ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

நெல்லிக்காய்(கனி) சாம்பார்



வழக்கம் போல பெயர் சூட்டும்பொழுது 1008 சந்தேகம் மண்டையை குடைந்தது. நெல்லிக்கனிதானே ஏன் காய்? அப்ப புளியங்கனினு சொல்வதில்லையே, புளியங்காய்னுதானே சொல்றோம் என என் சந்தேகத்தை நானே தீர்த்துக்கொண்டு நெல்லிக்காய் சாம்பார் என்றே நாமகரணம் சூட்டிவிட்டேன்.

ஹீ ஹீ தேங்காய், தென்னம்பழம் ஜோக்...மனதில் ஒரு நிமிடம் தோன்றி மறையலாம். அதுக்கு நான் பொறுப்பல்ல :)))

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்    4

துவரம்பருப்பு               1கப்

தக்காளி            1

பச்சமிளகாய்           3

புளி                   சிறு உருண்டை( நெல்லிக்காய் அளவு)

சின்ன வெங்காயம் 15

கறிவேப்பிலை  2 இணுக்கு

மல்லி                 சிறிதளவு

சாம்பார் பொடி  1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள்      1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடலைஎண்ணெய், கடுகு,  கடலைபருப்பு

உப்பு                தேவையான அளவு.

செய்முறை:

பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.

சின்னவெங்காயத்தை தோலுரித்து குறுக்குவாட்டில் இரண்டாக வெட்டி வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கவும்.

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். கொட்டையை எடுத்துவிடவேண்டும்.

மிளகாயை அரிந்து விதைகளை எடுத்துவிடவும். வறமிளகாயும் பயன்படுத்தலாம்.

அடுப்பில் வாணலியை வைத்து நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.

பின்னர் நறுக்கிய நெல்லிக்காய் போட்டு வதக்கவும். 

ஓரளவு வதங்கியவுடன் புளிக்கரைசல், சாம்பார்பொடி

 உப்பு சேர்க்கவும்.

பின்னர் பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

எப்பொழுதுமே சாம்பாரை நன்கு கொதிக்க விடவேண்டும். அப்பொழுதுதான் நல்ல ருசி வரும். 

மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.



 புளி மற்ற சாம்பாரை விட மிகவும் குறைவாக சேர்த்தாலே போதும்.  சேர்க்காமலும் செய்யலாம். நெல்லிக்கனியின் புளிப்பு சுவைக்கேற்ப புளிசேர்க்க வேண்டும்.

இட்லி, தோசை, பணியாரம், சாதம்  ஆகியவற்றுக்கு ஏற்ற இணை இது.

நெல்லிக்காயின் பலன்கள் "உள்ளங்கை நெல்லிக்கனி" போல அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். வைட்டமின் சி சத்தினை ஏராளமாக கொண்டுள்ள இக்கனி கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. ஏழைகளின் ஆப்பிள்னு படிச்சிருப்போம். தினமும் ஒரு கனி உண்டுவர முதுமையை தள்ளிப்போடலாம்.

முதுமைனு சொல்லவும் இக்கதை ஞாபக் வருகிறது. இக்கதை அனைவரும் அறிந்ததே இருந்தாலும் இங்கு சேமித்து வைக்க ஆசைப்பட்டதின் விளைவாக...

மன்னர் அதியமானை காண ஒருநாள் ஔவையார் தகடூருக்கு வந்தார். ஔவையை அன்புமிளிர வரவேற்று உபசரித்த அதியமான், ஒரு அதிசய கனியை ஔவைக்கு உண்பதற்காக கொடுத்து அதை வற்புறுத்தி உண்ண வைக்கிறார்.

அதன் வித்யாசமான சுவை ஔவைக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அக்கனியைப் பற்றி அதியமானிடம் விசாரிக்கிறார் ஔவை.

அது ஒரு அற்புதகனி என்றும், இதனை உண்பவர்களை மரணம் தீண்டாது எனவும் கூறுகிறார் அதியமான்.

'இவ்வளவு பேறு பெற்ற இக்கனியை  நீயல்லவோ உண்டு நீண்ட நெடுநாள் வாழ்ந்து மக்களைப் பேணி பாதுக்காத்திருக்க வேண்டும். எதற்காக எனக்களித்தாய்? அதுவும் வயதான எனக்கு? என வினவுகிறார் ஔவை.

அதற்கு அதியமான், 'ஔவைபிராட்டியே! என் போன்ற ஒரு மன்னன் நீண்ட நெடுங்காலம் வாழ்வதைக் காட்டிலும், உமைப்போன்றதொரு தமிழ்ப்புலவர் நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்கு தொண்டு செய்வதே சாலச்சிறந்தது' என்று கூறுகிறார்.
அதியமானின் அன்பில் அகமகிழ்கிறார் ஔவை. 

இதில் நெல்லிக்கனியென்று இருக்கிறதே? அப்ப நெல்லிக்காய் அல்லவா? கனியா? கனியிருப்ப காய் கவர்ந்துவிட்டேனா?? மீண்டும் கேள்விகள் தொக்கி நிற்க பார்க்கிறதே!! ஐயகோ..!! இதென்ன சோதனை??


                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையெனில் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

சுவாமி. விவேகானந்தர்.

                                                             _((()))_. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்