வியாழன், 3 செப்டம்பர், 2015

அவல் கேசரி/ Poha kesari


அவல் உணவுகள் பெரும்பாலும் செய்வதுண்டு. ஆனால் முதன்முறையாக கேசரி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இக்கேசரியை sashiga kitchen வலைப்பூவிலிருந்து பார்த்து செய்தேன். நன்றிங்க மேனகா :)

 தேவையான பொருட்கள் :

அவல் ....1 கப்

சர்க்கரை......3/4 கப்

தண்ணீர்....4 கப்

குங்குமப்பூ....சிறிதளவு

ரோஸ் எசன்ஸ்....2 சொட்டு

ஏலக்காய்.....5

முந்திரி, திராட்சை...தேவையான அளவு

நெய்....3 மேசைக்கரண்டி

மஞ்சள்பொடி...ஒரு சிட்டிகை

செய்முறை:

அவலை வெறும் வாணலியில் லேசாக சூடாக்கவும்.

மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

பொடித்த அவலை வாணலியில் 1/2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி கலர் மாறாமல் வறுத்தெடுக்கவும்.

இன்னொரு வாணலியில் அரை மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்தெடுக்கவும்.

ஏலக்காயை தோல் நீக்கி, விதைகளை லேசாக வறுத்து பொடித்து வைக்கவும்.

வறுத்த அவலில் மெதுவாக நீர் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். மஞ்சள் பொடியை சேர்க்கவும்.

ஓரளவு கெட்டியான பதம் வந்தவுடன் சர்க்கரை போட்டு கிளறவும்.

பின்னர் குங்குமப்பூ, வறுத்த முந்திரி திராட்சையைப் போட்டு கிளறவும்.

பின்னர் ஏலக்காயை சேர்க்கவும். கூடவே ரோஸ் எசன்ஸ் விடவும்.

மீதி இருக்கும் நெய்யை விட்டு நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும்.








மிக விரைவில் செய்யக்கூடிய சுவையான அவல் கேசரி தயார்!.

சூடாக இருக்கும் போது இளகிய நிலையில் இருக்கும். ஆற ஆற கெட்டியான பதத்திற்கு வந்துவிடும்.

                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

 பிறர் முன் பேசும் வார்த்தையிலும் செயலிலும் எச்சரிக்கையாய் இரு, உன்னை பிறர் எடை போட்டுக் கூறுபவை அவையே.

                                                                 _((()))_

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

தினை தக்காளி சாதம்

தினை தக்காளி சாதம் சுவையும், சத்தும் நிறைந்த எளியவகை சமையல்!

தேவையான பொருட்கள்:

தினை அரிசி.....1 கப்

தக்காளி...4

பெரியவெங்காயம்...2

இஞ்சி...ஒரு அங்குல துண்டு

பூண்டு...10 பல்

கறிவேப்பிலை...2 இணுக்கு

மல்லிதழை கைப்பிடியளவு

வறமிளகாய்....2

சீரகம்...1/2 மேசைக்கரண்டி

உப்பு...தேவையான அளவு

மஞ்சள் பொடி...சிறிது

எண்ணைய் தாளிக்க







தினை அரிசியை நன்கு கழுவி 1க்கு 3 என்ற விகிதத்தில் நீர் விட்டு குக்கரில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும்.

பெரியவெங்காயத்தை சன்னமாக நீளமாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வறமிளகாயை பொடிப்பொடியாக கிள்ளி, விதைகளை அகற்றிவைக்கவும்.
இஞ்சி, பூண்டினை தோலுரித்து நன்கு தட்டி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளியைப் போட்டு குழைய வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்பு இக்கலவையை குக்கரில் வெந்த தினை சாதத்துடன் போட்டு நன்கு கிளறவும். மல்லி இலை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
மல்லி இலைக்கு பதிலாக புதினாவும் சேர்க்கலாம். நான் புதினா சேர்த்துதான் சமைத்தேன்.


சுவையான தினை தக்காளி சாதம் தயார்!

                                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

சுவாமி. விவேகானந்தர்

                                                             _((()))_ 

பீட்ரூட் வடை/ Beetroot vadai





காய் சீவியில் துருவினாற் போல் சீவி ஒரு முறை செய்த பொழுது எடுத்த படம் :) இது போல் சீவினால் சிறிது நீர் விட்டாற் போல் ஆகிவிடுகிறது. அதனால் அரிசி மாவு அல்லது ரவை ஒரு ஸ்பூன் சேர்த்தால், அதிகப்படியான நீரை உறிஞ்சி வடை மொறு மொறுப்பாக வருகின்றது.


