திங்கள், 4 மே, 2015

கொள்ளு தோசை/ கொள்ளு இட்லி



"இளச்சவனுக்கு எள்ள கொடு, கொழுத்தவனுக்கு கொள்ள கொடு' என்பது பழமொழி.
கொள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைத்து உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வல்லது.
பொதுவா என்னிடம் நிறையப்பேர் கேட்டதுண்டு, இதென்னது குதிரைக்கு வைக்கிறத போய் சமையலுக்கு பயன்படுத்திக்கிட்டுனு.
குதரைக்கு ஓட்ஸ்க்கூடத்தான் வைக்கிறாங்க, ஆனா அதைய நாம் சாப்பிடறதில்லையா என்ன?

கொள்ளு உடல் உஷ்ணத்தை உண்டாக்ககூடியது அதுனால அளவா பயன்படுத்திட வேண்டும். எதையுமே அளவாத்தான் பயன்படுத்தனும் அப்படியிருக்க கொள்ளு மட்டும் விதிவிலக்காக முடியுமா?
(ஹீ ஹீ ரெம்பவே அறிவாளி ஆயிட்டமோனு தோணுது :))))

வாரத்தில் ஒருநாள் கொள்ளு சட்னியாகவோ, சுண்டலாகவோ, முளைகட்டியோ உணவில் சேர்ப்பது வழக்கம். கடந்த முறை உளுந்து சுத்தமாக தீர்ந்து விட கொள்ளு கண்ணில் பட்டு தோசையாக வெளிவந்துவிட்டது.

தேவையான பொருட்கள்:

அரிசி........1கிலோ

கொள்ளு......250 கிராம்

வெந்தயம்.......25 கிராம்

அரிசியையும் வெந்தயத்தையும் ஒன்றாக கழுவி ஊறவைக்கவேண்டும்.

கொள்ளை கல்லில்லாமல் அரித்து நன்கு கழுவி மூழ்கும் வரை நீர் விட்டு தனியாக ஊறவைக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 6 லிருந்து 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

கிரைண்டரில் தனித்தனியாக அரைத்து உப்பு போட்டு கரைத்து புளிக்க வைக்க வேன்டும். சாதாரணமாக இட்லிக்கு அரைக்கும் அதே முறைதான். கொள்ளு ஊறுவதற்கு சற்று நேரம் எடுப்பதினால் 8 மணிநேரம் ஊறவைக்கலாம்.

இட்லி, தோசை, பணியாரமாக சுட்டு எடுக்கலாம். அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமிக்க உணவு தயார்.

புதினா சட்னியுடன் கொள்ளு தோசை சுவை அலாதியாக இருந்தது.

முன்பு ஒரே ஒரு முறை உளுந்து தட்டுப்பாட்டின் காரணமாக செய்திருக்கிறேன். அதற்கு பிறகு இப்பொழுதுதான் கொள்ளு தோசை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.



இதே மாவை இட்லியாகவும் வார்த்தெடுக்கலாம்.  சிறுதானியம் சேர்க்காமல் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்த கொள்ளு இட்லி இது. உளுந்து சேர்க்கவில்லை. சாதா இட்லியைப் போன்றே கொள்ளு இட்லியும் பூ போல வந்தது. ஆனால் நிறத்தில் மல்லிகை போல் இல்லாமல் மகிழம்பூ போன்று இருந்தது.  பூண்டு தக்காளி சட்னியுடன் சுவையாக இருந்தது.

இதே முறையில் பாசிப்பயறு தோசையும் செய்யலாம்.

அரிசிக்கு பதிலாக சிறுதானியம் பயன்படுத்தினால் சுவையும் ஆரோக்கியமும் கூடும். பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் இதனை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்.

நான் கூட அரிசி பாதி, குதரவாலி அரிசி பாதி பயன்படுத்தியே இத்தோசை செய்தேன்.


                                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்யவேண்டிய வேலை "தட்டிக்கொடுப்பது மட்டும்தான்".

சுவாமி. விவேகானந்தர்.

                                                                _((()))_


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்