சந்தவை இது ஒரு மிகப்பிரபலமான கொங்குநாட்டு உணவு வகையாகும். திருமணம் முடிந்து பெண்வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்கு கட்டாயம் சந்தவை வைத்து பரிமாறுவது தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.
சந்தவை பிழியும் கருவியை 'சந்தவ மரம்' என்றே அழைப்பர். அந்தக்காலத்தில் மரத்தாலான சந்தவை பிழியும் கருவி பயன்படுத்தப் பட்டதால் அதனையே இன்று சில்வர் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) க்கும் பெயராக வைத்து அழைக்கப்படுகின்றது.
இனிப்பு சந்தவை கொஞ்சம் சாப்பிட்டாலே போதுமென்று தோன்றும். ஆனால் இது போன்று வெவ்வேறு விதமாக செய்தால் அனைவரும் விரும்பி உண்பர்.
எலுமிச்சை சந்தவை, தேங்காய் சந்தவை, காளான் சந்தவை, பனீர் சந்தவை ...என இன்னும் பலப்பல ருசிகளில் சந்தவைகள் தற்போது உணவகங்களிலும் கிடைக்கின்றது. ஆனா சேவைனுதான் சொல்றாங்க.
சேவையும் இதுவும் ஒண்ணுதானேன்லாம் எனக்கு தெரியாது.
அதேங் கேக்கிறீங்கோ, சேவைங்கிற உணவு பதார்த்தம் இருப்பதே எனக்கு வெகு நா கழிச்சுத்தா தெரிமுங்க. அதுவரைக்கும் சேவைனா சமூக சேவைதான் தெரியி. இப்பவும் சேவ குறிப்புக்கும் இதுக்கு நெறைய வித்வாசம் இருக்குதுனு நெனைக்கிறேன். இது எனக்கு மட்டும் இல்லீங், எங்கூர்லயே நெறைய பேருக்கு இந்த சேவை விசியம் தெரியாதுங். நாங்கலாம் சந்தவைனுதான் சொல்லுவோ.
நாம் தற்பொழுது பார்க்கப்போவது தக்காளியும் கேரட்டும் சேர்த்த சந்தவை :)
புழுங்கல் அரிசி......1/2 கிலோ
கேரட்.........2 (பெரியது)
தக்காளி.......4
சின்ன வெங்காயம்......25
வறமிளகாய்.......2
உப்பு தேவைக்கு
கடலெண்ணைய் தாளிப்பதற்கு
கடுகு, சீரகம், உளுந்துபருப்பு, கடலைப்பருப்பு
செய்முறை:
அரிசியை கழுவி மூழ்கும் வரை நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசியை நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும். கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.
கலவை நீர்க்க இருக்க கூடாது. மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது.
புளிக்க தேவையில்லை. அரைத்த உடனே பயன்படுத்த வேண்டும்.
இட்லிப்பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து பத்தவைக்கவும்.
இட்லித்தட்டில் இட்லிதுணையை நன்கு நனைத்து பிழிந்து போட்டு, அரைத்த மாவினை இட்லிகளாக ஊற்றி வேகவைக்கவும்.
வெந்த இட்லிகளை சூடாக இருக்கும் போதே சந்தவைமரத்தில் போட்டு பிழிந்து எடுக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
வறமிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி விதைகளை உதிர்த்து விட்டு வைக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கேரட்டை காய்சீவியில் பொடியாக சீவி வைக்கவும்.
அடுப்பில் வடசட்டியை வைத்து காய்ந்தவுடன், எண்ணைய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளுழுந்து பருப்பு போட்டு பொரியவிட்டு, சின்ன வெங்காயம், வறமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்னர் தக்காளி போட்டு வதக்கி, கேரட்டைப் போட்டு வதக்கவும்.
உப்பு சேர்க்கவும். அரைக்கும் போதும் உப்பு சேர்த்திருப்பதை மனதில் வைத்து போடவும்.
பின்னர் பிழிந்து வைத்த சந்தவையைப் போட்டு நன்கு கலக்கி விடவும்.
தக்காளி, கேரட் கலவையுடன் சந்தவை நன்கு கலந்து வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.
சுவையான கேரட் தக்காளி சந்தவை தயார்!
![]() |
சந்தவைமரம் |
![]() |
உள்ள இட்லியை வைத்து, மேலே இருக்கும் திருகினால் திருக வேண்டும் |
![]() |
அல்லைல ஒரு கம்பி தெரீது பாருங்க, அதுல கால் பெருவிரலால அமுத்திக்கிட்டு சுத்தோணும் :) முக்கோணத்துக்குள்ள புடிக்கிறாப்புல ஒரு நீள போசிய வெச்சுக்கிட்டா, தூசு கீசு படாம அழகா புழுஞ்சு எடுத்துக்கலாம் :) |
![]() |
அழகாக நூல் போல் சந்தவை கிடைக்கும் |
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
மகிழ்ச்சியின் ஒரு கதவு அடைபட்டால், அடுத்த கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடிய அந்தக் கதவையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காக திறக்கப்பட்ட மற்றொரு கதவை பார்க்க முடியாமல் போய்விடுகிறது.
ஹெலன் கெல்லர்
_((()))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்