ஞாயிறு, 17 மே, 2015

பூண்டு தக்காளி சட்னி/ garlic tomato chutney

இந்த சட்னி காரசார விரும்பிகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நாங்க கொஞ்சம் காரம் கொறச்சலா போட்டு சாப்பிட்டே பழகிவிட்டதால், முதல் முறை அரைத்த பொழுது கண்ணீர் மல்க சாப்பிட்டோம்.
இதுல சொல்றதுக்கு என்னங்க  இருக்கு, சர்க்கர கொஞ்சம் வாயில போட்டுத்தான் கண்ணீரை நிறுத்தனோம்னா பாருங்களேன்.
சோ சிம்பிள்ங்க... பூண்டு பத்தோ, பதனஞ்சோ எடுத்து தோல உரிச்சுக்கணும். இந்த சட்னி தயாரிப்புல நேரம் பிடிக்கும் வேலைனா இது மட்டும்தான்.

தக்காளி..நாலெடுத்து  இரண்டா வெட்டிக்கணும்.
வறமிளகாய் அவிங்கவிங்க வீட்டு காரத்துக்கேற்ப நான் மூணுதான் போட்டேன்.

இந்த மூணையும் மிக்ஸி ஜார்ல போட்டு அரைச்சுக்கணும்.
ஒரு வாணலிய அடுப்பில வெச்சு காஞ்சவுடனே, கடலெண்ணைய் துளி ஊத்தி கடுகு, சீரகம் போட்டு வெடிச்ச உடனே கறிவேப்பிலை போடணும்.
உடனே அரைச்சத போட்டு(ஊத்தி) தேவையான அளவு உப்பு போட்டு அலாசி உடணும்.
அப்பிடியே அலாசிட்டே இருந்தம்னா, கொஞ்சங்கொஞ்சமா தண்ணி சுண்டி (தக்காளில இருக்கும் தண்ணியே போதும்) கிளறுற பதம் வரும்.

இந்த மாதிரி வந்த உடனே அடுப்பை நிறுத்திப்போட்டு, ஒரு சின்ன குண்டால ஊத்தி வெச்சுட்டு, வடசட்டிய கழுவி வெச்சுடணும். (ஸ்ஸ்ஸப்பா முடில...:))).
சட்னிய எடுத்து தோசைக்கோ, இட்லிக்கோ தொட்டு சாப்பிட்டா அவ்வளவு நல்லா இருக்கும். கொள்ளு இட்லியும், தக்காளி சட்னியும் கூட்டணி அமைத்து இருக்காங்க.
இட்லியக் கொன்ன பெரும என்னையத்தான் சாரும்னு எங்கூட்டு சனம்லாம் வாய்கொள்ளாம பாராட்டுன விசயத்தையெல்லாம் நான் உங்க கிட்டலாம் சொல்வேனு மட்டும் நினச்சுப்போடாதீங்க ஆமா..!! :))

 கொள்ளு தோசை,கொள்ளு இட்லி . இந்த லொள்ளுஇட்லி சாரி கொள்ளு இட்லி உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.

பின் குறிப்பு:

பெங்களூரு தக்காளினா சின்ன நெல்லிக்கா அளவுக்கு புளி சேர்த்துக்கோங்க. நாட்டு தக்காளினா புளி போட வேண்டியதில்ல. அதுக்கு மீறி நாங்க புளிப்பு உரைப்புமாத்தான் அரைப்போம்னா, விருப்பத்திற்கேற்ப சேர்த்துக்கோங்க.

படித்ததில் பிடித்தது:

அறியாமை வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அறிந்து கொள்ள விருப்பமில்லாமை அதை விடப் பெரிய வெட்கக்கேடாகும்.

-பெஞமின் ஃப்ராங்க்ளின்.

                                                              _((()))_.

வெள்ளி, 15 மே, 2015

பீட்ரூட் சட்னி/ beetroot chutney


 பீட்ரூட் சட்னி அடிக்கடி செய்வதுண்டு. ஒரே முறையில் இல்லாமல், வேறு வேறு விதமாக அரைப்பதுண்டு. 

