மிகவும் எளிதான செய்முறையைக் கொண்டதுதான் ப்ரெட் உருளைக்கிழங்கு போண்டா. உள்ளே காரமும், மேலே இனிப்பும் கொண்ட ப்ரெட் உருளை போண்டா செய்முறையைப் பார்ப்போம்.
வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே மிக விரைவாக மாலை நேர சிற்றுண்டியாக செய்து அசத்தி விடலாம்.
தேவையான பொருட்கள்:
ப்ரெட்..........8 துண்டுகள் (எட்டு போண்டா வரும், எண்ணிக்கைக்கேற்ப கூடக் குறைய எடுத்துக் கொள்ளலாம்)
உருளைக்கிழங்கு....2 பெரியது
பெரியவெங்காயம்....1 பெரியது
பச்சை மிளகாய்....2
மிளகுப்பொடி.......1/2 மேசைக்கரண்டி
கரம்மசாலாபொடி....1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்.... காரத்திற்கேற்ப
உப்பு ....தேவையான அளவு
பூண்டு.........5 பற்கள்
மஞ்சள் தூள்....சிறிதளவு
கறிவேப்பிலை .... 2 இணுக்கு
மல்லி இலை....சிறிதளவு
கடலெண்ணைய்....பொரிப்பதற்கு
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாய் (விதைகளை அகற்றைவிடவும்),கறிவேப்பிலை, மல்லி இலையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பூண்டினை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் சோம்பு தாளித்து, பெரிய வெங்காயம் கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறத்துவங்கியதும், உருளைகிழங்கைப்போட்டு வதக்கவும்.
தூள் வகைகள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பை நிறுத்தவும்.
கைபொறுக்கும் சூடு வந்தவுடன் சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நீரை விட்டு வைக்கவும். ப்ரெட் துண்டு ஒன்றை எடுத்து சட்டென நீரில் நனைத்து, அதனுள் உருளைக்கிழங்கௌ உருண்டையை வைத்து நன்கு பிழிந்த்தாற் போல உருண்டையாக உருட்டவும்.
இதே போல் அனைத்து ப்ரெட் துண்டுகளையும் செய்து வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி, சூடானவுடன் சிறு துண்டு உருளை மசாலாவை போட்டு எண்ணைய் காய்ந்து விட்டதா என சோதித்து, இந்த உருண்டைகள் இரண்டினைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இரண்டு பக்கமும் பொன்நிறமாக வெந்தவுடன் எடுத்துஎண்ணைய் உறிஞ்சும் காகிதத்தில் வைக்கவும். அதிகப்படியான எண்ணைய் இருந்தால் பேப்பர் உறிஞ்சிவிடும். ஆனால் இதில் ஒரு அழகு என்னவென்றால், எண்ணைய் நன்கு காய்ந்து சரியான நேரத்தில் போட்டு எடுத்தால், ஒரு துளி கூட போண்டா எண்ணையே குடிப்பதில்லை.
பிடித்த சட்னி அல்லது சாஸுடன் பாரிமாறலாம்.
விடுமுறை நேரத்தில் செய்ததால் நான் சட்னி அரைக்கும் வேகத்திற்குள் போண்டா தீந்து போச்சு என்பதால் சட்னியுடன் பரிமாறும் யோகத்தை இந்த போண்டா பெறவில்லை என்பதை சிரம்தாழ்த்தி தெரிவிச்சிக்கிறேன்.
ச்சோ அப்பிடியேவும் ச்சாப்புடலாம் என்ற அரிய விசியத்தை இதன் மூலம் யாவரும் அறிஞ்சிருப்பீங்கனு நம்பிக்கிட்டு, இந்த போண்டாக் கதைய இத்துடன் நிறைவு செய்கிறேன்.
குறிப்பு:
ப்ரெட் துண்டினை நீரில் நனைத்தவுடன் விரைவாக எடுக்கவில்லையெனில், அதிகப்படியான நீரை உறிஞ்சி உருண்டை பிடிக்கும் பொழுது உருளை கலவை வெளியே வந்துவிடும்.
கிழங்குடன் நமக்கு பிடித்தமான பட்டாணி, கேரட், கோஸ் போன்றவற்றையும் சேர்த்து வதக்கி செய்யலாம்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டும் வதக்கி செய்யலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
குறை இல்லாத மனிதன் இல்லை, அதைக் குறைக்க தெரியாதவன் "மனிதனே" இல்லை.
புத்தர்
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்