வெள்ளி, 3 ஏப்ரல், 2015

பாசிப்பருப்பு தோசை







பாசிப்பருப்பு தோசை மிக விரைவில் செய்திடலாம். ஒரு மணி நேரம்கூட எடுக்காது பாசிப்பருப்பு ஊறுவதற்கு. பாசிப்பயறிலும் செய்யலாம். ஆனால் அது நன்கு ஊறி அரைக்கும் பதம் வருவதற்கே நேரம் பிடிக்கும்.
திடீரென தோசை சாப்பிடணும், ஆனால் ஃப்ரிட்ஜில் மாவு இல்லை என்னும் போது கைகொடுக்கும் ஆபத்பாந்தவன் இந்த பாசிப்பருப்பு தோசை. ஃப்ரிட்ஜ்ல மாவு இல்லேனா, மனசுல ஒருவித வெறுமை தோன்றும் பாருங்க, அந்த வெறுமை இனிமே வேண்டவே வேண்டாம்!! இருக்கவே இருக்கு பாசிப்பருப்பு தோசை.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு.......250 கிராம்

பச்சரிசி மாவு........4 மேசைக்கரண்டி

உப்பு.......தேவையான அளவு


பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மல்லி இலை, கறிவேப்பிலை போட்டு கலக்கிக்கொள்ளலாம்.

செய்முறை:


பாசிப்பருப்பை நன்கு கழுவிவிட்டு அரைமணிமுதல் ஒருமணிநேரம் வரை ஊறவிடவும்.
 நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

 நன்கு அரைப்பட்டவுடன் வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்.

 மாற்றிய மாவுடன் பச்சரிமாவு சேர்த்து நன்கு கலக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.



வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவிடவும்.
இரண்டு பக்கமும் வேகவிட்டு, முறுகலாக எடுத்து பரிமாறவும். அரிசி மாவு தோசையை விட மிருதுவாகவும், தோசைக்கல்லில் ஒட்டாமலும் வரும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
மிகவும் சத்து நிறைந்ததும் கூட, பெரியவர்கள் முதல் சிறுவர் வரை விரும்பி உண்பர்.

                                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

கடந்த காலத்தை மறந்துவிடு, உள்ளத்தில் உறுதியுடன் நிகழ்காலத்தில் கடமை செய். 
உனது தோல்விக்காக யார்மீதும் ஆத்திரப்படாதே! நீ செய்வதை திருந்தச் செய்.
தற்பெருமை சிறிதும் வேண்டாம், ஆணவம் இருக்கும் வரை ஆண்டவனை நெருங்க முடியாது.
மனதிற்கு போதுமான வேலை கொடுக்காவிட்டால், அது சஞ்சலப்படத் தொடங்கிவிடும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, தினமும் சிறிது நேரமாவது படிக்க முயற்சி செய்.

ஸ்ரீ அன்னை.

                                                                     _()()()()_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்