![]() |
வெந்தயக்கீரை ப்ரியாணி |
ஆனால் கடைசியில் ரொம்பவே சுவை கூடுதலாக இருந்தது.
அப்புறம் என்ன இனிமேல் எந்த ப்ரியாணினாலும் கண்டிப்பாக வெந்தயக்கீரையும் இடம்பிடிக்கத்தான் போகிறது.
இந்த ப்ரியாணி சமைக்கும் போது எழுந்த வாசனை எல்லோர் மூக்கையும் ஏமாற்றிவிட்டது. குளித்து விட்டு வெளியில் வந்த மகனும், பள்ளி விடுமுறையால் நேரம் ஆவதே தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த (உறக்கத்தைக் கலைக்கும் அளவுக்கு அரோமா) மகளும் ஒரு சேர வந்து, பனீர் பட்டர் க்ரேவியோனு நினைச்சோம் என கோரஸாக கூவிச்சென்றனர். எல்லாம் வெந்தயக்கீரை செய்த மாயம் :)))
இந்த கீரை போடும் எண்ணம் வந்தவுடன் உதவிக்கு வந்து பறிச்சு தந்த என்னவர், உள்ளே சிறு வேலையாக நான் சென்ற உடனே பறிச்சாச்சு என்று சொல்லிவிட்டார்.
நானும் நம்பிவிட்டேன், பிறகு பார்த்தால் தண்டுகளுடன் பாதி கீரை பறித்தும், பறிக்காமலும் டஸ்ட் பின்னில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.
வெந்தயக்கீரையை ஒவ்வொரு இலையாக பறித்து சமைப்பதுதான் முறை. (எனக்கு தெரிஞ்சு)
இல்ல தண்டோட போடலாம் தப்பில்லை என்று கூறி கத்தியால் கொத்தி எடுக்க தயாரானார்.
இல்லை, இல்லை....இலையை மட்டும் பறிக்கவேண்டும் என்று சொன்ன எனக்கு ஒரே ஷாக் டஸ்ட் பின்னை பார்த்து.
ஆமாங்க என்னதான் சொன்னாலும் வெந்தயக்கீரை பறிப்பது கொஞ்சம் நச்சுப்புடுச்ச வேலைதான்.
சரி என்ன பண்ண அவற்றையெல்லாம் எடுத்துச்சென்று மக்கும் குப்பைகளை வைத்து உரம் தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது. ( எல்லாம் என் வேலைதான்) அதற்குள் போட்டு விட்டேன். வாங்கிய கீரை குப்பைக்கு போகுதேனு வருத்தப்படாம நம்வீட்டு செடிக்குத்தானே உரமாகிறது என்று மனதை சமாதானம் செய்து கொண்டேன்!!!
சரி வாங்க ப்ரியாணிய எப்படி செய்தேனு சொல்றேன்!!
தேவையான பொருட்கள்:
ப்ரியாணி அரிசி.......500கிராம் (நான் உபயோகித்து இருப்பது ஐ.ஆர்.20 அரிசி)
வெந்தயக்கீரை.......இரண்டு கைப்பிடி அளவு
தக்காளி..............3
பெரிய வெங்காயம்.......2
புதினா ....................ஒரு கைப்பிடி அளவு
கேரட் பீன்ஸ்..........200கிராம்
தயிர் ஆடை..........1 மேசைக்கரண்டி
எலுமிச்சை.......1/2 மூடி
மஞ்சள் தூள்.....1/2 தேக்கரண்டி
உப்பு............தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி..........பெருவிரல் நீளத்திற்கு 1
பூண்டு..........10 பற்கள்
சோம்பு.........2மேசைக்கரண்டி
பட்டை.........2 அங்குலதுண்டு
கிராம்பு........3
கசகசா........1/2 தேக்கரண்டி
ஏலக்காய்......2
வறமிளகாய்........4 (காரத்திற்கேற்ப)
தாளிக்க:
கல்பாசி.......சிறிது
சோம்பு........1/2 தேக்கரண்டி
ப்ரியாணி இலை....2
கடலை ரீஃபைண்ட் ஆயில்.......2 தேக்கரண்டி
செய்முறை:
கேரட்,பீன்ஸை சதுர துண்டுகளாக அரிந்து கொள்ளவேண்டும்.
(பீட்ரூட், காலிஃப்ளவர்,பட்டாணி போட்டும் செய்யலாம். என்னிடம் கேரட்,பீன்ஸ் மட்டுமே இருந்தது)
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவேண்டும்.
தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்.
அரைக்க கொடுத்தவற்றை நீர்விடாமல் அரைக்கவும். 3 தக்காளியில் ஒன்றை அதனுடன் போட்டு அரைத்தால் நன்றாக பேஸ்ட் போல வரும்.
புதினா மற்றும் வெந்தயக்கீரையை தனித்தனியாக நன்றாக அலசி அரைகப் தண்ணீரில் போட்டுவைக்க வேண்டும். (அப்பொழுதான் அதிலிருக்கும் மண் மற்றும் தூசிகள் நீரின் அடிப்பாகத்தில் தங்கிவிடும்.
ஓடும் நீரில் அலசுவது பெரிதும் பலன் கொடுக்காது. இலையின் அடிப்பாகத்தில் அப்பியிருக்கும் மண் அப்படியே இருக்க பெரிதும் வாய்ப்புண்டு .)
அரிசியை கழுவி ஒன்றுக்கு இரண்டு கப் நீர்விட்டு ஊறவைக்கவும். அதில் அரைமூடி எலுமிச்சையை பிழிந்து விடவும்.
அடுப்பில் குக்கரை ஏற்றவும். காயந்தவுடன் எண்ணய் ஊற்றி சோம்பு, கல்பாசி, ப்ரியாணி இலை ஆகியவற்றை போட்டு வாசனை வரும்வரை வதக்கவும்.
அரிந்த வெங்காயத்தை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
அரைத்த பொருட்களை போட்டு நன்கு கிளறவும். நன்கு வாசனை வரும் வரை கிளறிவிட்டு, தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு காய்கறிகள் போடவும். அதனையும் நன்கு கிளறிவிட்டு தயிர் ஆடையை சேர்த்த்து நன்கு கிளறவும்.
மஞ்சள்தூள் போடவும்.
பின்பு வெந்தயக்கீரை மற்றும் புதினாவைப் போட்டு கிளறவும். தயிர் ஆடை சேர்த்திருப்பதால் நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.
பின்பு ஊறவைத்த அரிசியை போட்டு அளந்து வைத்த அளவு நீரினை ஊற்றி உப்பு போடவும்.
குக்கரை ஹைஃபேளேமில் வைத்து மூன்று சத்தம் விடவும்.
பின்குறிப்பு:
நான் பயன்படுத்தி இருப்பது ஐ.ஆர்.20 அரிசி என்பதாலேயே தீயைக்கூட்டி 3 சத்தம் விட்டுள்ளேன்.
பாஸ்மதி, சீரக சம்பா அரிசிகளுக்கு சத்தம் விடாமல் குறைந்த தீயில் வைத்தே சமைக்கவேண்டும். இல்லையேல் முழுவதும் அடிப்பிடித்து ப்ரியாணி வீணாகிவிடும்.
![]() |
கார்டன் ஃப்ரஷ் :)) |
சுவையும், மணமும், குணமும் நிறைந்த மேத்தி வெஜ்டபுள் ரைஸ் தயார். தயிர்பச்சடியுடன் பரிமாறவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்