தேவையான பொருட்கள்:

பீட்ரூட்...............2 (நடுத்தர அளவிலானது)

வறுத்து அரைக்க:
 
சின்னெ வெங்காயம்.........20

வறமிளகாய்...........2 (காரத்திற்கேற்ப)

கொத்தமல்லி/ தனியா..........1 மேசைக்கரண்டி

சீரகம்.......1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு........ 1 மேசைக்கரண்டி

பூண்டு....2 பல்

கறிவேப்பிலை.......2 இணுக்கு

உப்பு..........தேவையான அளவு

கடலை எண்ணைய்........1 மேசைக்கரண்டி



 பீட்ரூட்டை பொடியாக நறுக்கி, உப்பு போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி, காய்ந்தவுடன் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமானவுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவேண்டும்.
முக்கால் பாகம் வதங்கியவுடன் வறமிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.

பின்பு சீரகம், மல்லி போட்டு வதக்கி அடுப்பை நிறுத்தவும்.

வேகவைத்த பீட்ரூட் மற்றும் வறுத்த பொருட்களை ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.

சுவையான பீட்ரூட் சட்னி தயார்!!

இட்லி, தோசை, பணியாரம், சாதத்திற்கு மிகவும் ஏற்றது.
ஜீரணமாவதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்பதால் வயதானவர்களும், திட உணவு ஆரம்பித்திற்கும் குழந்தைகளும் இரவில் இதனை சேர்க்கக்கூடாது. வேகவைத்து சாப்பிடுவதே நல்லது.

படித்ததில் பிடித்தது:

நற்பண்பு, தொழிலில் ஈடுபாடு, திட நம்பிக்கை, மரியாதை, பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இவை ஐந்தும் ஒருவருக்கு இருந்துவிட்டால் அவர் முறைசார் கல்வி பெற்றவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி அடைய முடியும்.

                                                            _(((())))_

வியாழன், 14 மே, 2015

வெந்தய இட்லி/தோசை




வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இதில் உள்ள மிதமான கசப்பு தன்மை குடலுக்கு நன்மை பயக்கும்.
பரீட்சை காலங்களில் குழந்தைகளுக்கு 1 ஸ்பூன் வெந்தயத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கொடுத்தால் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதனால் உண்டாகும் உடற்சூடு குறையும்.

இரவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை நன்கு கழுவிவிட்டு, சுத்தமான நீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

தோல் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இது ஒரு அருமருந்து.
இது மிகவும் குளிர்ச்சி என்பதால் சளித்தொல்லை இருப்பவர்கள் மிதமாக சூடு பண்ணி குடித்துக் கொள்ளலாம்.

நீரை வடிகட்டியபின் எஞ்சி இருக்கும் வெந்தயத்தை நன்கு மை போல் அரைத்து 1 தேக்கரண்டி தயிருடன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை இராது.
முடி நன்கு பளபளபுடன் இருக்கும். நன்கு செழித்து வளரும்.
இதுவும் சளித்தொல்லை இருப்பவர்களாவியின் மிதமாக சூடுபடுத்தி தயிர் சேர்க்காமல் தேய்க்கவும்.

சர்க்கரை  உள்ளவர்கள் வெந்தயத்தை உணவில் சேர்த்து வர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தய இட்லி தோசை செய்முறை:

புழுங்கல் அரிசி.......... 4 டம்ளர்

வெந்தயம்.........1/4 டம்ளர்

செய்முறை:

வெந்தயத்தை கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

அரிசியையும் நன்கு கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

கிரைண்டரில் முதலில் வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும். அவ்வப்பொழுது நீர் விட்டு அரைக்கவும். வெந்தயம் நன்கு அரைபட்டு பொது பொதுவென வந்த பிறகு எடுத்துவிட்டு, அரிசியைப் போட்டு அரைக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். பாத்திரத்தில் பாதியளவு மட்டுமே மாவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  
இரவு முழுதும் புளிக்க விட்டு, காலையில் இட்லிகளாக வார்க்கவும். (மாலையில் அரைத்தால் காலைவரை புளிக்க விடவும்). 

இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி சூடானவுடன், இட்லிதட்டில் துணிபோட்டு (நனைத்து பிழிந்து) அதில் இட்லிகளாக வார்க்கவும்.

15 நிமிடங்கள் கழித்து வெந்துவிட்டதா என்று கறிவேப்பிலை குச்சியால் குத்தி பார்த்து, மாவு ஒட்டாமல் இருந்தால் லேசாக நீர் தெளித்து இட்லிகளை எடுத்துவிடவேண்டும்.
மென்மையான இட்லி தயார்!!.  

இட்லிதுணி போட்டு எப்படி இட்லி சுடறதுனு தெரியாதவங்க  இங்கே சென்று தெரிஞ்சுக்கோங்க :)









மாவு புளித்து வந்த பிறகு கரண்டியினால் அள்ளும் பொழுது வெயிட்டே இல்லாமல் இருக்கும். உளுந்து சேர்த்த மாவு போல் வெண்மையாக இராது.
வெந்தய இட்லிக்கு பீர்க்கங்காய் சட்னி கூட பப்பாளி பழம்



குழந்தைகளுக்கு கொடுக்க ஏதுவாக மென்மையான தோசைகளாக வார்க்கலாம்!!

வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்க வல்லது!! வெந்தயத்தைப் பயன்படுத்தி உடலைப் பேணி பாதுகாப்போம்.

                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

வாழ்க்கை என்பது உடை ஒத்திகை பார்ப்பது போன்று அல்ல. வாழ்க்கை என்கிற இந்த ஆட்டத்தில் ஒரே ஒரு வாய்ப்பே நமக்கு இருக்கிறது. 
எதிர்காலத் தலைமுறைகளைப் பந்தய பணமாக வைத்தே இந்த ஆட்டத்தை நாம் ஆடுகிறோம்.


                                                            _((()))_

புதன், 13 மே, 2015

நெய் தயாரித்தல்

உன்னோட பெருமைய உலகமே பேசுதாமே!!

என்னப் பத்தியும் எதாச்சும் எடுத்து சொல்லேன்


கொக்குக்கும் வெண்ணைய்க்கும் என்ன சம்பந்தனு கேட்காதீங்க!! கொக்கு தலைல வெண்ணையே வெக்காம சமத்தா போட்டோவுக்கு நின்னாங்க!!


 நெய் வேவிக்கும் வித்தையை காணலாம் வாங்க!!

பாலை தயிர் ஆக்கி, அத்தயிரிலிருந்து வெண்ணைய் எடுத்து,
அவ்வெண்ணையை சுத்தமான வாணலியில் போட்டு, அடுப்பை மிகவும் குறைவாக எரியவிடவேண்டும். அதாங்க சிம் ல.
கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணைய் உருகி, மேலே நுரை தளும்ப ஆரம்பிக்கும்.

நுரை அடங்கி வரும் தருவாயில் முருங்கை கீரை (கொழுந்து) அல்லது கறிவேப்பிலை கொழுந்தினைப் போட்டு, 3 நிமிடங்கள் விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

நெய் வேகும் பொழுது கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. அதிக தீயில் வேகவிட்டாலோ, இல்லை நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, தீய்ந்து போவதோடு மட்டுமல்லாமல், எளிதில தீப்பற்றும் வாய்ப்புண்டு. கவனமாக செயல்பட வேண்டும். மிகவும் சிறிய பாத்திரத்தில் வைத்தும் வேகவிடக்கூடாது.



காய்ச்சும் போது கரண்டியினால் கலக்கவோ , மேலே நுரைத்து வருவதை அள்ளி எடுக்கவோ கூடாது.
நெய்யை வடித்த பிறகு அடியில் தேங்கியிருக்கும் நெய்யில் சாதம் போட்டு அல்லது கோதுமை மாவினை போட்டு கலந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

நான் பருப்பு சாதத்தை போட்டு பிசைந்து விட்டேன்.
 சுத்தமான பாத்திரத்தில், நெய்யை வடித்துக் கொள்ள வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமில்லை. சுத்தமான நெய் கெட்டுப்போகாது.


