ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

நெல்லிக்காய்(கனி) சாம்பார்



வழக்கம் போல பெயர் சூட்டும்பொழுது 1008 சந்தேகம் மண்டையை குடைந்தது. நெல்லிக்கனிதானே ஏன் காய்? அப்ப புளியங்கனினு சொல்வதில்லையே, புளியங்காய்னுதானே சொல்றோம் என என் சந்தேகத்தை நானே தீர்த்துக்கொண்டு நெல்லிக்காய் சாம்பார் என்றே நாமகரணம் சூட்டிவிட்டேன்.

ஹீ ஹீ தேங்காய், தென்னம்பழம் ஜோக்...மனதில் ஒரு நிமிடம் தோன்றி மறையலாம். அதுக்கு நான் பொறுப்பல்ல :)))

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்    4

துவரம்பருப்பு               1கப்

தக்காளி            1

பச்சமிளகாய்           3

புளி                   சிறு உருண்டை( நெல்லிக்காய் அளவு)

சின்ன வெங்காயம் 15

கறிவேப்பிலை  2 இணுக்கு

மல்லி                 சிறிதளவு

சாம்பார் பொடி  1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள்      1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடலைஎண்ணெய், கடுகு,  கடலைபருப்பு

உப்பு                தேவையான அளவு.

செய்முறை:

பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.

சின்னவெங்காயத்தை தோலுரித்து குறுக்குவாட்டில் இரண்டாக வெட்டி வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கவும்.

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். கொட்டையை எடுத்துவிடவேண்டும்.

மிளகாயை அரிந்து விதைகளை எடுத்துவிடவும். வறமிளகாயும் பயன்படுத்தலாம்.

அடுப்பில் வாணலியை வைத்து நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.

பின்னர் நறுக்கிய நெல்லிக்காய் போட்டு வதக்கவும். 

ஓரளவு வதங்கியவுடன் புளிக்கரைசல், சாம்பார்பொடி

 உப்பு சேர்க்கவும்.

பின்னர் பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

எப்பொழுதுமே சாம்பாரை நன்கு கொதிக்க விடவேண்டும். அப்பொழுதுதான் நல்ல ருசி வரும். 

மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.



 புளி மற்ற சாம்பாரை விட மிகவும் குறைவாக சேர்த்தாலே போதும்.  சேர்க்காமலும் செய்யலாம். நெல்லிக்கனியின் புளிப்பு சுவைக்கேற்ப புளிசேர்க்க வேண்டும்.

இட்லி, தோசை, பணியாரம், சாதம்  ஆகியவற்றுக்கு ஏற்ற இணை இது.

நெல்லிக்காயின் பலன்கள் "உள்ளங்கை நெல்லிக்கனி" போல அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். வைட்டமின் சி சத்தினை ஏராளமாக கொண்டுள்ள இக்கனி கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. ஏழைகளின் ஆப்பிள்னு படிச்சிருப்போம். தினமும் ஒரு கனி உண்டுவர முதுமையை தள்ளிப்போடலாம்.

முதுமைனு சொல்லவும் இக்கதை ஞாபக் வருகிறது. இக்கதை அனைவரும் அறிந்ததே இருந்தாலும் இங்கு சேமித்து வைக்க ஆசைப்பட்டதின் விளைவாக...

மன்னர் அதியமானை காண ஒருநாள் ஔவையார் தகடூருக்கு வந்தார். ஔவையை அன்புமிளிர வரவேற்று உபசரித்த அதியமான், ஒரு அதிசய கனியை ஔவைக்கு உண்பதற்காக கொடுத்து அதை வற்புறுத்தி உண்ண வைக்கிறார்.

அதன் வித்யாசமான சுவை ஔவைக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அக்கனியைப் பற்றி அதியமானிடம் விசாரிக்கிறார் ஔவை.

அது ஒரு அற்புதகனி என்றும், இதனை உண்பவர்களை மரணம் தீண்டாது எனவும் கூறுகிறார் அதியமான்.

