செவ்வாய், 13 ஜனவரி, 2015

மஞ்சக்குழம்பு

தலைப்பை பார்த்து விட்டு, இது மஞ்சளை கரைத்து ஊற்றி வைக்கப்படுவது என்று நினைத்து விடாதீர்கள்.

இக்குழம்புக்கு என் குழந்தைகள் மிகவும் அடிமை :) என் அம்மா அடிக்கடி வைக்கும் குழம்பு இது. அம்மாயி வீட்டுக்கு போய் மஞ்சக்குழம்பு தொட்டு இட்லி சாப்பிட ஆசையா இருக்கு என்று அடிக்கடி என் மகனும் மகளும் சொல்வர்.
என்னதான் அம்மாவை அப்படியே பின்பற்றி வைத்தாலும் ருசி ஏனோ அது போல இல்லை என்றே கூறுவர்.

மங்களகரமான மஞ்சக்குழம்பையே என் முதல் சமையல் குறிப்பாக போடுகிறேன்.

தேவையான பொருட்கள்:

அரைக்க:

தேங்காய்: 1 மூடி

பொட்டுக்கடலை: 2மேசைக்கரண்டி( tablespoon)

இஞ்சி: சிறு துண்டு

பூண்டு:  3 பற்கள்

சோம்பு:  1/2 மேசைக்கரண்டி

பட்டை: சிறு துண்டு

கிராம்பு: 2

கறிவேப்பிலை: 2 இணுக்குகள்

தாளிக்க:

தக்காளி:  4 பழங்கள்

சின்னவெங்காயம்: 20 எண்ணிக்கை

ப.மிளகாய்: 4 (காரத்திற்கேற்ப)

கறிவேப்பிலை: 1 இணுக்கு

கடலை எண்ணைய்:  2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி( tea spoon)

கடுகு, கடலைப்பருப்பு தேவையான அளவு.

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

தேங்காயை துருவிக்கொள்ளவும்.  மிக்ஸியில் அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை குறுக்கு வாட்டில் 2 ஆக வெட்டிக்கொள்ளவும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

பச்சை மிளகாயை நான்காக அரிந்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை இரண்டாக கிள்ளிக்கொள்ளவும்.

அடுப்பில் குழம்பு பாத்திரத்தை வைத்து காய்ந்தவுடன் கடலைஎண்ணைய் ஊற்றவும்.

எண்ணைய் காய்ந்த உடன் கடுகு, கடலைபருப்பு போட்டு வெடித்த உடன் சின்னவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வணக்கவும்.

பின்பு தக்காளி போட்டு குழைய வேகவிட்டு, பருப்பு மத்தினால் கடைந்து விட்டு உப்பு, மஞ்சள்தூள் போடவும்.

பின்பு அரைத்த விழுதினை போட்டு தேவையான அளவு நீர் விட்டு நுரைத்தவுடன் இறக்கவும்.

சுவையான மஞ்சக்குழம்பு தயார். இட்லி, தோசை, பணியாரத்திற்கு மட்டுமே தொட்டுக்கொள்ள ஏற்ற உணவாகும்.

பின்குறிப்பு:

அதிகமாக கொதிக்க விடாமல் இருப்பதே கூடுதல் சுவைக்கு உத்திரவாதம் ஆகும்.

அதாவது ரசம் எப்படி நுரைத்து வரும் வேளையில் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவை குன்றாமல் இருக்குமோ, அது போலத்தான் இதுவும்.

முதல் குறிப்பு என் மகளின் வேண்டுகோளுக்கிணங்க போட்டதால், படம் கைவசம் இல்லை.
விரைவில் படம் வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்