சனி, 31 ஜனவரி, 2015

தயிர் பச்சடி/ ஆனியன் ரெய்த்தா


தயிர்ல எது செய்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். வெறும் தயிர் சாதம் மட்டுமே இருந்தாலும் போதும் எனக்கு. அவ்வளவு தயிர் ப்ரியை நான்.

தயிர் பச்சடிக்கு தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்...........2

புதினா.........10இலைகள்

தக்காளி..........1சிறியது

உப்பு............தேவைக்கு

செய்முறை:

வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கவும். தடிமனாக இல்லாதிருப்பது நல்லது. சன்னமாக அரிந்த வெங்காயத்தை நீரில் போட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் காரத்தன்மை வெளியேறி பச்சையாக சாப்பிட ஏதுவாக இருக்கும்.

தக்காளியை இரண்டாக வெட்டி உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, நீளவாக்கில் மிகவும் சன்னமாக அரிந்து கொள்ளவேண்டும்.

புதினா இலைகளை நன்கு அலசிக் கொள்ளவேண்டும்.

இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு தயிர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கிவிடவேண்டும்.

ப்ரியாணி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.





                                                    ()()()()()()()()()()()()()()()()()

வெள்ளி, 30 ஜனவரி, 2015

மேத்தி வெஜிடபுள் ப்ரியாணி


வெந்தயக்கீரை ப்ரியாணி

வெந்தயக்கீரையில் வெஜ் ப்ரியாணி செய்தால் எப்படி இருக்கும் என்ற சோதனை முயற்சி இது. ஆரம்பிக்கும் போது கொஞ்சம் அல்ல நிறையவே யோசனையாக இருந்தது. கசப்பு சுவை இருக்குமோ என்று.
ஆனால் கடைசியில் ரொம்பவே சுவை கூடுதலாக இருந்தது.
அப்புறம் என்ன இனிமேல் எந்த ப்ரியாணினாலும் கண்டிப்பாக வெந்தயக்கீரையும் இடம்பிடிக்கத்தான் போகிறது.

இந்த ப்ரியாணி சமைக்கும் போது எழுந்த வாசனை எல்லோர் மூக்கையும் ஏமாற்றிவிட்டது.  குளித்து விட்டு வெளியில் வந்த மகனும்,  பள்ளி விடுமுறையால் நேரம் ஆவதே தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த (உறக்கத்தைக் கலைக்கும் அளவுக்கு அரோமா) மகளும் ஒரு சேர வந்து, பனீர் பட்டர் க்ரேவியோனு நினைச்சோம் என கோரஸாக கூவிச்சென்றனர்.  எல்லாம் வெந்தயக்கீரை செய்த மாயம் :)))

இந்த கீரை போடும் எண்ணம் வந்தவுடன் உதவிக்கு வந்து பறிச்சு தந்த என்னவர், உள்ளே சிறு வேலையாக நான் சென்ற உடனே பறிச்சாச்சு என்று சொல்லிவிட்டார்.
நானும் நம்பிவிட்டேன், பிறகு பார்த்தால் தண்டுகளுடன் பாதி கீரை பறித்தும், பறிக்காமலும் டஸ்ட் பின்னில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

வெந்தயக்கீரையை ஒவ்வொரு இலையாக பறித்து சமைப்பதுதான் முறை. (எனக்கு தெரிஞ்சு)
இல்ல தண்டோட போடலாம் தப்பில்லை என்று கூறி கத்தியால் கொத்தி எடுக்க தயாரானார்.
இல்லை, இல்லை....இலையை மட்டும் பறிக்கவேண்டும் என்று சொன்ன எனக்கு ஒரே ஷாக் டஸ்ட் பின்னை பார்த்து.

ஆமாங்க என்னதான் சொன்னாலும் வெந்தயக்கீரை பறிப்பது கொஞ்சம் நச்சுப்புடுச்ச வேலைதான்.

சரி என்ன பண்ண அவற்றையெல்லாம் எடுத்துச்சென்று மக்கும் குப்பைகளை வைத்து உரம் தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது. ( எல்லாம் என் வேலைதான்) அதற்குள் போட்டு விட்டேன். வாங்கிய கீரை குப்பைக்கு போகுதேனு வருத்தப்படாம நம்வீட்டு செடிக்குத்தானே உரமாகிறது என்று மனதை சமாதானம் செய்து கொண்டேன்!!!

