பீட்ரூட் வடை செய்வது மிகவும் எளிது. ஒரே வரியில் சொல்வதானால் பருப்பு வடைக்கு அரைப்பது போல் அரைத்து, பீட்ரூட்டை காய்சீவியில் சீவிப்போட்டு பிசைந்து, காய்ந்த எண்ணையில் வடையாக தட்டிப் போட்டு எடுக்க வேண்டியதுதான்.
பருப்பு வடை எப்படிச் செய்வதுனு தெரியாதவர்களுக்கு குறிப்பு கீழே காத்துக்கிட்டு இருக்கு.
தேவையான பொருட்கள்:
வடைப்பருப்பு (பட்டுப்பருப்பு)....1/4 கிலோ
சின்னவெங்காயம்....150 கிராம்
மல்லிதழை ...ஒரு கைப்பிடியளவு
பச்சமிளகாய்...2 (விரும்பினால்)
கறிவேப்பிலை...2 இணுக்கு
பீட்ரூட்.....1
உப்பு...தேவையான அளவு
எண்ணைய்...பொரிப்பதற்கு
அரைக்க:
வறமிளகாய்...5
சோம்பு....1/4 மேசைக்கரண்டி
இஞ்சி....சிறுதுண்டு
பூண்டு 3 பல்
கறிவேப்பிலை...1 இணுக்கு
செய்முறை:
வடைப்பருப்பினை நன்கு கழுவி 3 மணிநேரம் ஊறவைக்கவும். கூடவே வறமிளகாயையும் சேர்த்து ஊறவைக்கலாம். நான் தனியாகத்தான் போட்டு அரைத்தேன்.
ஊறிய வடைப்பருப்பினை சுத்தமாக தண்ணீரை வடித்து ( சிறு அளவிலான ஊறிய பருப்பினை தனியாக எடுத்து வைக்கவும்)அரைக்க வேண்டியவற்றைனை சேர்த்து அரைக்கவும்.
சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும்.
பச்சமிளகாயை கழுவி பொடிபொடியாக நறுக்கி விதைகளை எடுத்துவிட்டு வைக்கவும்.
பீட்ரூட்டை தோல் சீவிவிட்டு, காய்சீவியினால் சீவிவைக்கவும்.
கறிவேப்பிலையை நன்கு கழுவிவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.
மல்லி இலையை தண்ணீரில் கழுவி, மிதக்கும் அளவு நீர்விட்டு ஐந்து நிமிடம் கழித்து எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
அனைத்தையும் அரைத்த விழுதுடன் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.. ஒரு துளிகூட நீர் சேர்க்கக்கூடாது. (பின்னையும் பருப்புலகூட ஒரு சொட்டு தண்ணி இருக்கப்படாது, பீ கேர்புல்)
வடச்சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் எண்ணைய் ஊற்றவும். எண்ணைய் காய்ந்தவுடன், சிறு அளவு போட்டுப்பார்த்து காய்ந்திருப்பின் பிடித்த உருண்டைகளை வடையாக தட்டிப்போட்டு, பொன்நிறமானவுடன் எடுக்கவும்.
சூடான பீட்ரூட் வடை தயார்! மாலை நேரத்தில் டீயுடன் பரிமாறலாம். மதியவேளை விருந்துக்கும் ஏற்றதொரு பலகாரம்.
குறிப்பு:
வடச்சட்டியில் எப்பொழுதுமே நீர் இல்லாமல் காய்ந்திரும் போதுதான் எண்ணைய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். இல்லையேல் எண்ணைய் சடிபுடினு வெடிச்சு தெரிக்கும். அதனால் சட்டியை அடுப்பிலேற்றி சூடானவுடன் நீர் திவாலைகள் ஏதுமில்லையென நிச்சயமாக தெரிந்த பிறகே எண்ணைய் ஊற்றுதல் வேண்டும்.
பருப்பினை சரியாக வடிக்காமலோ, தெரியாமல் நீர் இருந்தாலோ, வடை எண்ணைய் குடித்துவிடும். அவ்வாறு எதேசையாக நேருமாயின் அரிசி மாவு சிறிது சேர்த்து பிசைந்து வடைதட்டினால் எச்சா இருக்கும் தண்ணிய அரிசி மா இழுத்துக்கும்.
நேரமே பருப்பு அரச்சுவெக்க வேண்டிய நிலமை என்றால், உடனடியால வெங்காயத்தைச் சேர்க்காமல் சுடும் நேரத்திற்கு சேர்த்தால், நீர்த்துப் போகாமல் மொறு மொறுப்பான வடை கிடைக்கும். சின்ன வெங்காயம்னாக் கூட பரவாயில்ல, பெரிய வெங்காயம்னா போட்ட கொஞ்ச நேரத்திலயே நீர்க்க ஆரம்பிச்சிடும்!
அதே போல் சூடான வடையை மூடி வைத்தால் வடை நமுத்து போகும். ஏதேனும் வலைக்கூடை இருந்து மூடி வைத்தால் கூடுதல் நேரம் மொறு மொறுப்பு இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
மற்றவரிடம் அன்பு, பழிபாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறருக்கும் வழ்ங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முகதாட்சண்யம், உணமை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்