'இவ்வளவு பேறு பெற்ற இக்கனியை  நீயல்லவோ உண்டு நீண்ட நெடுநாள் வாழ்ந்து மக்களைப் பேணி பாதுக்காத்திருக்க வேண்டும். எதற்காக எனக்களித்தாய்? அதுவும் வயதான எனக்கு? என வினவுகிறார் ஔவை.

அதற்கு அதியமான், 'ஔவைபிராட்டியே! என் போன்ற ஒரு மன்னன் நீண்ட நெடுங்காலம் வாழ்வதைக் காட்டிலும், உமைப்போன்றதொரு தமிழ்ப்புலவர் நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்கு தொண்டு செய்வதே சாலச்சிறந்தது' என்று கூறுகிறார்.
அதியமானின் அன்பில் அகமகிழ்கிறார் ஔவை. 

இதில் நெல்லிக்கனியென்று இருக்கிறதே? அப்ப நெல்லிக்காய் அல்லவா? கனியா? கனியிருப்ப காய் கவர்ந்துவிட்டேனா?? மீண்டும் கேள்விகள் தொக்கி நிற்க பார்க்கிறதே!! ஐயகோ..!! இதென்ன சோதனை??


                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையெனில் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

சுவாமி. விவேகானந்தர்.

                                                             _((()))_. 


சனி, 25 ஏப்ரல், 2015

முத்தண்டு பொரியல்




வாழைத்தண்டுடன் முள்ளங்கி கீரைத்தண்டும் பீட்ரூட் கீரைத்தண்டும் சேர்த்து முத்தண்டு பொரியலாக்கி விட்டேன்.

முள்ளங்கிகீரையின் தண்டு மற்ற இரண்டையும் விட வேக நேரம் எடுத்தது. பீட்ரூட்கீரையின்தண்டும் வாழைத்தண்டும் ஒண்ணு போல உடனே வெந்துவிட்டது.



 வாழைத்தண்டின் மேல் தோலை உரித்து எடுத்துவிட வேண்டும்.


பொடியாக நறுக்கிய வாழைத்தண்டினை பொடியாக அரிந்து, ஒரு கரண்டி தயிர் சேர்த்த நீரில் போட்டு வைக்கவேண்டும். அப்பொழுதுதான் நிறம் மாறாமல் இருக்கும்.  வாழைத்தண்டில் நார் எடுப்பதற்கு பாட்டில் கழுவும் ப்ரஷ்ஷை பயன்படுத்திக் கொள்ளலாம். பிரஷ்ஷினை தண்டு உள்ள நீரில் வைத்து சுழற்றினால் நார் வந்துவிடும்.

 முள்ளங்கி கீரைத்தண்டையும், பீட்ரூட் தண்டையும் நன்கு கழுவி பொடியாக அரிந்து வைக்கவேண்டும்.


 சின்ன வெங்காயம், வறமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை கடுகு, கடலைப்பருப்பு போட்டு தாளித்தவற்றுடன் வதக்கவேண்டும்.
 அரிந்த தண்டுகளைப்போட்டு வதக்கவேண்டும். 1 டம்ளர் நீர்விட்டு வேக வைக்கவேண்டும்.

 வெந்தவுடன்  1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல் போட்டு கிளறவும்.
 நன்கு கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.

முத்தண்டு பொரியல் தயார்!!.

நீர்சத்தும் நார்சத்தும் மிகுந்த இப்பொரியல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

Dr. A.P.J.அப்துல்கலாம்.

                                                              _((()))_

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

அருகம்புல் ஜூஸ்



அருகம்புல் சாறு தயாரிப்பு முறை:
 ஒரு கைப்பிடியளவு அருகம்புல்லை எடுத்து நன்கு நீரினால் அலசவேண்டும்.  சிறு துண்டு இஞ்சியை தோல் சீவி நான்காக வெட்டிக்கொள்ள வேண்டும். இவற்றை மிக்ஸி சின்னஜாரில் 1/2 டம்ளர் நீர்விட்டு அரைத்து வடிகட்டி கொள்ளவேண்டும். தினமும் குடித்து வர உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.