தக தகவென தங்கத்தை கரைத்தாற் போலமின்னுகிறது :))

தேவைக்கு இந்த நெய் ஜாடியில் வைத்துக்கொள்வது வழக்கம்.








ஆறியபின்பு இது போல துணிந்துவிடும்

இப்ப இங்கிருக்கிற தட்பவெப்ப நிலைக்கு காய்ச்சி 15 நிமிடத்திற்குள்ளாக இப்படி ஆகிவிட்டது.

நெய்யினால் உடல்நலக்குறைவு என்பது அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போதுதான் உண்டாகும்.
தினமும் உருக்கிய நெய்யை (1 தேக்கரண்டி) மதிய உணவில் உட்கொண்டு வந்தால் குடல் நோய்கள் அண்டாது.
குழந்தைகளுக்கு சாப்பிட ஆரம்பிக்கும் பருவத்தில் உப்பு பருப்பும் நெய்யும் கொடுப்பது வழக்கம்.
அசைவ உணவு உண்ணாதவர்களுக்கு மீனில் உள்ள ஒமேகா 3 இதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புள்ளதால், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட நெய்யை பயன்படுத்லாம்.
கண்பார்வைக்கும், நரம்பு கோளாறுகளுக்கும் நெய் ஒரு அருமருந்து.
சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் நெய்யை முக்கியமான இடத்தில் வைத்துள்ளன.

பசுவிலிருந்து பாலாகி தயிராகி வெண்ணைய்யாகி கடைசியில் நெய்யாக மாறிய விந்தை பலதையும் சிந்திக்க வைக்கிறது.

இத்தருணத்தில் கோமாதாவிற்கு நன்றியறிதலையும் செலுத்துவோம்.



                                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

பகட்டான பேச்சை நம்பி ஏமாந்து விடக்கூடாது. ஒரு போதும் அறிவு மயங்கிவிட அனுமதிக்க கூடாது.

கண்களை திறந்து உலகத்தைப் பாருங்கள். அப்போது இழிவானது என்று எந்த ஒரு பொருளும் உலகத்தில் இருப்பதாகத் தெரியாது.

குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள், கீழ்த்தரமான விஷயங்களைப் புறந்தள்ளுங்கள். வானத்தைக் காட்டிலும் பெரிதாக விரிவடையுங்கள்.

அரவிந்தர்.

                                                              _((()))_



குயிலே...குயிலே..!!


என்னடா இது குயில்னு தலைப்பு கொடுத்து காக்காவ போட்டிருக்கனேனு பார்க்கிறீங்களா? ஹைய்யா!! அப்ப நீங்களும் ஏமாந்து போனீங்களா??

நான் யார்? நான் யார்??
தண்ணி குடிக்கும் போதும் அதே யோசனையா இருக்கு

  நம்மள மட்டும் இந்த கடவுள் ஏந்தான் இப்படி படைச்சாரோ..காரணம் இல்லாமய இப்படி படைச்சிருப்பாரு..!! 

என்னை விட சின்னவங்களாம் கூடு கட்டி குடியேறுறாங்க..ஆனா எனக்கு மட்டும் இஞ்சினீர் மூளைய படைக்காம விட்டுட்டாரே..
நாந்தான் குயிலக்கா...

அவர போயி குயிலக்கா குயிலக்கானு கூப்புடறதை வன்மையா கண்டிக்கிறேன்.. வேணா குயிலண்ணேனு கூப்பிடுங்க..(ஹூம் இத தெரிஞ்சுக்க இத்தன நாள் ஆகிடுச்சு)
(குயிலக்கா போட்டோ எப்பவோ எடுத்தது, அதும் கண்ணாடிக்குள்ள இருந்து)

ஆமாங்க மேல கண்ணு ரெண்டும் தக தகனு அக்னி குண்டாட்டம் மின்னுகிறவருதான் ஆண்பால். அவர்தான் கூவூ....கூவூ னு கூவுறவுரு.