சரி வாங்க ப்ரியாணிய எப்படி செய்தேனு சொல்றேன்!!



தேவையான பொருட்கள்:

ப்ரியாணி அரிசி.......500கிராம் (நான் உபயோகித்து இருப்பது ஐ.ஆர்.20 அரிசி)

வெந்தயக்கீரை.......இரண்டு கைப்பிடி அளவு

தக்காளி..............3

பெரிய வெங்காயம்.......2

புதினா ....................ஒரு கைப்பிடி அளவு

கேரட் பீன்ஸ்..........200கிராம்

தயிர் ஆடை..........1 மேசைக்கரண்டி

எலுமிச்சை.......1/2 மூடி

மஞ்சள் தூள்.....1/2 தேக்கரண்டி

உப்பு............தேவையான அளவு

அரைக்க:

இஞ்சி..........பெருவிரல் நீளத்திற்கு 1

பூண்டு..........10 பற்கள் 

சோம்பு.........2மேசைக்கரண்டி

பட்டை.........2 அங்குலதுண்டு

கிராம்பு........3

கசகசா........1/2 தேக்கரண்டி

ஏலக்காய்......2

வறமிளகாய்........4 (காரத்திற்கேற்ப)

தாளிக்க:

கல்பாசி.......சிறிது

சோம்பு........1/2 தேக்கரண்டி

ப்ரியாணி இலை....2

கடலை ரீஃபைண்ட் ஆயில்.......2 தேக்கரண்டி

செய்முறை:

கேரட்,பீன்ஸை சதுர துண்டுகளாக அரிந்து கொள்ளவேண்டும்.

 (பீட்ரூட், காலிஃப்ளவர்,பட்டாணி போட்டும் செய்யலாம். என்னிடம் கேரட்,பீன்ஸ் மட்டுமே இருந்தது)

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவேண்டும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்.

அரைக்க கொடுத்தவற்றை நீர்விடாமல் அரைக்கவும். 3 தக்காளியில் ஒன்றை அதனுடன் போட்டு அரைத்தால் நன்றாக பேஸ்ட் போல வரும்.

புதினா மற்றும் வெந்தயக்கீரையை தனித்தனியாக நன்றாக அலசி அரைகப் தண்ணீரில் போட்டுவைக்க வேண்டும். (அப்பொழுதான் அதிலிருக்கும் மண் மற்றும் தூசிகள் நீரின் அடிப்பாகத்தில் தங்கிவிடும்.
ஓடும் நீரில் அலசுவது பெரிதும் பலன் கொடுக்காது. இலையின் அடிப்பாகத்தில் அப்பியிருக்கும் மண் அப்படியே இருக்க பெரிதும் வாய்ப்புண்டு .) 

அரிசியை கழுவி ஒன்றுக்கு இரண்டு கப் நீர்விட்டு ஊறவைக்கவும். அதில் அரைமூடி எலுமிச்சையை பிழிந்து விடவும். 

அடுப்பில் குக்கரை ஏற்றவும். காயந்தவுடன் எண்ணய் ஊற்றி சோம்பு, கல்பாசி, ப்ரியாணி இலை ஆகியவற்றை போட்டு வாசனை வரும்வரை வதக்கவும்.

அரிந்த வெங்காயத்தை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். 

அரைத்த பொருட்களை போட்டு நன்கு கிளறவும். நன்கு வாசனை வரும் வரை கிளறிவிட்டு, தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு காய்கறிகள் போடவும்.  அதனையும் நன்கு கிளறிவிட்டு தயிர் ஆடையை சேர்த்த்து நன்கு கிளறவும்.

மஞ்சள்தூள் போடவும்.

பின்பு வெந்தயக்கீரை மற்றும் புதினாவைப் போட்டு கிளறவும்.  தயிர் ஆடை சேர்த்திருப்பதால் நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.

பின்பு ஊறவைத்த அரிசியை போட்டு அளந்து வைத்த அளவு நீரினை ஊற்றி உப்பு போடவும். 

குக்கரை ஹைஃபேளேமில் வைத்து மூன்று சத்தம் விடவும்.

பின்குறிப்பு:

நான் பயன்படுத்தி இருப்பது ஐ.ஆர்.20 அரிசி என்பதாலேயே தீயைக்கூட்டி 3 சத்தம் விட்டுள்ளேன்.
பாஸ்மதி, சீரக சம்பா அரிசிகளுக்கு சத்தம் விடாமல் குறைந்த தீயில் வைத்தே சமைக்கவேண்டும். இல்லையேல் முழுவதும் அடிப்பிடித்து ப்ரியாணி வீணாகிவிடும்.