இளம்புல்லாக இருப்பின் நல்லது






நரம்புக்கோளாறு உள்ளவர்கள் நாள்தோறும் குடித்து வந்தால் நோயின் தீவிரம் மட்டுப்படும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் அருகம்புல் சாறு பெரும்பங்கு வகிக்கின்றது.
இயற்கை நல மருத்துவமனைகளில் அருகம்புல் சாறு இல்லாத நாட்களே கிடையாது.

மேலும் பலப்பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய அருகம்புல் ஜீஸினை அனைவரும் பயன்படுத்தலாமே!! மிகவும் எளிதான ஒன்று ஆனால் பலனோ ஏராளாம்!!

                                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

வெற்றிபெற மூன்று வழிகள் அவை:
1) மற்றவர்களைவிட அதிகமாக தெரிந்துகொள்ளுங்கள்.
2) மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்.
3) மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.

                                                   _(((())))_

வியாழன், 23 ஏப்ரல், 2015

கொத்தமல்லி ரசம்




கொத்தமல்லி ரசம் வைக்க தேவையான பொருட்கள்:

அரைக்க:

கொத்தமல்லி தழை.......1 கைப்பிடியளவு

கறிவேப்பிலை..........4 இணுக்கு

பூண்டு.........10 பற்கள்

மிளகு.........10

சீரகம்..........1/2 மேசைக்கரண்டி

தாளிக்க:

சின்னவெங்காயம்......1 பொடியாக நறுக்கவும்

வறமிளகாய்....1 காரத்திற்கேற்ப

கறிவேப்பிலை.......1 இணுக்கு

கடலை எண்ணைய்....1/2 தேக்கரண்டி

கடுகு..சிறிது

உப்பு........தேவையான அளவு.

அரைக்க கொடுத்தவற்றை அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.
தாளிக்கவேண்டியவற்றைப் போட்டு வதக்கவும்.
அரைத்த விழுதினை போட்டு தேவையான அளவு நீர் விடவும்.
உப்பு சரிபார்க்கவும்.
கொதிக்காமல் , ரசம் நுரைத்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
கொதித்தால் ரசம் ருசி மாறிவிடும்.
விருப்பப்பட்டால் பெருங்காயம் சேர்க்கவும். நான் சேர்க்கவில்லை.


சூடான சாதத்தை குழைய பிசைந்து ரசம் விட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

மூன்று விஷயங்களை நெடுநாட்களுக்கு மறைக்க முடியாது. அவை சூரியன், நிலா மற்றும் உண்மை.

புத்தர்.

                                                                 _(())_



இஞ்சி சட்னி







முதல்ல இஞ்சியோட மகிமையை பார்ப்போம். இஞ்சி வெறும் ருசிக்காக மட்டுமே சேர்க்கப்படும் பொருள் கிடையாது. ஒரு துண்டு இஞ்சிய ஒரு பெரிய டம்ளர் நீரில் தட்டிப்போட்டு கூட கொஞ்சம் வறமல்லி ( தனியா) போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி குடிச்சா தலைவலி, உடல் அசதி பற்ந்து போய்டும்.

நல்லா மூக்கு முட்ட சாப்பிடுற நமக்கு எப்படி அதெல்லாம் ஜீரணமாகுதுனா, இஞ்சி சேர்த்த உணவுப்பண்டங்கள் தான் நாம் பெரும்பாலும் உண்ணுகிறோம்.

