே காற்று வெளியினிலே கவிதை பாட விட்டுள்ளேன்.
நிலவுக்கு மட்டும்தான் அழகு நடை பயில வானம் சொந்தமா என்ன, நாங்களும் நீ தொட்டு விடும் தூரம்தான் என வான மகளிடம் சொல்லாமல் சொல்கின்றதோ இப்பூங்கொத்து!!

வானத்தப் பார்த்தேன்!!

பூமியப் பார்தேன்!!
இப்பிடிலாம் எழுதி உங்களை நோகடிச்சேனு கோச்சுக்காதீங்க மக்களே!! ஏதோ படப்பாடலையும் சுட்டு, என் எண்ணங்களையும் கோர்த்து எனக்கு தெரிஞ்சத எழுதிப்புட்டேன்.

நீலவானத்தை வெண்மேகம் அலங்கரிக்க, நானும் அதற்கு சளைத்தவளில்லைனு சிவப்பூம், பச்சையும் கலந்து அழகை அள்ளித்தெளிக்கின்றன இம்மலர்கள் :)

இட்லிப்பூ இந்த மழைக்கதுக்கும் ரொம்ப ரொம்ப அழகா பூத்து பூத்து குலுங்குது.
பார்க்க பார்க்க பரவசம்!! இத்தனைக்கு ரொம்ப ஒண்ணும் பெரிசா கவனிச்கிறதே இல்லீங்க, சொல்லபோனா சுத்தமா கண்டுக்கிறதே இல்ல, உரம் வெச்ச ஞாபகமே இல்ல, தண்ணி மட்டும் ஊத்தறதோட சரி..அதுக்கே இவ்வளவு அழகு காட்டி, மனதை புத்துணர்வாக்குது பாருங்களேன்!! ரொம்ப ரொம்ப நன்றி இட்லியக்கா !!

இதனோட அழகுல மயங்கி போனவாரம் வீட்டுக்கு வந்த நட்பூ குழாம், எங்கிட்ட கேக்காமயே படக்குனு 2 பூவ பறிச்சிட்டாங்க. ஒரு நிமிசம் இல்லீங் ஒரு நாள் பூரா திடுக்குனு இருந்துச்சு. இருந்தாலும் சுதாரிச்சுக்கிட்டேன்.
வேறென்ன செய்ய முடியும் நீங்களே சொல்லுங்க!! ஒருவேளை அம்மலர் சாமிக்கு போயிருக்கலாம், இல்லேனா அவங்க வீட்டு வரவேற்பரைக்கு அலங்காரமா அமர்ந்திருக்கலாம் இல்லீங்களா?
அதுனால இதெல்லாம் சகசமப்பூனு மனச தேத்திக்கிட்டு, மலர்தானே மீண்டும் மலராமலா போய்டும்னு ஜமாதானமாகிட்டேன்!!

நல்ல வேளை அப்பதான் போட்டோ புடுச்சிருந்தேன்..
இவிங்கதான் அவிங்க!! நல்லா சிவப்பு நிற பந்து போல அழகா இருந்தாங்க!!
எதுக்காக இதனை இங்க பொறிச்சேனா, இது போல நடப்பது சகஜம் எனவும், நாம் இது போல இருந்தால் இப்படியும் நினைப்பாங்களோனு யோசிக்கவும் ஏதுவாகவே இதனை எழுதியுள்ளேன்.

சிலர் வீட்டுக்கு வெளியில் வைக்கும் அரளியில் மலர் கொய்துவார்கள், அதனை வேண்டாமென நினைக்கும் மனமும் உண்டு, இல்லை சாமிக்குத்தானே யார் கொண்டு சென்றால் என்ன என நினைப்பவர்களும் உண்டு.
சிலருக்கு நல்லதாக தோன்றும் விசயம் சிலருக்கு தீயதாக தோன்றும். அதுனால எப்பவும் ஒரே கோணத்தில சிந்திக்காம நாணயத்திற்கு இரண்டு பக்கமுண்டுனு எண்ணி வாழவேண்டும். இது எனக்கு நானே சொல்லிக்கிறனுங்...

                                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

நன்மை ஒரு வைத்தியன்; தீமை, சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.

                                                     _((()))_

                                                 

செவ்வாய், 23 ஜூன், 2015

பழஞ் சக்கரை / சக்கரபழம் (பழமும் சர்க்கரையும்)