கார்டன் ஃப்ரஷ் :))















 சுவையும், மணமும், குணமும் நிறைந்த மேத்தி வெஜ்டபுள் ரைஸ் தயார். தயிர்பச்சடியுடன் பரிமாறவும்.

                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வியாழன், 29 ஜனவரி, 2015

புடலங்காய் குழம்பு

புடலங்காய்  குழம்பு:



இந்த குழம்பினை இரண்டு விதமான முறையில் வைக்கலாம்.  இது ஒரு முறை. இன்னொரு முறையை இன்னொரு முறை இன்னொரு பதிவாக போடுகிறேன் :)

தேவையான பொருட்கள்:

புடலங்காய்.........2

சின்ன வெங்காயம்.....200கிராம்

வறமிளகாய்........4 (காரத்திற்கேற்ப)

தக்காளி.............1

மஞ்சள்தூள்...........1/2 தேக்கரண்டி

உப்பு...................தேவையான அளவு


 வறுத்து அரைக்க:

கடலைபருப்பு........2மேசைக்கரண்டி

 வெள்ளை உளுந்துபருப்பு........1மேசைக்கரண்டி

சீரகம்................1தேக்கரண்டி

மிளகு...............1தேக்கரண்டி

மல்லி...........2மேசைக்கரண்டி

சோம்பு........1தேக்கரண்டி

பட்டை.......சிறுதுண்டு

கிராம்பு/இலவங்கம்.......2

தேங்காய்...........1/2 மூடி

கறிவேப்பிலை........4 இணுக்கு

கடலை எண்ணய்.....2 மேசைக்கரண்டி



தாளிக்க:

கடலை எண்ணைய்........1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்.....2

கறிவேப்பிலை.......2 இணுக்கு

சோம்பு.......1/2 தேக்கரண்டி

செய்முறை:

புடலங்காயை பொடியாக அரிந்து கொள்ளவும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, புடலங்காயை போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு தக்காளையை போட்டு நன்கு வதக்கவும். 

காயிலிருந்து வரும் நீர் வரும்வரை கிளறி, பின்பு 1/2 டம்ளர் நீர்விட்டு  அடுப்பை சிம்மில் வைக்கவும்.

அரைக்க கொடுத்த பொருட்களை, வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த உடன் முதலில் கடலைப்பருப்பு, வெள்ளுழுந்து பருப்பு போட்டு வறுக்கவும். 

பின்பு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அதற்கு பிறகு மிளகு, சீரகம், சோம்பு, பட்டை,கிராம்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். ஆறவிடவும்.

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

ஆறிய பொருட்களுடன் தேங்காயை போட்டு அரைத்து, அடுப்பில் இருக்கும் காயுடன் சேர்க்கவும். தேவையான அளவு நீர் விட்டு, உப்பு போடவும்.

குக்கரை மூடி இரண்டு சவுண்ட் விடவும்.

சுவையான புடலங்காய் குழம்பு தயார்.

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.






புதினா எங்கள் வீட்டு புத்தம் புதிய புதினா :)

அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணியாகவோ, கெட்டியாகவோ வைத்துக்கொள்ளலாம்.
தாளிக்கும் போது பச்சைமிளகாய் இரண்டு சேர்த்து தாளித்தால் காரம் கூடுதலாக விரும்புவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.


                                                <><><><><><><><><><><><>


உனக்கு தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக் கொள்வதும், தெரியாததை தெரியாது என்று உணர்தலுமே தன்னம்பிக்கை.

கன்பூஷியஸ்.



தயிர் உறை ஊற்றுதல்

பாலை தயிராக்கும் முறை:




பாலை உறை ஊற்றுவதுனு உரைநடையாக சொல்வது எங்கவீட்டில் வழக்கமில்லை.
பால பெறை ஊத்தியாச்சா?  இருங்க பால பெறை ஊத்திட்டு வாரேன் என்றே சொல்வோம். பெறை போட்டாச்சானும் சொல்வது உண்டு.

இப்ப எப்படி பால பெறை ஊத்தி சரியான முறையில் தயிராக்குவதுனு பார்ப்போம்.