ஸோ இதிலிருந்து என்ன தெரிதுனா, இஞ்சி ஜீரணமண்டலத்த தூண்டிவிட்டு நல்லா வேலை வாங்கிடுது.
மூட்டுவலி உள்ளவங்க தினப்படி சமையலில் இஞ்சி தவறாமல் சேர்த்து வந்தால் நல்ல பலனை எய்தலாம்.
கரும்பு ஜூஸ் குடிக்கும் போது அதில ஒரு துண்டு இஞ்சி சேர்த்து பிழிஞ்சு கொடுப்பாங்க. அது அவ்வளவு ருசியா இருக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இஞ்சியை முடிந்தவரை தவிர்க்காமல் இருக்கலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைப்பதில் இஞ்சி பெரும் பங்காற்றுகிறது.
அதற்காக அதிகப்படியாக சேர்த்துக்கொள்வது ஆகாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமேயானாலும் நஞ்சுதான் என்பது நமக்கெல்லாம் தெரியாதா என்ன? இருந்தாலும் ஒரு பேச்சுக்கு சொல்லிவைத்தேன்!!

சரி இஞ்சி சட்னி எப்படி தயாரிப்பதுனு தெரிஞ்சுக்கலாம்  ஏறுங்க வண்டில...

 எறங்குங்க எல்லாரும், இஞ்சி சட்னி தொழில்நுட்ப நிலையம் வந்தாச்சு!!

தேவையான பொருட்களை வரிசையா எடுத்து எத எத என்னென்ன செய்யணுமோ, அத அத அதெல்லாம் செய்து, இதோ இந்த கலனில் போட்டு எண்ணைய ஊத்தி வதக்கிக்கோணும்..

எதை எதைனு சொல்றேன் கேளுங்க,

பெரியவெங்காயம் 2 எடுத்து தோலுரித்து சதரமா வெட்டிக்கணும்.
தக்காளி 1 எடுத்து அதைய நீள வாக்கில வெட்டிக்கணும்.
 100 கிராம் இஞ்சியை துண்டாக வெட்டிக்கொள்ளவும்.

பூண்டு 4 பற்கள் தோலுரித்து வைக்கவும்.

கறிவேப்பிலை 1 கைப்பிடி அளவு.

சீரகம் அரை தேக்கரண்டி.

மல்லிவிதை 1 தேக்கரண்டி.

வறமிளகாய் 2.

கடலைப்பருப்பு, வெள்ளுழுந்து பருப்பு தலா 2 மேசைக்கரண்டி.

புளி சிறிய நெல்லிக்காய் அளவும்.

தேங்காய் 1 மூடி (நடுத்தர அளவு).

தேங்காயை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் வரிசைக்கிரமமாக எண்ணையில் போட்டு வதக்கவும்.

முதலில் கடலை, வெள்ளுழுந்து பருப்பு, பின்னர் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, வறமிளகாய், சீரகம், மல்லிவிதை. சூடு ஆறுவதற்கு முன்பாக புளியை இவற்றினுள் ஒளித்து வைக்கவேண்டும்.
தேங்காய், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்தெடுத்தால் இஞ்சி சட்னி தயார்!!.






சுவையும், மணமும், குணமும் நிறைந்த இஞ்சி சட்னியை சாதம், இட்லி, தோசை, பணியாரம் அனைத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

சிந்திப்பதும் அதனை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால் சிறிது காலத்தில் சிந்திப்பதே மறந்துவிடும்.

                                                      _()_()_()_()_

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

முருங்கைக்கீரை கோதுமை பக்கோடா






முருங்கைக்கீரை கோதுமை பக்கோடா செய்வதற்கு மிகவும் எளிதான பலகாரம். சத்துக்கள் ஏராளமான முருங்கைமரத்தை அதில் உருவாகும் மொசுப்புழுவிற்கு பயந்தே வீட்டில் வளர்க்கமுடியவில்லை :(
கடையிலும் அடிக்கடி முருங்கைக்கீரை கிடைப்பதில்லை. "அத்தி பூத்தாற் போல" அருகில் உள்ள கடையில் கிடைக்கும். அப்பொழுதெல்லாம் சாம்பார், ராகி மற்றும் கோதுமை பக்கோடா செய்து அசத்தி விடுவேன்.





தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை...........1 கப் (அழுத்தி போடவும்)

கோதுமை மாவு...........2 கப்

இராகிமாவு..........1கப்

பொட்டுக்கடலைமாவு....1/2 கப்

வறுத்த வேர்க்கடலை.......1/2 கப்

சீரகம்..........1 மேசைக்கரண்டி

வறமிளகாய்........4 (காரத்திற்கேற்ப)

கறிவேப்பிலை.......5 இணுக்கு

பெரிய வெங்காயம்....2

கடலை எண்ணைய்......பொரித்தெடுக்க

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக்கீரையை குச்சிகள் இல்லாமல் ஒவ்வொரு இலையாக பறித்து எடுக்கவும்.
பழுத்த இலைகளை கண்டிப்பாக அகற்றிவிடவேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்பட ஏதுவாகும்.
புழு பூச்சிகளற்ற இலைகளை நீரில் போட்டு நன்கு அலசி, நீரில்லாமல் எடுத்து வைக்கவேண்டும்.
கறிவேப்பிலையை கழுவி பொடியாக நறுக்கவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.

பொட்டுக்கடலையுடன் வறமிளகாய் மற்றும் அரை தேக்கரண்டி சீரகத்தைப் போட்டு மிக்ஸி சின்ன ஜாரில் நைசாக அரைத்து எடுக்கவும். மிளகாய், சீரகம் நன்கு அரைபடாமல் ஒண்ணா ரண்டா இருந்தாலும் பரவாயில்லை. கடலை அரைபட்டால் போதும்.

அரைக்கும் முன்பாக 2 மேசைக்கரண்டி பொட்டுக்கடலையினை தனியாக எடுத்து வைக்கவும்.
 வறுத்த வேர்க்கடலையினை ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.

அனைத்தையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் கடலை எண்ணைய் ஊற்றவும்.
எண்ணைய் காய்ந்ததா என சிறு கிள்ளு மாவினை போடவும். மாவு எண்ணையில் குதித்தெழுந்தால் காய்ந்துவிட்டது என்று அர்த்தம்.

மாவினை சிறு சிறு கிள்ளுகளாக போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

சுவையான சத்து நிரம்பிய கோதுமை மாவு பக்கோடா தயார்.



                                            ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை அதே போல் வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் கிட்டிவிடாது.

அரிஸ்டாட்டில்.

                                                _()_()_()_()_. 


திங்கள், 20 ஏப்ரல், 2015

தேங்காய் சட்னி





 தேங்காய் 1 மூடி துருவிக்கொள்ளவும்.

பச்சைமிளகாய் ஒன்றினை நான்காக வெட்டி விதைகளை அகற்றி வைக்கவும்.

கறிவேப்பில்லை 2 இணுக்கு உருவிவைக்கவும்.

பூண்டு 2 பல் தோல் நீக்கி வைக்கவும்.

இஞ்சி சிறுதுண்டு தோல் நீக்கிவைக்கவும்.

இவற்றுடன் பொட்டுக்கடலை 2மேசைக்கரண்டி ,தேவையான அளவு உப்பு  ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.





வாணலியில் 1 மேசைக்கரண்டி கடலை எண்ணைய் விட்டு சூடானவுடன், கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போட்டு மொறு மொறுப்பானவுடன் அரைத்த சட்னியில் கலக்கி பரிமாறவும்.


சுவையான தேங்காய் சட்னி தயார்!!

இட்லி, தோசை, பணியாரம், வெண்பொங்கலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். பூரி செய்தாலும் தேங்காய் சட்னி எங்கள் வீட்டில் செய்வது வழக்கம். அனைவருக்கும் பிடித்தமான ஒன்று!!.

                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

ஒருவர் உன்னை உயர்த்திப் பேசும்போது விழிப்பாய் இரு.  உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம்.

                                                              _()_()_()_()_.