இந்த க்ரே கலர்ல புள்ளி வெச்ச உடையணிஞ்சவங்க அவுங்கூட்டு அம்மிணி.
இது தெரியாம இத்தன நாளா இருந்திருக்கேன். அம்மிணிக்கு அவ்வளவா குரல்வளம் இல்லையாம்.


இவங்களைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்க வேணும்னா இங்கே பறந்து செல்லவும்.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


படித்ததில் பிடித்தது.

வீண்பேச்சு பேசாதீர்கள். வாதம் செய்வதில் திறமை பெற்றவர்கள், தங்களுடைய தவறை உணர முடிவதில்லை. அவர்களின் திறமை பொய்மைக்கு முகமூடி மாட்டவே முயல்கின்றது.

அரவிந்தர்.

                                                           _()()()()_




புதன், 6 மே, 2015

இட்லிமாவு போண்டா



 இட்லிமாவு போண்டா இது ஒரு திடீர் பலகாரமாகும். இதனை செய்வது மிகவும் எளிது.

தேவையான பொருட்கள்:

இட்லிமாவு........2 கப்

அரிசிமாவு.....2 மேசைக்கரண்டி

கேரட் ......2

பெரியவெங்காயம்.......2

கறிவேப்பிலை.......4 இணுக்கு

சீரகம் .........1/2 மேசைக்கரண்டி

இஞ்சி......சிறுதுண்டு

பூண்டு.............4 பல்

மிளகாய் தூள்......2 தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)

உப்பு......தேவையான அளவு

கடலை எண்ணைய்.......பொரிப்பதற்கு



கேரட்டை துருவிக்கொள்ளவும்.

பெரியவெங்காயத்தை பொடியாக அரியவும்.

கறிவேப்பிலையை பொடியாக அரியவும்.

இஞ்சி, பூண்டை துருவிக்கொள்ளவும்.

இட்லிமாவுடன் அரிசி மாவை கலக்கவும்.


எண்ணைய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் மாவில் கலக்கவும்.

கலக்கிய கலவையை சிறு சிறு உருண்டைகளாக  காய்ந்த எண்ணையில் போட்டு பொரிக்கவும். எண்ணைய் சூடானவுடன் மிதமான தீயில் வைத்தே சுடவேண்டும்.
அப்பொழுதுதான் நன்கு உள்பக்கமும் வேகும். இல்லையேல் மேல்மாவு தீய்ந்தும் உள்பக்கம் பச்சையாகவும் இருக்கும். இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து எண்ணைய் வடிய வைக்கவேண்டும்.

 சுவையான இட்லிமாவு போண்டா தயார்.
இட்லிமாவு அரைத்தவுடன் சுட்டால் ருசி வராது.  ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டுவந்த பிறகே சுடவேண்டும்.
மற்ற மாவு போண்டா போல எண்ணையில் போட்டவுடன் , குதித்தெழுந்து வராது. வாணலியின் அடிப்பகுதியில் அப்பிக்கொள்ளும். மிதமாக கரண்டியால் எடுத்து மிதக்கவிடவேண்டும். 

இஞ்சி, பூண்டினை துருவி சேர்ப்பதால் நன்கு மணமாக இருக்கும். 

ஒண்ணா ரண்டா உடைத்த மிளகு சேர்த்து செய்தாலும் சுவை கூடுதலாக இருக்கும்.
 
பச்சைமிளகாயை பொடியாக அரிந்தோ அல்லது அரைத்தோ சேர்க்கலாம். 
பொடியாக நறுக்கிய மல்லிதழை ஒரு கைப்பிடி சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். 

                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை. நீ தான் உன் கோப தாபங்களால் எப்பொழுதும் அவரைக் காணமுடியாத படி கண்களை மூடிக்கொள்கிறாய்.

ஓஷோ.