முதலில் பாலை நன்கு காய்ச்சி எடுத்து வைக்கவேண்டும்.
காய்ச்சிய பாத்திரத்திலிருந்து  வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
மாற்றிய பிறகு பால் இருக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியை தொட்டுப்பார்த்தால் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் சமயம் ஒரு ஸ்பூன் புளிக்காத தயிரை அப்பாலினுள் ஊற்ற வேண்டும்.

பாலை கலக்கவோ, பாத்திரத்தை அசைக்கவோ கூடாது. ஒரு முக்கியமான விசயம், பெறை போட்ட பாலை கண்டிப்பாக மூடி வைக்கவேண்டும். அப்பொழுதுதான் தெவையும்.

இரவு படுக்க போகும் முன் ஊற்றினால் காலையில் புளிக்காத தயிர் கிடைக்கும்.
தயிராகி விட்டது :)


எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் மதியம்  சாதத்திற்கு சரியாக இருக்கும்.
மிகவும் வெப்பமான ஊர்களில் காலையில் பெறை போட்டால் மதியம் தெவைந்து (துவைந்து)விடும்.
எங்கள் ஊரில் காலையில் போட்டால் தெவைவது இல்லை.
சில சமயம் காலையில் பெறை போட நேரிடுமானால் ஹாட்பாக்ஸில் பாலை பெறை ஊத்தி வைத்துவிடுவேன்.




திக்கான ஆடை



ஆடை சேமிப்பு :)
மதியம் தயிராகிவிடும்.

சரி ஒரு ஸ்பூன் தயிர் கூட வீட்டில் இல்லேனா என்ன செய்வது என்பவர்களுக்கு, பச்சை மிளகாயை கிள்ளி போட்டால் துவைந்து விடும்.

அப்படியும் இல்லையேல் அரை மூடி எலுமிச்சையை பிழிந்து விட்டால் தயிர் கிடைக்கும். ஆனால் இவை எல்லாமே சுவையில் மாறுபடும்.

எங்கள் பால்காரர் சுத்தமான தண்ணி கலக்காத பாலையே கொடுப்பார். அதனால்தான் காய்ச்சிய பாலில் இவ்வளவு ஆடை தென்படுகிறது.

 தயிர் ஆடையை சேமித்து வைத்து அவ்வப்பொழுது வெண்ணய் எடுத்துவிடுவேன்.
சுத்தமான மாட்டு வெண்ணய் கிடைக்கும்.
அதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.

புதன், 28 ஜனவரி, 2015

வெள்ளை ரவை உப்மா

வெள்ளை ரவை  உப்மா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்னவருக்கோ அதனை பிடிக்காது. கோழி தீவனம் என்று பெயர்சூட்டி மகிழ்வார். ஆனால் அவருக்கு கோதுமை ரவை உப்மா என்றால் கொள்ளை ப்ரியம்.

வெள்ளை ரவை உப்மா அவ்வளவா உடலுக்கு நல்லதில்லையாமே!?

போன வாரத்தில் ஒருநாள் அவர் வெளியூர் சென்றிருந்த சமயம் உப்மா செய்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். இந்த வெள்ளை ரவை உப்மா விசயத்தில் என் மகள் என் கட்சி :) கோதுமை ரவை உப்மா அம்மிணிக்கு புடிக்கவே புடிக்காது :)))

எதுவுமே சாப்பிடற மெத்ட் ஒண்ணு இருக்கில்லையா? சாப்பிடற மெத்ட்னா, நேரா வாயில போடாம தலைய சுத்தியானு கேட்கப்படாது. அதாவது உப்மாவில் நிறைய நெய் விட்டுக்கணும்.
தொட்டுக்கொள்ள அஸ்கா சக்கரை அளந்து  போடாம கொஞ்சம் தாராளமா வெச்சு அதை தொட்டு தொட்டு சாப்பிட்டா, அந்த சுவையே அலாதிதான் :))

இப்ப உப்மா எப்படி செய்வது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளைரவை...........1கப்

தண்ணீர்............................2 1/4 கப் 
 
சின்னவெங்காயம்......15 எண்ணிக்கை

பச்சமிளகாய்.................2 (விதைகளை கண்டிப்பாக எடுத்துவிடவேண்டும்)

இஞ்சி................................சிறுதுண்டு

கறிவேப்பிலை..........2 இணுக்கு

கேரட்..............................2(சிறியதாக இருப்பின் இல்லேனா 1)

தக்காளி.........................1 

 கடலை எண்ணைய்...............2மேசைக்கரண்டி

கடுகு..........................1/2 தேகரண்டி

கடலைபருப்பு.........1மேசைக்கரண்டி

செய்முறை:

சின்ன வெங்காயத்தை குறுக்குவாட்டில் இரண்டாக வெட்டவும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் 4 ஆக வெட்டவும்.

