புதன், 1 ஏப்ரல், 2015

வரகு இட்லி






கால்படி

வரகு சிறுதானிய வகையைச் சேர்ந்தது. இது புன்செய் நிலத்தில் பயிரடப்படும் தானியம். அதாவது மேட்டாங்காட்டில்தான் இதன் விளைச்சல் இருக்கும். வானம் பார்த்த பூமியைத்தான் புன்செய் நிலமென்று கூறுவர். வரகில் உடலுக்கு தேவையான சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன.

வரகு இட்லி 

தேவையான பொருட்கள்:

வரகு........1 படி

உளுந்து.......1/4 படி

வெந்தயம்..........1 சேரை (ஒரு கை நான்கு விரல்கள் உள்ள பகுதியில் பாதியளவு, விரலில் இருக்கும் இரண்டாம் ரேகைவரை)

செய்முறை:

வரகினை நன்கு கழுவி, கல் போக அரித்து எடுத்து, மூழ்கும் வரை நீர்விட்டு ஊறவைக்க வேண்டும்.
மூன்றிலிருந்து நான்கு மணிநேரங்கள் வரை ஊறினால் போதும்.
உளுந்தை நன்கு கழுவி (குண்டு உளுந்தாக இருக்கும் பட்சத்தில்) மூழ்கும் வரை நீர்விட்டு, தட்டுப்போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

க்ரைண்டரில் முதலில் உளுந்தை அரைத்துவிட்டு பிறகு ஊறிய வரகினைப் போட்டு நன்கு அரைத்து எடுத்து வைக்கவும்.

சுமார் எட்டு மணிநேரங்கள் வரை வைத்திருக்கவும். அரைத்த மாவானது புளித்து மேலெழும்பியவாறு வந்திருக்கும்.

இட்லிப் பாத்திரத்தில் கால் பகுதி நீர்விட்டு, சூடானவுடன் இட்லித்தட்டுக்களில், அதற்கான துணியை நன்கு கழுவி இறுகப்பிழிந்து போட்டு, மாவினை ஊற்றவேண்டும்.

வெந்துவிட்டதா என கறிவேப்பிலைக் குச்சியால் குத்திப் பார்க்கவும்.

மாவு ஒட்டாமல் வந்தால், வெந்துவிட்டது என அர்த்தம்.

கொஞ்சமாக அவ்விட்டிலிகளின் மேல் நீரினை தெளித்து, தட்டுடன் எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் குப்புற போடவும்.
தட்டினை எடுத்து விட்டு, இட்லி துணியை மெதுவாக எடுக்கவும். இட்லி துணியுடன் ஒட்டிக்கொண்டு வந்தால், துணி காய்ந்து போயிருக்கும் என்று அர்த்தம்.
கொஞ்சமாக தண்ணீரால்  (கைகளால்) இட்லித்துணியை  நனைத்து, பிறகு எடுத்தால் ஒட்டாமல் வரும்.

பிடித்த சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

சத்து நிறைந்த வரகு இட்லி தயார்.




அடிப்பகுதியில் நின்ற கற்கள்

வரகு இட்லி பீட்ரூட் சட்னியுடன் சுவையாக இருந்தது.

எவ்வளவுதான் சுத்தம் செய்தது என்று கூறினாலும், எந்தக் கடையில் வாங்கினாலும், சிறுதானியங்களில் சிறு சிறு கற்கள் இருக்கவே செய்கின்றது. அதனால் மிக கவனமாக பார்த்து சமைக்கவேண்டும்.
 தோசை, பணியாரமும் இந்த மாவிலேயே செய்து கொள்ளலாம்.

                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும், வேள்வியாகவும், ஆராதனையாகவும், அர்ப்பணமாகவும், தன்னம்பிக்கையுடன் செய்தால்தான் வெற்றி வாசல் திறக்கும்.

ஸ்ரீ. அரவிந்தர்.

                                                                  _()_()_()_()_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்