பீட்ரூட் வடை செய்வது மிகவும் எளிது.  ஒரே வரியில் சொல்வதானால் பருப்பு வடைக்கு அரைப்பது போல் அரைத்து, பீட்ரூட்டை காய்சீவியில் சீவிப்போட்டு பிசைந்து, காய்ந்த எண்ணையில் வடையாக தட்டிப் போட்டு எடுக்க வேண்டியதுதான்.
பருப்பு வடை எப்படிச் செய்வதுனு தெரியாதவர்களுக்கு குறிப்பு கீழே காத்துக்கிட்டு இருக்கு.

தேவையான பொருட்கள்:

வடைப்பருப்பு (பட்டுப்பருப்பு)....1/4 கிலோ

சின்னவெங்காயம்....150 கிராம்

மல்லிதழை ...ஒரு கைப்பிடியளவு

பச்சமிளகாய்...2 (விரும்பினால்)

கறிவேப்பிலை...2 இணுக்கு

பீட்ரூட்.....1

உப்பு...தேவையான அளவு

எண்ணைய்...பொரிப்பதற்கு

அரைக்க:

வறமிளகாய்...5

சோம்பு....1/4 மேசைக்கரண்டி

இஞ்சி....சிறுதுண்டு

பூண்டு 3 பல்

கறிவேப்பிலை...1 இணுக்கு

செய்முறை:

வடைப்பருப்பினை நன்கு கழுவி 3 மணிநேரம் ஊறவைக்கவும். கூடவே வறமிளகாயையும் சேர்த்து ஊறவைக்கலாம். நான் தனியாகத்தான் போட்டு அரைத்தேன்.

ஊறிய வடைப்பருப்பினை சுத்தமாக தண்ணீரை வடித்து ( சிறு அளவிலான ஊறிய பருப்பினை தனியாக எடுத்து வைக்கவும்)அரைக்க வேண்டியவற்றைனை சேர்த்து அரைக்கவும்.

சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும்.
பச்சமிளகாயை கழுவி பொடிபொடியாக நறுக்கி விதைகளை எடுத்துவிட்டு வைக்கவும்.

பீட்ரூட்டை தோல் சீவிவிட்டு, காய்சீவியினால் சீவிவைக்கவும்.

கறிவேப்பிலையை நன்கு கழுவிவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

மல்லி இலையை தண்ணீரில் கழுவி, மிதக்கும் அளவு நீர்விட்டு ஐந்து நிமிடம் கழித்து எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.

அனைத்தையும் அரைத்த விழுதுடன் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.. ஒரு துளிகூட நீர் சேர்க்கக்கூடாது. (பின்னையும் பருப்புலகூட ஒரு சொட்டு தண்ணி இருக்கப்படாது, பீ கேர்புல்)

வடச்சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணைய் ஊற்றவும். எண்ணைய் காய்ந்தவுடன், சிறு அளவு போட்டுப்பார்த்து காய்ந்திருப்பின் பிடித்த உருண்டைகளை வடையாக தட்டிப்போட்டு, பொன்நிறமானவுடன் எடுக்கவும்.









சூடான பீட்ரூட் வடை தயார்! மாலை நேரத்தில் டீயுடன் பரிமாறலாம். மதியவேளை விருந்துக்கும் ஏற்றதொரு பலகாரம்.

குறிப்பு:
வடச்சட்டியில் எப்பொழுதுமே நீர் இல்லாமல் காய்ந்திரும் போதுதான் எண்ணைய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். இல்லையேல் எண்ணைய் சடிபுடினு வெடிச்சு தெரிக்கும். அதனால் சட்டியை அடுப்பிலேற்றி சூடானவுடன் நீர் திவாலைகள் ஏதுமில்லையென நிச்சயமாக தெரிந்த பிறகே எண்ணைய் ஊற்றுதல் வேண்டும்.

பருப்பினை சரியாக வடிக்காமலோ, தெரியாமல் நீர் இருந்தாலோ, வடை எண்ணைய் குடித்துவிடும். அவ்வாறு எதேசையாக நேருமாயின் அரிசி மாவு சிறிது சேர்த்து பிசைந்து வடைதட்டினால் எச்சா இருக்கும் தண்ணிய அரிசி மா இழுத்துக்கும்.