கேரட்டை பொடியாக நறுக்கவும்.

இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன்  கடலை எண்ணைய் ஊற்றி
எண்ணய் காய்ந்தவுடன் கடுகு, கடலைபருப்பை போடவும். 

கடுகுவெடித்து கடலைபருப்பு சிவந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

வதங்கிய உடன் கேரட் போட்டு 1நிமிடம் வதக்கி தக்காளியை போடவும்.

பிறகு இஞ்சி போடவேண்டும்.

இவை எல்லாம் வதங்கிய பின்பு அளந்து வைத்த நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்த உடன் ரவையை தூவினாற் போன்று போட்டுக்கொண்டே கிளறவேண்டும்.

நன்கு சுருண்டு வரும் சமயம் 2 தேக்கரண்டி நெய்விடவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள மேற்சொன்னதையும் பின்பற்றலாம். தயிரும் நன்றாக இருக்கும்.

தேங்காய் சட்னி அல்லது சாம்பார் பொருத்தமாக இருக்கும்.
ஏதேனும் வேலை இருந்தாலோ, முடியாத சமயமோதான் இதனை செய்வது உண்டு.
 சாம்பார் வைக்கும் அளவிற்கு நேரம் இருப்பின் நாம் ஏன் இதனை செய்யப்போறோம்.

ஆனா என்ன ஒரு சிலருக்கு இதெல்லாம் வைத்தால்தான் இவ்வுணவு பூரணத்துவம் அடைந்ததாக கூறுவர்.




                               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உயர்ந்த தவம், பொறுமை; உயர்ந்த ஆற்றல், மன்னிப்பு; 
 உயர்ந்த மகிழ்ச்சி, கடுமையான உழைப்பு.

குருநானக்.


                                            ~~~~~~~~~~~~~~~~~~~~~

திங்கள், 26 ஜனவரி, 2015

அவகோடா ஸ்மூதி




அவகோடா இந்த பெயரும் பழமும் எனக்கு புதிது. சமீபத்தில் கொடைக்கானல் சென்றோம்.

திரும்பி வரும்போது கொடைரோடில் நிறைய பழக்கடைகள் தென்பட்டன.
கொடை ஆரஞ்சு சாலையில் கொட்டி வைத்து விற்பனை நடந்து கொண்டிருந்தது.




இன்னும் சற்று தொலைவு வந்தவுடன் கடைகள் இருந்தன. அவற்றில் மலைவாழைப் பழம் இருக்கும் என தேடி ஏமாந்து போனோ(னேன்)ம்.

மாறாகா பிளம்ஸ், பேரீக்காய்( அளவில் பெருசு), மலை இலந்தை, அவகோடா ( இந்த பேரை நெட்ல தான் கண்டுபுடுச்சேன்) அங்கு பட்டர்ஃப்ரூட் என்ற பெயரில் விற்பனையாயிற்று. இன்னும் பல பழங்கள் இருந்தன.
பட்டர் ஃப்ரூட் பார்க்க கிளிமூக்கு மாங்காய் சைஸிற்கு இருந்தது. இங்கு தேடியதில் சிறுகாய்களை வைத்தே குறிப்புகள் கண்டேன்.

வாங்கிட்டு வ்ந்து கவர்ல வெச்சது ஒருவாரமா மறந்துட்டேன். கல்லு போல காயாக இருந்தது. பார்த்தா பச்சை நிறம் மாறாமலே பழமாகி இருந்தது.

எடுத்து இரண்டாக பிளந்தால்  தேங்காய் குரும்பை போல இரு பக்கமும் தொட்டி போல காட்சியளித்தது.