                                                         _((()))_


திங்கள், 4 மே, 2015

கொள்ளு தோசை/ கொள்ளு இட்லி



"இளச்சவனுக்கு எள்ள கொடு, கொழுத்தவனுக்கு கொள்ள கொடு' என்பது பழமொழி.
கொள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைத்து உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வல்லது.
பொதுவா என்னிடம் நிறையப்பேர் கேட்டதுண்டு, இதென்னது குதிரைக்கு வைக்கிறத போய் சமையலுக்கு பயன்படுத்திக்கிட்டுனு.
குதரைக்கு ஓட்ஸ்க்கூடத்தான் வைக்கிறாங்க, ஆனா அதைய நாம் சாப்பிடறதில்லையா என்ன?

கொள்ளு உடல் உஷ்ணத்தை உண்டாக்ககூடியது அதுனால அளவா பயன்படுத்திட வேண்டும். எதையுமே அளவாத்தான் பயன்படுத்தனும் அப்படியிருக்க கொள்ளு மட்டும் விதிவிலக்காக முடியுமா?
(ஹீ ஹீ ரெம்பவே அறிவாளி ஆயிட்டமோனு தோணுது :))))

வாரத்தில் ஒருநாள் கொள்ளு சட்னியாகவோ, சுண்டலாகவோ, முளைகட்டியோ உணவில் சேர்ப்பது வழக்கம். கடந்த முறை உளுந்து சுத்தமாக தீர்ந்து விட கொள்ளு கண்ணில் பட்டு தோசையாக வெளிவந்துவிட்டது.

தேவையான பொருட்கள்:

அரிசி........1கிலோ

கொள்ளு......250 கிராம்

வெந்தயம்.......25 கிராம்

அரிசியையும் வெந்தயத்தையும் ஒன்றாக கழுவி ஊறவைக்கவேண்டும்.

கொள்ளை கல்லில்லாமல் அரித்து நன்கு கழுவி மூழ்கும் வரை நீர் விட்டு தனியாக ஊறவைக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 6 லிருந்து 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

கிரைண்டரில் தனித்தனியாக அரைத்து உப்பு போட்டு கரைத்து புளிக்க வைக்க வேன்டும். சாதாரணமாக இட்லிக்கு அரைக்கும் அதே முறைதான். கொள்ளு ஊறுவதற்கு சற்று நேரம் எடுப்பதினால் 8 மணிநேரம் ஊறவைக்கலாம்.

இட்லி, தோசை, பணியாரமாக சுட்டு எடுக்கலாம். அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமிக்க உணவு தயார்.

புதினா சட்னியுடன் கொள்ளு தோசை சுவை அலாதியாக இருந்தது.

முன்பு ஒரே ஒரு முறை உளுந்து தட்டுப்பாட்டின் காரணமாக செய்திருக்கிறேன். அதற்கு பிறகு இப்பொழுதுதான் கொள்ளு தோசை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.



இதே மாவை இட்லியாகவும் வார்த்தெடுக்கலாம்.  சிறுதானியம் சேர்க்காமல் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்த கொள்ளு இட்லி இது. உளுந்து சேர்க்கவில்லை. சாதா இட்லியைப் போன்றே கொள்ளு இட்லியும் பூ போல வந்தது. ஆனால் நிறத்தில் மல்லிகை போல் இல்லாமல் மகிழம்பூ போன்று இருந்தது.  பூண்டு தக்காளி சட்னியுடன் சுவையாக இருந்தது.

இதே முறையில் பாசிப்பயறு தோசையும் செய்யலாம்.

அரிசிக்கு பதிலாக சிறுதானியம் பயன்படுத்தினால் சுவையும் ஆரோக்கியமும் கூடும். பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் இதனை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்.

நான் கூட அரிசி பாதி, குதரவாலி அரிசி பாதி பயன்படுத்தியே இத்தோசை செய்தேன்.


                                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்யவேண்டிய வேலை "தட்டிக்கொடுப்பது மட்டும்தான்".

சுவாமி. விவேகானந்தர்.

                                                                _((()))_