 ழஞ்சக்கரை என்ற சக்கரபழம் இது ஒரு பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் உணவாகத்தான் எனக்கு தோன்றியது. பள்ளி முடிஞ்சு வந்ததும் அப்பலாம் இப்போ போல ஸ்னாக் ரெடியா இருக்காது. எப்பவாச்சும் முறுக்கு சுட்டுட்டு இருப்பாங்க அம்மா. அன்றைய தினம் அப்படியே பெருமிதம் நிறைஞ்ச தினமா தோணும் எனக்கு.
சில நாட்கள் பருப்பு வடை காத்திருக்கும். இல்லேனா போண்டா இருக்கும். அதெல்லாம் சொல்லாமல் சொல்லிச்செல்லும் விசயம் என்னனா? உங்கூட்டுக்கு இன்னிக்கு ஒரம்பரை வந்துட்டு போயிருக்கு என்பதாகத்தான் இருக்கும்.
அப்பரமென்ன சந்தோசத்துக்கு கேட்கவா வேணும். வந்த ஒரம்பரை நிச்சயம் எதாவது வாங்கிட்டுத்தான் வந்திருப்பாங்க.
கூட இந்த வடை, போண்டா ...ஆஹா ஓஹோ!! குட்டி போட்ட பூனையாட்டம்  சோறாக்குர ஊட்டுக்கும் (சமையலறையை சோறாக்குற ஊடுனுதான் சொல்வோம்) ஆசாரத்துக்கும் (ஹால்தான் ஆசாரம்...நாட்  மடிஆச்சாரம்...இது ஆசாரம்) நடை பயின்றவாறே இருக்கவேண்டியதுதான்.

பழஞ்சக்கரைய பேசப்போயி எங்கெங்கியோ சுத்திட்டு இருக்கேன் பாருங்க!!

பழஞ்சக்கரைதான் அப்போதைய பிரபலமான ஈவினிங் ஸ்னாக்.. பழம்லாம் சீப்பு சீபாலாம் வாங்கி பயன்படுத்துறது கிடையாது.
ஒரு தார் வாழைப்பழத்தை பழுக்க வெச்ச.. கட்டி விட்டுடுவாங்க எங்கப்பா.
அப்புறம் என்ன போகைல வரைல பிச்சு பிச்சு உரிச்சு சாப்பிட்டுட்டு..தோலை ஆட்டுக்குட்டிக்கு கொடுத்துவேன். எவ்வளவு தாராளம் பாருங்க!!

ம்ஹுக்கும் மறுக்கா வேறெங்கியோ போறேன் பாருங்க!!

இப்ப நெசமாலுமே விசித்துக்கு வாரேங்க!! அப்ப இதுவரைக்கும் சொன்னதெல்லாம் பொய்யானு கேட்கப்படாது!! அதும் நெசம்தான்.

பழஞ்சக்கரை அல்லது சக்கரபழம்

தேவையான பொருட்கள்:

பூவன்பழம்....2 (விருப்பட்ட பழம் சேர்க்கலாம்)

நாட்டுச்சர்க்கரை........2 மேசைக்கரண்டி (இனிப்புக்கேற்ப)

தேன்..........1 தேக்கரண்டி (விருப்பட்டால்)

பேரீச்சம்பழம்.....4

சுடுசாதம்.....2 கரண்டி

நெய்.......1 மேசைக்கரண்டி(விரும்பினால்)

செய்முறை:

மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து பரிமாற வேண்டியதுதான்.

மிகவும் சுவையாக இருக்கும். பெரிவீங்க, சின்னவீங்க பாகுபாடெல்லாம் பார்க்காம ரசித்து ருசித்து சாப்பிடலாம்.

என் மகனுக்கும், மகளுக்கு மேற்சொன்ன கதைய சொல்லி இந்த பலகாரத்தை (ஸ்பெஷலா எது செய்தாலும் பலகாரம்னுதே சொல்வோம்) செய்து கொடுத்தேன். நல்லா இருக்குனு சொன்னாங்க :)



சுவைத்து பார்த்து சொல்லுங்க எப்படி இருந்துச்சுனு!!

                                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

பிறரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்; அது உங்கள் உள்ளத்தின் மதிப்பைக் குறைக்கும்.

                                                               _((()))_ 

திங்கள், 15 ஜூன், 2015

கேரட் பொரியல்/carrot poriyal




கேரட் பொரியல் மிக எளிமையானதொரு சமையல். சத்துக்கள் நிறைந்தது.

தேவையான பொருட்கள்:

கேரட்........4

சின்னவெங்காயம்........6

மிளகாய் (பச்சை அல்லது காய்ந்த)....1 (விதைகளை நீக்கிவிடவும்)

கறிவேப்பிலை.....2 இணுக்கு

நிலக்கடலை பருப்பு....1 தேக்கரண்டி

உப்பு..... தேவையான அளவு

தாளிக்க:

கடலெண்ணைய்....1 தேக்கரண்டி

கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளுழுந்து பருப்பு.


கேரட்டை நன்கு கழுவி மேல் தோலை சீவிவிட்டு காய்சீவியில்  துருவிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளுழுந்து மற்றும் நிலக்கடலையை போட்டு பொரியவிடவும்.

கறிவேப்பிலையை போட்டு சின்னவெங்காயம் போட்டு மிளகாய் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன்  துருவிய கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் எரிய விட்டு, வாணலியை மூடி வைக்கவும்.

5 நிமிடங் கழித்து திறந்து கிளறிவிடவும்.

மேலும் 5 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.

சுவையான கேரட் பொரியல் தயார்.

 தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் தினமுமே ஒரு கேரட்டை கொடுக்கலாம். செய்வதும் மிக எளிது.

                                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

எந்த வேலையாக இருந்தாலும் அதனை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

விவேகானந்தர்.

                                                    _(((())))_