நடுவில இருந்த கொட்டை, எனக்கு உருண்டை வெல்லத்தை ஞாபகப்படுத்தியது.
என்ன செய்வது என்று தெரியாமலே இரண்டாக பிளந்து வைத்தாயிற்று. லேசாக ஸ்பூன் விட்டு இளநீர் போல் சுரண்டி எடுத்து சாப்பிடக்கொடுத்தேன் மகளிடம்.
முகபிரதிபலிப்பு அவ்வளவாக நன்றாக இல்லை. அடம் பிடித்து வாங்கியதென்னவோ மகள்தான். அதனால் சுவை பிடிக்கவில்லை என்று கட் அன்ட் ரைட்டாக கூறாமல், நல்லா இருக்கு, இல்லை என்பது போன்ற தலையசைப்பை வெளிப்படுத்தினாங்க.
பிறகு நானும் எடுத்து சுவைத்து பார்த்தேன், இன்ன சுவை என்று அறுதியிட்டு கூறவியலா நிலை.

சரி மிக்ஸியில் போட்டு அடித்து ஜூஸாக மாற்றலாம் என நினைத்து ஆப்பிள் ஜூஸ் போல 1/2 டம்ளர் காய்ச்சிய பாலை ஊற்றி, 2 ஸ்பூன் சர்க்கரை போட்டு நன்றாக அடித்தேன். அப்பவும் வெண்ணைய் போலவே காட்சியளித்தது. அதனால்தான் வெண்ணய் பழம்னு பேர் வந்திருக்கு!!.

சரி இதுக்கு ஜூஸ்னு பேர் பொருத்தமா இருக்காதுனு சொல்லி "ஸ்மூதி"னு பேர் வெச்சு , அதை டம்ளரில் ஊற்றி(போட்டு) ஸ்பூன் போட்டு சாப்பிட கொடுத்தேன். ம்ஹூம் ஒண்ணும் வேலைக்காவல.
அப்படியொன்னும் நல்லா இல்ல என்ற கருத்துரையை ஒருவழியா கூறி, தனக்கு இனி இது வேண்டாம் என்பதை பூடகமாக சொல்லிவிட்டார்.

பிறகு நிறைய பக்கம் தேடியதில், சப்பாத்திமாவுடன் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாகவும், சிப்ஸ், பஃப்ஸ் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளவும் பயன்படுத்தலாம் என படித்தேன். ஸாண்ட்விச்சாகவும் இன்னபிற உணவு பண்டமாகவும் பயன்படுத்தலாம் என்பதையும் அறிந்து கொண்டேன்.
அதில் இருக்கும் அளவிலா சத்துக்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இம்புட்டு சத்து உள்ள பழமா? அப்ப இனி ருசிக்காக இல்லேனாலும் சத்திற்காக அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

முழு படத்தையும் புகைப்படம் எடுக்கும் முன்பாக ஒரு ஆர்வக்கோளாறில இரண்டா வெட்டியாச்சு, அதுனால முழு பழத்தையும் பார்க்கும் யோகம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பது கொஞ்சம் மனவருத்தமாகத்தான் இருக்கிறது :)))



இரண்டாக உடைத்து





 கொப்பரத்து வெல்லம் போல(மண்டை அல்லது உருண்டை வெல்லம்) காட்சியளிக்கிறது.
 கழுவிய பின்பு பார்த்தால் கொழுமாங்கல் போல காட்சியளிக்கிறது.
 மேட்டாப்பில சுரண்டி எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டிருக்கேன். பார்க்க ஐஸ்க்ரீம் போலவே இருக்கு :P
 பாலும் சர்க்கரையும் சேர்த்து போட்டுள்ளேன்.








அரைத்த விழுதினை டம்ளரில் ஊத்தியாச்சு சாரி போட்டாச்சு :))



மலை போன்ற சகிப்புத் தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற தன்னம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றியைத் தரும் ரகசியம்.

சுவாமி விவேகானந்தர்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

வேண்டாமே...

பொதுவா இது எல்லா இடத்திலும் நடக்கிறதுதான். என்னனு கேட்கிறீங்களா?

நோய்வாய்ப்பட்டவங்களை சென்று பார்த்து ஆறுதல் அளிப்பது.  ஊர்ல எல்லாம் பாத்தீங்கனா, யாருக்காச்சும் உடம்பு சரி இல்லேனா எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வச்சிட்டு  சீக்காளிய போய் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவாங்க.

இப்படிப்போய் பார்க்கும் போது நோய்வாய்ப்பட்டவருக்கு நிச்சயம் மனதுக்கு ஆறுதலா இருக்கும்.

சில நேரங்களில் அப்படி பார்க்க வருபவர்கள் எங்கெலாம் இது போல நோய்வாய்ப்பட்டாங்க, அதனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பட்ட துன்பங்கள் இதையெல்லாம் விளக்கமாக பேசுவார்கள். நோயின் தீவிரம் அதுக்கு அப்புறம் அதனால் ஏற்பட்ட பக்க, பின் விளைவுகள் எல்லாவற்றையும் மிக அற்புதமாக விளக்கி சொல்வார்கள்.