 

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

பாசிப்பருப்பு தோசை







பாசிப்பருப்பு தோசை மிக விரைவில் செய்திடலாம். ஒரு மணி நேரம்கூட எடுக்காது பாசிப்பருப்பு ஊறுவதற்கு. பாசிப்பயறிலும் செய்யலாம். ஆனால் அது நன்கு ஊறி அரைக்கும் பதம் வருவதற்கே நேரம் பிடிக்கும்.
திடீரென தோசை சாப்பிடணும், ஆனால் ஃப்ரிட்ஜில் மாவு இல்லை என்னும் போது கைகொடுக்கும் ஆபத்பாந்தவன் இந்த பாசிப்பருப்பு தோசை. ஃப்ரிட்ஜ்ல மாவு இல்லேனா, மனசுல ஒருவித வெறுமை தோன்றும் பாருங்க, அந்த வெறுமை இனிமே வேண்டவே வேண்டாம்!! இருக்கவே இருக்கு பாசிப்பருப்பு தோசை.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு.......250 கிராம்

பச்சரிசி மாவு........4 மேசைக்கரண்டி

உப்பு.......தேவையான அளவு


பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மல்லி இலை, கறிவேப்பிலை போட்டு கலக்கிக்கொள்ளலாம்.

செய்முறை:


பாசிப்பருப்பை நன்கு கழுவிவிட்டு அரைமணிமுதல் ஒருமணிநேரம் வரை ஊறவிடவும்.
 நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

 நன்கு அரைப்பட்டவுடன் வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்.

 மாற்றிய மாவுடன் பச்சரிமாவு சேர்த்து நன்கு கலக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.



வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவிடவும்.
இரண்டு பக்கமும் வேகவிட்டு, முறுகலாக எடுத்து பரிமாறவும். அரிசி மாவு தோசையை விட மிருதுவாகவும், தோசைக்கல்லில் ஒட்டாமலும் வரும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
மிகவும் சத்து நிறைந்ததும் கூட, பெரியவர்கள் முதல் சிறுவர் வரை விரும்பி உண்பர்.

                                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

கடந்த காலத்தை மறந்துவிடு, உள்ளத்தில் உறுதியுடன் நிகழ்காலத்தில் கடமை செய். 
உனது தோல்விக்காக யார்மீதும் ஆத்திரப்படாதே! நீ செய்வதை திருந்தச் செய்.
தற்பெருமை சிறிதும் வேண்டாம், ஆணவம் இருக்கும் வரை ஆண்டவனை நெருங்க முடியாது.
மனதிற்கு போதுமான வேலை கொடுக்காவிட்டால், அது சஞ்சலப்படத் தொடங்கிவிடும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, தினமும் சிறிது நேரமாவது படிக்க முயற்சி செய்.

ஸ்ரீ அன்னை.

                                                                     _()()()()_

வியாழன், 2 ஏப்ரல், 2015

டபுள் பீன்ஸ் மற்றும் பட்டர் பீன்ஸ் குழம்பு


கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக கோத்தகிரி சென்றிருந்தோம். அங்கு கொடநாடு வ்யூ பாயிண்டில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் கடை ஒன்று இருந்தது. அங்கு டபுள்பீன்ஸ் மற்றும் தட்டைக்காயை போன்ற உருவ ஒற்றுமை, ஆனால் அளவினில் பெரிதாக இருந்த காய் இரண்டும் விற்பனைக்காக வைத்திருந்தார்கள்.
அவங்களுக்கும் பெயர் தெரில, டபுள்பீன்ஸ் மட்டுமே தெரிந்தது. கிட்டத்தட்ட ரஜ்மா போன்றே ஆனால் ரஜ்மா அல்ல.

(எங்கள் குடும்பத்துக்கே ஆகாதது ரஜ்மா, சாப்பிட்டால் உடனே காய்ச்சல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். வாந்தி வந்திட்டாக்கூட பரவால, வரூ ஊ ஊ..ஆனா வராதூ ஊ ஊ என்பது போல பாசாங்கு காட்டியே ஆளை ஒரு வழி பண்ணிடும். ரஜ்மாக்கு எங்க மேல அப்படி என்னதான் கோவமோ தெரில. இதனைக் கூட அந்த நினைப்புலயே வாங்கி கொஞ்சமா சோதனை செய்ததில் இவங்களுக்கு எங்களை பிடிச்சிருச்சுனு தெரிஞ்சுது, அப்பரமாத்தான் மேற்படி பேச்சுவார்த்தைலாம் நடத்தினோம்).

