புதன், 4 மார்ச், 2015

பாசிப்பருப்பு பாயாசம்



பாசிப்பருப்பு பாயாசம் மிகவும் எளிதான, சத்தான ஒன்று. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து செய்வதுதான் பிடிக்கும். சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.
திருமணம் முடிந்து, முதன்முறை ஒரம்பரை வந்த பொழுது பாசிப்பருப்பு பாயாசம்தான் வைத்தேன்.
 (கு(கொ)ழம்பு வைத்தேன், இரசம் வைத்தேன், பாயாசம் வைத்தேன், சோறு ஆக்கினேன், இட்லி சுட்டேன், சப்பாத்தி சுட்டேன் என்றுதான் சொல்வோம். ஆனால் சில பக்கம் சப்பாத்தி போட்டேன், இட்லி ஊத்தினேன், சமையல் செய்தேன் எனக்கூறி கேட்டிருக்கிறேன்.)

முதல்முயற்சியிலேயே எல்லோரின் பாராட்டையும் பெற்று தந்தது என்பதாலயோ என்னவோ, அடிக்கடி இப்பாயாசம் என் சமையலில் இடம்பெற்றுவிடும்.
இந்த வருட திருமணநாளன்று இந்த பாயாசம்தான் வைத்தேன். இதுவரை கேரட் சேர்த்து செய்ததில்லை, இந்த முறை மிகவும் மெல்லியதாக துருவிய கேரட் சேர்த்து செய்தேன்.
சுவை அலாதியாக இருந்தது!!

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு............1கப்

வெல்லம்.............11/4 கப் (இனிப்பு குறைவாக வேண்டுமானால் 3/4 கப்)

தேங்காய்................2 மேசைக்கரண்டி

முந்திரி................10

திராட்சை.......15

 ஏலக்காய்........5

பால்...............1 டம்ளர்

 கேரட்..........1 மேசைக்கரண்டி


செய்முறை:

பாசிப்பருப்பை குக்கரில் 2 கப் நீர் விட்டு மலர வேகவைக்கவும்.

வெல்லத்தை துருவி, சுடுநீரில் கரைத்து வடித்து வைக்கவும்.

தேங்காய், பாதி முந்திரி, தோல்நீக்கிய ஏலக்காயை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

மீதி முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் கேரட்டையும் போட்டு நிறம்மாறாமல் வதக்கி எடுக்கவும்.

அகலமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி வேகவைத்த பாசிப்பருப்பு போட்டு கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.

பின்பு அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.

வறுத்த முந்திரி, திராட்சை, கேரட் போடவும்.

கடைசியாக காய்ச்சிய பால் ஊற்றி,  நன்கு கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.





அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். பாசிப்பருப்பு அடிப்பிடித்துவிடும்.

சுவையான பாசிப்பருப்பு பாயாசத்தை மென்சூட்டில் அருந்தினால் சுவையாக இருக்கும்.

முழு பாயாச செய்முறைக்கான படங்களை காணாமேனு நினைக்காதீங்க, பாதிப்படத்த காக்காச்சி தூக்கிட்டு போய்டுச்சு. எடுக்கலேனு உண்மைய சொன்னா நல்லாவா இருக்கும்!!:))

                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்த பொன்மொழி:

மரியாதையுடன் பிறரை மதித்து பேசுவதும், நடப்பதும் செலவில்லாத செல்வங்கள்.
                                                      _()_()_()_()_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்