நேரமே பருப்பு  அரச்சுவெக்க வேண்டிய நிலமை என்றால், உடனடியால வெங்காயத்தைச் சேர்க்காமல் சுடும் நேரத்திற்கு சேர்த்தால், நீர்த்துப் போகாமல் மொறு மொறுப்பான வடை கிடைக்கும். சின்ன வெங்காயம்னாக் கூட பரவாயில்ல, பெரிய வெங்காயம்னா போட்ட கொஞ்ச நேரத்திலயே நீர்க்க ஆரம்பிச்சிடும்!

அதே போல் சூடான வடையை மூடி வைத்தால் வடை நமுத்து போகும். ஏதேனும் வலைக்கூடை இருந்து மூடி வைத்தால் கூடுதல் நேரம் மொறு மொறுப்பு இருக்கும்.
                                                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

மற்றவரிடம் அன்பு, பழிபாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறருக்கும் வழ்ங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முகதாட்சண்யம், உணமை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

                                                                     _((()))_ 


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பாகற்காய் பொரியல்




பாகற்காய் பொரியல் இந்த முறையில் செய்தால் கசப்பு குறைவாகவும், மிகுந்த ருசியாகவும் இருக்கும். செய்முறையும் மிகவும் எளிது.
பாகற்காயை வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கவும். முடிந்த வரை மெல்லிசாக நறுக்கிக் கொள்ளவும்.


அரிந்த துண்டுகளை தயிர்விட்டு நீர்க்க கரைத்த உப்பு நீரில் போட்டு வைக்கவும்.

சின்ன வெங்காயம் 10 எடுத்து தோல் நீக்கி, குறுக்குவாட்டில் துண்டுகளாக நறுக்கவும். வறமிளகாய் ஒன்று பொடியாக கிள்ளி சேர்க்கவும்.


வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி, சீரகம் போட்டு பொரியவிட்டு, அரிந்து வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். கலர் மாறியவுடன், நீரில் இருக்கும் பாகற்காயை ஒட்ட நீரினை வடித்து சேர்க்கவும்.
உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்தூள் சேர்க்கவும்.  உப்பு நீரில் போட்டதால் உப்பு கவனமாக போடவும்.


 மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
 காய் நன்கு வெந்து சுருள வரும் தறுவாயில், வறுத்த வேர்க்கடலையை பொடித்து சேர்க்கவும். கூட பொடித்து வைத்திருக்கும் மிளகினையும் தூவி நன்கு கிளறி இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
சுவையான வேர்க்கடலை ருசியுடன் கூடிய பாகற்காய் பொரியல் தயார். தயிர்சாதம் மற்றும் கிளறின சாத வகைகளுக்கு மிகவும் ஏற்றது.

தேவையான பொருட்கள்:

பாகற்காய்....2

சின்னவெங்காயம்.. 10

வறமிளகாய்..1

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை...1 மேசைக்கரண்டி

சாம்பார் பொடி...1/2 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள்...1/2 தேக்கரண்டி

மிளகு...10 (லேசாக வறுத்து பொடிக்கவும்)

சீரகம்...1/2 மேசைக்கரண்டி

எண்ணைய்...தாளிக்க

உப்பு..தேவையான அளவு

குறிப்பு:

உப்பு நீரில் போடுவதால் பாகற்காயின் கசப்பு தன்மை குறைந்து காணப்படும்.
ஒரு தக்காளி சேர்த்து குழைய வதக்கி பாகற்காயை சேர்த்தும் செய்யலாம்.
காரம் அதிகம் விரும்புவோர் மிளகாய் பொடி சேர்க்கலாம்.