 நான் மலைத்தட்டை என பெயர் வைத்துக்கொண்டேன். பெயர் தெரிந்தவர்கள் கூறுங்களேன்!!

பெயர் தெரிந்துவிட்டது:

 இதன் பெயர் பட்டர் பீன்ஸ் என்பதை அறுசுவை தோழி இந்திரா மூலம் அறிந்து கொண்டேன். நன்றி இந்திரா.

இரண்டிலும் தலா அரைக்கிலோ வாங்கினது, சாம்பார், பொரியல், அரைச்சுவெச்ச குழம்பு, கீ ரைஸ்னு விதவிதமாக சமைத்து தீர்த்தேன்.
இன்னிக்கு நாம பார்க்கப்போறது, அரச்சுவெச்ச குழம்பூ :))

காளான் குழம்பு எப்படி வைப்பமோ அதே போன்று இதனை வைத்தேன்.

 தேவையான பொருட்கள்:

டபுள்பீன்ஸ் மற்றும் மலைத்தட்டை கொட்டைகள்...........1கப்

தக்காளி.........1

அரைக்க:

தேங்காய்........1மூடி

பொட்டுக்கடலை......1 மேசைக்கரண்டி

இஞ்சி.......சிறுதுண்டு

பூண்டு..........2 பற்கள்

வதக்கி அரைக்க:

சின்னவெங்காயம்........கால்கிலோ

வறமிளகாய்..........3 (காரத்திற்கேற்ப)

மல்லி/ தனியா......2 மேசைகரண்டி

சீரகம்.......1/4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு.......1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை...........4 இணுக்கு

சோம்பு.......2 தேக்கரண்டி

 கிராம்பு.....2

பட்டை....சிறுதுண்டு

கசகசா......1/2 தேக்கரண்டி

ஏலக்காய்....2 (விருப்பமிருந்தால்)

கடலை எண்ணைய் ........1 மேசைக்கரண்டி

கடுகு, உளுந்து தாளிக்க.

உப்பு .......தேவைக்கேற்ப

செய்முறை:

சின்னவெங்காயத்தை தோலுரிக்கவும்.

தேங்காயை துருவி வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கவும்.

இஞ்சி, பூண்டை தோலுரித்து நான்காக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானவுடன் முதலில் கடலைப்பருப்பை போட்டு லேசாக சிவந்தவுடன், சின்னவெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்னர் கறிவேப்பிலை, இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் மல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, கசகசா போட்டு ஒருநிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை போட்டு ஒருசுற்றுவிட்டு, பிறகு வதக்கியவற்றைப் போட்டு நன்கு அரைக்கவும்.

குக்கரில் மீதி எண்ணைய் விட்டு காய்ந்தவுடன், கடுகு போட்டு பொரிந்தவுடன் ஒரு சின்னவெங்காயம் , கறிவேப்பிலை தாளித்து தக்காளியைப் போட்டு குழையவிடவும். காரம் அதிகம் விரும்பும் மக்கள் இவ்விடத்தில் இரண்டு ப.மிளகாய்களை அரிந்து சேர்க்கலாம்.

தோலுரித்த கொட்டைவகைகளைப் போட்டு வதக்கி, அரைத்த விழுதினை ஊற்றவும்.
மஞ்சள் பொடி சிறிது போடவும். தேவையான அளவு நீர்விட்டு குக்கரை மூடவும்.
குக்கரின் மேல் ஆவி வந்தவுடன் வெயிட் போடவும்.

மூன்று சப்தம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.

ஆவி அடங்கியபின்பு குக்கரை திறந்து, குழம்பினை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.












சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பணியாரம் அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள சுவையானதொரு குழம்பாகும்.

