பீர்க்கங்காய் மிகுந்த நார்ச்சத்து நிரம்பியது. அடிக்கடி இதனை உணவில் சேர்த்து வர மலச்சிக்கல் நீங்கும். மேல் தோலினை வைத்தும் சட்னி செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை முயற்சித்தது இல்லை. முழுகாயையும் மேலே இருக்கும் தோலினை மிக லேசாக சீவிவிட்டு இது போல் துவையல்தான் அடிக்கடி செய்வதுண்டு. சுவை அலாதியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய்....1 பெரியது (இளம் காயாக பார்த்து வாங்கவும்)
சின்ன வெங்காயம்...15
வறமிளகாய்....2
கறிவேப்பிலை...2 இணுக்கு
உப்பு....தேவையான அளவு
மஞ்சள் தூள்....1/2 தேக்கரண்டி
தாளிக்க:
சீரகம்.....1 மேசைக்கரண்டி
கடுகு, கடலைப்பருப்பு , கடலெண்ணய்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி கடுகு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.
பின்னர் இரண்டாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வறமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் நறுக்கிய பீர்க்கங்காயைப் போட்டு நன்கு வதக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூடிவைக்கவும்.
தீ மிதமாக இருக்கவும்.
காய் நீர் விட்டு வேக ஆரம்பிக்கும், மீண்டும் கிளறிவிட்டு அரை டம்ளர் நீர்விட்டு மூடி வைக்கவும்.
மேலும் 10 நிமிடங்கள் வதக்கி, ஆறவிடவும். காய் வேகாமலிருந்தால் கூட சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
வேறு பாத்திரத்திற்கு மாற்றி, ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.
சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார்! சூடான இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு:
புளிப்பு சுவை விரும்புவோர் சிறிது தனியாவை தாளிக்கும் போது போட்டு, அரைக்கும் போது சிறு நெல்லிக்காய் அளவு புளி சேர்க்கலாம். அப்படி இல்லையெனில் வதக்கும் போது ஒரு சிறு தக்காளி சேர்த்தும் வதக்கி அரைக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என உணரும் சமயத்தில் புத்திசாலி ஆகின்றான். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
டாக்டர். A.P.J.அப்துல்கலாம்
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்