                                                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

அதிகமாய் பேசினால், அமைதியை இழப்பாய்..
ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்..
வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்..
கோபமாக பேசினால், குணத்தை இழப்பாய்..
வெட்டியாய்ப் பேசினால், வேலையை இழப்பாய்..
வெகு நேரம் பேசினால், பெயரை இழப்பாய்..
பெருமையாகப் பேசினால், ஆணடவனின் அன்பை இழப்பாய்..
 ---சுவாமி. விவேகானந்தர்   
                                                                      _(((())))_ 

பீர்க்கங்காய் துவையல்


பீர்க்கங்காய் மிகுந்த நார்ச்சத்து நிரம்பியது. அடிக்கடி இதனை உணவில் சேர்த்து வர மலச்சிக்கல் நீங்கும். மேல் தோலினை வைத்தும் சட்னி செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை முயற்சித்தது இல்லை. முழுகாயையும் மேலே இருக்கும் தோலினை மிக லேசாக சீவிவிட்டு இது போல் துவையல்தான் அடிக்கடி செய்வதுண்டு. சுவை அலாதியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய்....1 பெரியது (இளம் காயாக பார்த்து வாங்கவும்)

சின்ன வெங்காயம்...15

வறமிளகாய்....2

கறிவேப்பிலை...2 இணுக்கு

உப்பு....தேவையான அளவு

மஞ்சள் தூள்....1/2 தேக்கரண்டி

 தாளிக்க:

 சீரகம்.....1 மேசைக்கரண்டி

கடுகு, கடலைப்பருப்பு , கடலெண்ணய்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி கடுகு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.

பின்னர் இரண்டாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வறமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் நறுக்கிய பீர்க்கங்காயைப் போட்டு நன்கு வதக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூடிவைக்கவும்.
தீ மிதமாக இருக்கவும்.

காய் நீர் விட்டு வேக ஆரம்பிக்கும், மீண்டும் கிளறிவிட்டு அரை டம்ளர் நீர்விட்டு மூடி வைக்கவும்.
மேலும் 10 நிமிடங்கள் வதக்கி, ஆறவிடவும். காய் வேகாமலிருந்தால் கூட சில நிமிடங்கள் வேகவைக்கவும்.

வேறு பாத்திரத்திற்கு மாற்றி, ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.

சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்! சூடான இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.


குறிப்பு:

புளிப்பு சுவை விரும்புவோர் சிறிது தனியாவை தாளிக்கும் போது போட்டு, அரைக்கும் போது சிறு நெல்லிக்காய் அளவு புளி சேர்க்கலாம். அப்படி இல்லையெனில் வதக்கும் போது ஒரு சிறு தக்காளி சேர்த்தும் வதக்கி அரைக்கலாம்.

                                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என உணரும் சமயத்தில் புத்திசாலி ஆகின்றான். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.

டாக்டர். A.P.J.அப்துல்கலாம்

                                                       _((()))_ 

பச்சைப்பயறு தோசை


பச்சைப்பயறு தோசை, மிகவும் எளிதாகவும், விரைவாகவும் செய்துவிடக்கூடிய ஒன்றாகும்.
தோசைமாவு போல புளிக்க வைக்கவேண்டியதில்லை. உடனடியாக தோசை வார்க்கலாம்.
இட்லி மாவு இல்லேனு மனமொடிய தேவையில்லை.

தேவையான பொருட்கள்:

அரிசி .....4 கப்

பச்சைப்பயறு....1 கப்

வெந்தயம்.....1 தேக்கரண்டி

அரிசியையும்,  பச்சைப்பயறு, வெந்தயம்  மூன்றினையும் நன்கு கழுவி மூழ்கும் வரை நீர் விட்டு ஊறவைக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேரங்களாவது ஊறவைக்க வேண்டும்.



கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். கூடவே தேவையான அளவு கல் உப்பு போடவும்.
அரைத்த மாவினை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். தேவையான அளவு நீர் விட்டு கரைக்கவும். சாதாரணமாக தோசை மாவு பதத்தில் இருந்தாலே போதுமானது.
தோசைக்கல்லை காயவைத்து, மெல்லிய தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
வெங்காய சட்னியுடன் பச்சைப்பயறு தோசை சாப்பிட்டு மகிழ்ந்தோம். சுவையும் சத்தும் நிரம்பிய பச்சைப்பயறு தோசை நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். தைரியமாக முயற்சிக்கலாம்.