நான் என்ன சொல்றேனா, தயவு செய்து எதிர்மறையான செய்திகளை விதைத்துவிட்டு செல்லாமல் எப்பாடு பட்டேனும் பிழைத்து விட்டார்கள் என்பது போன்ற நேர்மறையான செய்திகளை விதைத்தால் கொஞ்சமேனும் நோயாளிக்கு ஆறுதலாக இருக்குமே!! கூட இருப்பவர்களை மனம் குலையச்செய்யாமல் இருக்குமே என்பதுதான்.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்து பேசவேண்டிய இடம் அது என்பதை மறக்கவே கூடாது.
நோயாளியை விட உடனிருப்பவர்கள் மிகவும் அதைரியமான மனோபாவம் படைத்தவர்களாக இருப்பார்களேயானால் அதனால் ஏற்படும் இழப்பு ஈடு செய்யமுடியாத அளவுக்கு இருக்கும். கொஞ்சம் யோசித்தோமேயானால் நல்லது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

வார்த்தைகளுக்கு நிச்சயம் வலிமை அதிகம்.  ஒரு குட்டிக்கதை விவேகானந்தர் சொல்லிய கதை.

ஒரு சிறுவன் மலைமேல் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். ஒரு பாம்பு தீண்டி விட்டது. ஆனால் அவனுக்கு தெரியவில்லை.
மாறாக குச்சி கீறிவிட்டது என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிட்டான்.

மாலை நெருங்கியவுடன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு இருப்பிடம் திரும்பிக்கொண்டிருந்தான்.

வழியில் எதிர்ப்பட்ட ஒருவர் " என்னப்பா இது கால்ல காயம் இரத்தம் வேற வந்திருக்கே, நீ பார்க்கலியா" என வினவுகிறார்.
அதற்கு அச்சிறுவன் "ஐயா காலில் குச்சி கிழித்துவிட்டது அதனால் உண்டான காயம்" எனக்கூறுகிறான்.

காயத்தை உற்றுப்பார்த்தவர் " தம்பி இது குச்சி கிழிக்கலப்பா, பாம்பு தீண்டிய காயம்" எனக்கூறுகிறார்.

அவர் சொன்ன அடுத்த வினாடி அச்சிறுவன் மயங்கி விழுந்து மரணத்தை எய்துகிறான்.

காலையிலிருந்து குச்சி கீறிவிட்டது என்ற மனநிலையில் இருந்த சிறுவனை, தீண்டியது பாம்பு என்ற அதிர்ச்சி  மரணத்தை நோக்கி இழுத்து சென்றுவிட்டது.

நாம் சொற்களின் வலிமை தெரியாமல் சில நேரங்களில் பேசிவிடுகிறோம். அவ்வாறில்லாமல் கொஞ்சமேனும் சிந்தித்து பேசுவோமேயானால் அதனால் உண்டாகும் பலன் பலமடங்காகும்.







செவ்வாய், 13 ஜனவரி, 2015

மஞ்சக்குழம்பு

தலைப்பை பார்த்து விட்டு, இது மஞ்சளை கரைத்து ஊற்றி வைக்கப்படுவது என்று நினைத்து விடாதீர்கள்.

இக்குழம்புக்கு என் குழந்தைகள் மிகவும் அடிமை :) என் அம்மா அடிக்கடி வைக்கும் குழம்பு இது. அம்மாயி வீட்டுக்கு போய் மஞ்சக்குழம்பு தொட்டு இட்லி சாப்பிட ஆசையா இருக்கு என்று அடிக்கடி என் மகனும் மகளும் சொல்வர்.
என்னதான் அம்மாவை அப்படியே பின்பற்றி வைத்தாலும் ருசி ஏனோ அது போல இல்லை என்றே கூறுவர்.

மங்களகரமான மஞ்சக்குழம்பையே என் முதல் சமையல் குறிப்பாக போடுகிறேன்.

