முருங்கைக்கீரை கோதுமை பக்கோடா செய்வதற்கு மிகவும் எளிதான பலகாரம். சத்துக்கள் ஏராளமான முருங்கைமரத்தை அதில் உருவாகும் மொசுப்புழுவிற்கு பயந்தே வீட்டில் வளர்க்கமுடியவில்லை :(
கடையிலும் அடிக்கடி முருங்கைக்கீரை கிடைப்பதில்லை. "அத்தி பூத்தாற் போல" அருகில் உள்ள கடையில் கிடைக்கும். அப்பொழுதெல்லாம் சாம்பார், ராகி மற்றும் கோதுமை பக்கோடா செய்து அசத்தி விடுவேன்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை...........1 கப் (அழுத்தி போடவும்)
கோதுமை மாவு...........2 கப்
இராகிமாவு..........1கப்
பொட்டுக்கடலைமாவு....1/2 கப்
வறுத்த வேர்க்கடலை.......1/2 கப்
சீரகம்..........1 மேசைக்கரண்டி
வறமிளகாய்........4 (காரத்திற்கேற்ப)
கறிவேப்பிலை.......5 இணுக்கு
பெரிய வெங்காயம்....2
கடலை எண்ணைய்......பொரித்தெடுக்க
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக்கீரையை குச்சிகள் இல்லாமல் ஒவ்வொரு இலையாக பறித்து எடுக்கவும்.
பழுத்த இலைகளை கண்டிப்பாக அகற்றிவிடவேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்பட ஏதுவாகும்.
புழு பூச்சிகளற்ற இலைகளை நீரில் போட்டு நன்கு அலசி, நீரில்லாமல் எடுத்து வைக்கவேண்டும்.
கறிவேப்பிலையை கழுவி பொடியாக நறுக்கவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
பொட்டுக்கடலையுடன் வறமிளகாய் மற்றும் அரை தேக்கரண்டி சீரகத்தைப் போட்டு மிக்ஸி சின்ன ஜாரில் நைசாக அரைத்து எடுக்கவும். மிளகாய், சீரகம் நன்கு அரைபடாமல் ஒண்ணா ரண்டா இருந்தாலும் பரவாயில்லை. கடலை அரைபட்டால் போதும்.
அரைக்கும் முன்பாக 2 மேசைக்கரண்டி பொட்டுக்கடலையினை தனியாக எடுத்து வைக்கவும்.
வறுத்த வேர்க்கடலையினை ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
அனைத்தையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் கடலை எண்ணைய் ஊற்றவும்.
எண்ணைய் காய்ந்ததா என சிறு கிள்ளு மாவினை போடவும். மாவு எண்ணையில் குதித்தெழுந்தால் காய்ந்துவிட்டது என்று அர்த்தம்.
மாவினை சிறு சிறு கிள்ளுகளாக போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
சுவையான சத்து நிரம்பிய கோதுமை மாவு பக்கோடா தயார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை அதே போல் வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் கிட்டிவிடாது.
அரிஸ்டாட்டில்.
_()_()_()_()_.
நான் கோதுமை மாவு யூஸ் பண்ணி பஜ்ஜி போட்டிருக்கேன் அருள். பக்கோடா போட்டதில்லை.
பதிலளிநீக்குஹெல்த்தி பக்கோடா. :))
நான் இதுவரை கோதுமை மாவில் பஜ்ஜி போட்டதில்லை. இனி முயற்சி செய்து பார்க்கிறேன். பக்கோடா அடிக்கடி செய்வதுண்டு. மிக்க நன்றி வாணி :)
பதிலளிநீக்கு