கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக கோத்தகிரி சென்றிருந்தோம். அங்கு கொடநாடு வ்யூ பாயிண்டில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் கடை ஒன்று இருந்தது. அங்கு டபுள்பீன்ஸ் மற்றும் தட்டைக்காயை போன்ற உருவ ஒற்றுமை, ஆனால் அளவினில் பெரிதாக இருந்த காய் இரண்டும் விற்பனைக்காக வைத்திருந்தார்கள்.
அவங்களுக்கும் பெயர் தெரில, டபுள்பீன்ஸ் மட்டுமே தெரிந்தது. கிட்டத்தட்ட ரஜ்மா போன்றே ஆனால் ரஜ்மா அல்ல.
(எங்கள் குடும்பத்துக்கே ஆகாதது ரஜ்மா, சாப்பிட்டால் உடனே காய்ச்சல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். வாந்தி வந்திட்டாக்கூட பரவால, வரூ ஊ ஊ..ஆனா வராதூ ஊ ஊ என்பது போல பாசாங்கு காட்டியே ஆளை ஒரு வழி பண்ணிடும். ரஜ்மாக்கு எங்க மேல அப்படி என்னதான் கோவமோ தெரில. இதனைக் கூட அந்த நினைப்புலயே வாங்கி கொஞ்சமா சோதனை செய்ததில் இவங்களுக்கு எங்களை பிடிச்சிருச்சுனு தெரிஞ்சுது, அப்பரமாத்தான் மேற்படி பேச்சுவார்த்தைலாம் நடத்தினோம்).
நான் மலைத்தட்டை என பெயர் வைத்துக்கொண்டேன். பெயர் தெரிந்தவர்கள் கூறுங்களேன்!!
பெயர் தெரிந்துவிட்டது:
இதன் பெயர் பட்டர் பீன்ஸ் என்பதை அறுசுவை தோழி இந்திரா மூலம் அறிந்து கொண்டேன். நன்றி இந்திரா.
இரண்டிலும் தலா அரைக்கிலோ வாங்கினது, சாம்பார், பொரியல், அரைச்சுவெச்ச குழம்பு, கீ ரைஸ்னு விதவிதமாக சமைத்து தீர்த்தேன்.
இன்னிக்கு நாம பார்க்கப்போறது, அரச்சுவெச்ச குழம்பூ :))
காளான் குழம்பு எப்படி வைப்பமோ அதே போன்று இதனை வைத்தேன்.
தேவையான பொருட்கள்:
டபுள்பீன்ஸ் மற்றும் மலைத்தட்டை கொட்டைகள்...........1கப்
தக்காளி.........1
அரைக்க:
தேங்காய்........1மூடி
பொட்டுக்கடலை......1 மேசைக்கரண்டி
இஞ்சி.......சிறுதுண்டு
பூண்டு..........2 பற்கள்
வதக்கி அரைக்க:
சின்னவெங்காயம்........கால்கிலோ
வறமிளகாய்..........3 (காரத்திற்கேற்ப)
மல்லி/ தனியா......2 மேசைகரண்டி
சீரகம்.......1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு.......1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை...........4 இணுக்கு
சோம்பு.......2 தேக்கரண்டி
கிராம்பு.....2
பட்டை....சிறுதுண்டு
கசகசா......1/2 தேக்கரண்டி
ஏலக்காய்....2 (விருப்பமிருந்தால்)
கடலை எண்ணைய் ........1 மேசைக்கரண்டி
கடுகு, உளுந்து தாளிக்க.
உப்பு .......தேவைக்கேற்ப
செய்முறை:
சின்னவெங்காயத்தை தோலுரிக்கவும்.
தேங்காயை துருவி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
இஞ்சி, பூண்டை தோலுரித்து நான்காக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானவுடன் முதலில் கடலைப்பருப்பை போட்டு லேசாக சிவந்தவுடன், சின்னவெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்னர் கறிவேப்பிலை, இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் மல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, கசகசா போட்டு ஒருநிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை போட்டு ஒருசுற்றுவிட்டு, பிறகு வதக்கியவற்றைப் போட்டு நன்கு அரைக்கவும்.
குக்கரில் மீதி எண்ணைய் விட்டு காய்ந்தவுடன், கடுகு போட்டு பொரிந்தவுடன் ஒரு சின்னவெங்காயம் , கறிவேப்பிலை தாளித்து தக்காளியைப் போட்டு குழையவிடவும். காரம் அதிகம் விரும்பும் மக்கள் இவ்விடத்தில் இரண்டு ப.மிளகாய்களை அரிந்து சேர்க்கலாம்.
தோலுரித்த கொட்டைவகைகளைப் போட்டு வதக்கி, அரைத்த விழுதினை ஊற்றவும்.
மஞ்சள் பொடி சிறிது போடவும். தேவையான அளவு நீர்விட்டு குக்கரை மூடவும்.
குக்கரின் மேல் ஆவி வந்தவுடன் வெயிட் போடவும்.
மூன்று சப்தம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.
ஆவி அடங்கியபின்பு குக்கரை திறந்து, குழம்பினை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இது போல் வாழ்க்கை போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும் போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
_()_()_()_()_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்