தேவையான பொருட்கள்:

அரைக்க:

தேங்காய்: 1 மூடி

பொட்டுக்கடலை: 2மேசைக்கரண்டி( tablespoon)

இஞ்சி: சிறு துண்டு

பூண்டு:  3 பற்கள்

சோம்பு:  1/2 மேசைக்கரண்டி

பட்டை: சிறு துண்டு

கிராம்பு: 2

கறிவேப்பிலை: 2 இணுக்குகள்

தாளிக்க:

தக்காளி:  4 பழங்கள்

சின்னவெங்காயம்: 20 எண்ணிக்கை

ப.மிளகாய்: 4 (காரத்திற்கேற்ப)

கறிவேப்பிலை: 1 இணுக்கு

கடலை எண்ணைய்:  2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி( tea spoon)

கடுகு, கடலைப்பருப்பு தேவையான அளவு.

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

தேங்காயை துருவிக்கொள்ளவும்.  மிக்ஸியில் அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை குறுக்கு வாட்டில் 2 ஆக வெட்டிக்கொள்ளவும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

பச்சை மிளகாயை நான்காக அரிந்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை இரண்டாக கிள்ளிக்கொள்ளவும்.

அடுப்பில் குழம்பு பாத்திரத்தை வைத்து காய்ந்தவுடன் கடலைஎண்ணைய் ஊற்றவும்.

எண்ணைய் காய்ந்த உடன் கடுகு, கடலைபருப்பு போட்டு வெடித்த உடன் சின்னவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வணக்கவும்.

பின்பு தக்காளி போட்டு குழைய வேகவிட்டு, பருப்பு மத்தினால் கடைந்து விட்டு உப்பு, மஞ்சள்தூள் போடவும்.

பின்பு அரைத்த விழுதினை போட்டு தேவையான அளவு நீர் விட்டு நுரைத்தவுடன் இறக்கவும்.

சுவையான மஞ்சக்குழம்பு தயார். இட்லி, தோசை, பணியாரத்திற்கு மட்டுமே தொட்டுக்கொள்ள ஏற்ற உணவாகும்.

பின்குறிப்பு:

அதிகமாக கொதிக்க விடாமல் இருப்பதே கூடுதல் சுவைக்கு உத்திரவாதம் ஆகும்.

அதாவது ரசம் எப்படி நுரைத்து வரும் வேளையில் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவை குன்றாமல் இருக்குமோ, அது போலத்தான் இதுவும்.

முதல் குறிப்பு என் மகளின் வேண்டுகோளுக்கிணங்க போட்டதால், படம் கைவசம் இல்லை.
விரைவில் படம் வெளியிடப்படும்.

கடவுள்

ஒரு குட்டி கதை, ஆனால் உள்ளிருக்கும் விசயமோ மிக ஆழமானது. சமீபத்தில் வாட்ஸப்பில் காணக்கிடைத்தது.
பெரும்பாலானோர் அறிந்திருக்கும் கதையாகத்தான் இருக்கும்.

கடவுள் கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார்.

"நீ கழுதையாகப் பிறந்து நாள் முழுதும் பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்".

கழுதை சொன்னது " இறைவா கழுதையாக எனக்கு 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்."

அதற்கு கடவுளும் சரியெனச் சொல்லி விட்டார்.

கடவுள் நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். " நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருந்து அவன் தரும் மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்".

நாய் கடவுளிடம் "இறைவா எனக்கு 30 ஆண்டுகள் வேண்டாம் 15 ஆண்டுகளே போதும்" என்று கூறியது.

கடவுளும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டார்.

கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார் " நீ மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய், 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்".

குரங்கு "எனக்கு 10 வருடங்களே போதும் சாமி அதற்கு மேல் வேண்டாம்" எனக்கூறியது.
கடவுளும் அப்படியே ஆகட்டும் எனக்கூறினார்.

அடுத்த படியாக கடவுள் மனிதனைப் படைத்தார்.

"நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய்.
உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்".

மனிதன் " சாமி சாமி எனக்கு 20 வருசம் ரொம்பக் குறைவு, அதனால கழுதை வேண்டாம்னு சொன்ன 30 வருசம், நாய் வேண்டாம்னு சொன்ன 15 வருசம். கொரங்கு வேண்டாம்னு சொன்ன 10 எல்லாத்தையும் எனக்கே கொடுத்திடுங்க சாமி"னு கேட்டான்.

கடவுளும் அப்படியே ஆகட்டும்னு சொன்னார்.

அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 20 வருடங்கள் கழுதையைப் போல குடும்ப பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின்பு 15 ஆண்டுகள் நாயைப்போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசி பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்...!!!