                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

அழும் போது தனிமையில் அழு,
சிரிக்கும் போது நண்பர்களுடன் சிரி,
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்..
கவிஞர். கண்ணதாசன் 

                                                                     _((()))_ 

சனி, 22 ஆகஸ்ட், 2015

ப்ரெட் உருளைக்கிழங்கு போண்டா/ Bread Potato Bonda






மிகவும் எளிதான செய்முறையைக் கொண்டதுதான் ப்ரெட் உருளைக்கிழங்கு போண்டா. உள்ளே காரமும், மேலே இனிப்பும் கொண்ட ப்ரெட் உருளை போண்டா செய்முறையைப் பார்ப்போம்.
வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே மிக விரைவாக மாலை நேர சிற்றுண்டியாக செய்து அசத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:

ப்ரெட்..........8 துண்டுகள் (எட்டு போண்டா வரும், எண்ணிக்கைக்கேற்ப கூடக் குறைய எடுத்துக் கொள்ளலாம்)

உருளைக்கிழங்கு....2 பெரியது

பெரியவெங்காயம்....1 பெரியது

பச்சை மிளகாய்....2

மிளகுப்பொடி.......1/2 மேசைக்கரண்டி

கரம்மசாலாபொடி....1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்.... காரத்திற்கேற்ப

உப்பு ....தேவையான அளவு

பூண்டு.........5 பற்கள்

மஞ்சள் தூள்....சிறிதளவு

கறிவேப்பிலை .... 2 இணுக்கு

மல்லி இலை....சிறிதளவு

கடலெண்ணைய்....பொரிப்பதற்கு



உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாய் (விதைகளை அகற்றைவிடவும்),கறிவேப்பிலை, மல்லி இலையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

பூண்டினை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் சோம்பு தாளித்து, பெரிய வெங்காயம் கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறத்துவங்கியதும், உருளைகிழங்கைப்போட்டு வதக்கவும்.
தூள் வகைகள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பை நிறுத்தவும்.

கைபொறுக்கும் சூடு வந்தவுடன் சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நீரை விட்டு வைக்கவும். ப்ரெட்  துண்டு ஒன்றை எடுத்து சட்டென நீரில் நனைத்து, அதனுள் உருளைக்கிழங்கௌ உருண்டையை வைத்து நன்கு பிழிந்த்தாற் போல உருண்டையாக உருட்டவும்.
இதே போல் அனைத்து ப்ரெட் துண்டுகளையும் செய்து வைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி, சூடானவுடன்  சிறு துண்டு உருளை மசாலாவை போட்டு எண்ணைய் காய்ந்து விட்டதா என சோதித்து, இந்த உருண்டைகள் இரண்டினைப் போட்டு  பொரித்தெடுக்கவும்.

இரண்டு பக்கமும் பொன்நிறமாக வெந்தவுடன் எடுத்துஎண்ணைய் உறிஞ்சும் காகிதத்தில் வைக்கவும். அதிகப்படியான எண்ணைய் இருந்தால் பேப்பர் உறிஞ்சிவிடும். ஆனால் இதில் ஒரு அழகு என்னவென்றால், எண்ணைய் நன்கு காய்ந்து சரியான நேரத்தில் போட்டு எடுத்தால், ஒரு துளி கூட போண்டா எண்ணையே குடிப்பதில்லை.



பிடித்த சட்னி அல்லது சாஸுடன் பாரிமாறலாம்.
விடுமுறை நேரத்தில் செய்ததால் நான் சட்னி அரைக்கும் வேகத்திற்குள் போண்டா தீந்து போச்சு என்பதால் சட்னியுடன் பரிமாறும் யோகத்தை இந்த போண்டா பெறவில்லை என்பதை சிரம்தாழ்த்தி தெரிவிச்சிக்கிறேன்.

ச்சோ அப்பிடியேவும் ச்சாப்புடலாம் என்ற அரிய விசியத்தை இதன் மூலம் யாவரும் அறிஞ்சிருப்பீங்கனு நம்பிக்கிட்டு, இந்த போண்டாக் கதைய இத்துடன் நிறைவு செய்கிறேன்.

குறிப்பு:

ப்ரெட் துண்டினை நீரில் நனைத்தவுடன் விரைவாக எடுக்கவில்லையெனில், அதிகப்படியான நீரை உறிஞ்சி உருண்டை பிடிக்கும் பொழுது உருளை கலவை வெளியே வந்துவிடும்.

கிழங்குடன் நமக்கு பிடித்தமான பட்டாணி, கேரட், கோஸ் போன்றவற்றையும் சேர்த்து வதக்கி செய்யலாம்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டும் வதக்கி செய்யலாம். 

                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

குறை இல்லாத மனிதன் இல்லை, அதைக் குறைக்க தெரியாதவன் "மனிதனே" இல்லை.
  
புத்தர்

                                                                _((()))_