வியாழன், 14 மே, 2015

வெந்தய இட்லி/தோசை




வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இதில் உள்ள மிதமான கசப்பு தன்மை குடலுக்கு நன்மை பயக்கும்.
பரீட்சை காலங்களில் குழந்தைகளுக்கு 1 ஸ்பூன் வெந்தயத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கொடுத்தால் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதனால் உண்டாகும் உடற்சூடு குறையும்.

இரவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை நன்கு கழுவிவிட்டு, சுத்தமான நீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

தோல் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இது ஒரு அருமருந்து.
இது மிகவும் குளிர்ச்சி என்பதால் சளித்தொல்லை இருப்பவர்கள் மிதமாக சூடு பண்ணி குடித்துக் கொள்ளலாம்.

நீரை வடிகட்டியபின் எஞ்சி இருக்கும் வெந்தயத்தை நன்கு மை போல் அரைத்து 1 தேக்கரண்டி தயிருடன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை இராது.
முடி நன்கு பளபளபுடன் இருக்கும். நன்கு செழித்து வளரும்.
இதுவும் சளித்தொல்லை இருப்பவர்களாவியின் மிதமாக சூடுபடுத்தி தயிர் சேர்க்காமல் தேய்க்கவும்.

சர்க்கரை  உள்ளவர்கள் வெந்தயத்தை உணவில் சேர்த்து வர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தய இட்லி தோசை செய்முறை:

புழுங்கல் அரிசி.......... 4 டம்ளர்

வெந்தயம்.........1/4 டம்ளர்

செய்முறை:

வெந்தயத்தை கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

அரிசியையும் நன்கு கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

கிரைண்டரில் முதலில் வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும். அவ்வப்பொழுது நீர் விட்டு அரைக்கவும். வெந்தயம் நன்கு அரைபட்டு பொது பொதுவென வந்த பிறகு எடுத்துவிட்டு, அரிசியைப் போட்டு அரைக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். பாத்திரத்தில் பாதியளவு மட்டுமே மாவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  
இரவு முழுதும் புளிக்க விட்டு, காலையில் இட்லிகளாக வார்க்கவும். (மாலையில் அரைத்தால் காலைவரை புளிக்க விடவும்). 

இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி சூடானவுடன், இட்லிதட்டில் துணிபோட்டு (நனைத்து பிழிந்து) அதில் இட்லிகளாக வார்க்கவும்.

15 நிமிடங்கள் கழித்து வெந்துவிட்டதா என்று கறிவேப்பிலை குச்சியால் குத்தி பார்த்து, மாவு ஒட்டாமல் இருந்தால் லேசாக நீர் தெளித்து இட்லிகளை எடுத்துவிடவேண்டும்.
மென்மையான இட்லி தயார்!!.  

இட்லிதுணி போட்டு எப்படி இட்லி சுடறதுனு தெரியாதவங்க  இங்கே சென்று தெரிஞ்சுக்கோங்க :)









மாவு புளித்து வந்த பிறகு கரண்டியினால் அள்ளும் பொழுது வெயிட்டே இல்லாமல் இருக்கும். உளுந்து சேர்த்த மாவு போல் வெண்மையாக இராது.
வெந்தய இட்லிக்கு பீர்க்கங்காய் சட்னி கூட பப்பாளி பழம்



குழந்தைகளுக்கு கொடுக்க ஏதுவாக மென்மையான தோசைகளாக வார்க்கலாம்!!

வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்க வல்லது!! வெந்தயத்தைப் பயன்படுத்தி உடலைப் பேணி பாதுகாப்போம்.

                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

வாழ்க்கை என்பது உடை ஒத்திகை பார்ப்பது போன்று அல்ல. வாழ்க்கை என்கிற இந்த ஆட்டத்தில் ஒரே ஒரு வாய்ப்பே நமக்கு இருக்கிறது. 
எதிர்காலத் தலைமுறைகளைப் பந்தய பணமாக வைத்தே இந்த ஆட்டத்தை நாம் ஆடுகிறோம்.


                                                            _((()))_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்