                                              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இது போல் வாழ்க்கை போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும் போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

                                                    _()_()_()_()_

புதன், 1 ஏப்ரல், 2015

வரகு இட்லி






கால்படி

வரகு சிறுதானிய வகையைச் சேர்ந்தது. இது புன்செய் நிலத்தில் பயிரடப்படும் தானியம். அதாவது மேட்டாங்காட்டில்தான் இதன் விளைச்சல் இருக்கும். வானம் பார்த்த பூமியைத்தான் புன்செய் நிலமென்று கூறுவர். வரகில் உடலுக்கு தேவையான சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன.

வரகு இட்லி 

தேவையான பொருட்கள்:

வரகு........1 படி

உளுந்து.......1/4 படி

வெந்தயம்..........1 சேரை (ஒரு கை நான்கு விரல்கள் உள்ள பகுதியில் பாதியளவு, விரலில் இருக்கும் இரண்டாம் ரேகைவரை)

செய்முறை:

வரகினை நன்கு கழுவி, கல் போக அரித்து எடுத்து, மூழ்கும் வரை நீர்விட்டு ஊறவைக்க வேண்டும்.
மூன்றிலிருந்து நான்கு மணிநேரங்கள் வரை ஊறினால் போதும்.
உளுந்தை நன்கு கழுவி (குண்டு உளுந்தாக இருக்கும் பட்சத்தில்) மூழ்கும் வரை நீர்விட்டு, தட்டுப்போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

க்ரைண்டரில் முதலில் உளுந்தை அரைத்துவிட்டு பிறகு ஊறிய வரகினைப் போட்டு நன்கு அரைத்து எடுத்து வைக்கவும்.

சுமார் எட்டு மணிநேரங்கள் வரை வைத்திருக்கவும். அரைத்த மாவானது புளித்து மேலெழும்பியவாறு வந்திருக்கும்.

இட்லிப் பாத்திரத்தில் கால் பகுதி நீர்விட்டு, சூடானவுடன் இட்லித்தட்டுக்களில், அதற்கான துணியை நன்கு கழுவி இறுகப்பிழிந்து போட்டு, மாவினை ஊற்றவேண்டும்.

வெந்துவிட்டதா என கறிவேப்பிலைக் குச்சியால் குத்திப் பார்க்கவும்.

மாவு ஒட்டாமல் வந்தால், வெந்துவிட்டது என அர்த்தம்.

கொஞ்சமாக அவ்விட்டிலிகளின் மேல் நீரினை தெளித்து, தட்டுடன் எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் குப்புற போடவும்.
தட்டினை எடுத்து விட்டு, இட்லி துணியை மெதுவாக எடுக்கவும். இட்லி துணியுடன் ஒட்டிக்கொண்டு வந்தால், துணி காய்ந்து போயிருக்கும் என்று அர்த்தம்.
கொஞ்சமாக தண்ணீரால்  (கைகளால்) இட்லித்துணியை  நனைத்து, பிறகு எடுத்தால் ஒட்டாமல் வரும்.

பிடித்த சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

சத்து நிறைந்த வரகு இட்லி தயார்.




அடிப்பகுதியில் நின்ற கற்கள்

வரகு இட்லி பீட்ரூட் சட்னியுடன் சுவையாக இருந்தது.

எவ்வளவுதான் சுத்தம் செய்தது என்று கூறினாலும், எந்தக் கடையில் வாங்கினாலும், சிறுதானியங்களில் சிறு சிறு கற்கள் இருக்கவே செய்கின்றது. அதனால் மிக கவனமாக பார்த்து சமைக்கவேண்டும்.
 தோசை, பணியாரமும் இந்த மாவிலேயே செய்து கொள்ளலாம்.

                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும், வேள்வியாகவும், ஆராதனையாகவும், அர்ப்பணமாகவும், தன்னம்பிக்கையுடன் செய்தால்தான் வெற்றி வாசல் திறக்கும்.

ஸ்ரீ. அரவிந்தர்.

                                                                  _()_()_()_()_