தினையின் பெருமைகள்:
தேனும் தினைமாவும் முருகக்கடவுளுக்கு மிகவும் பிரசித்தமான நைவேத்தியம். பழனி போனா தினைமா வாங்காம வந்ததே இல்லை.
தினை மாவினை பூப்படைந்த பெண்களுக்கு திரட்டி(சடங்கு) செய்யும் பொழுது பச்சஓலை குடிசையுனுள் விட்டு , தினை மாவினை இடித்து வெல்லப்பாகினை சேர்த்து உருண்டைகளாக உருட்டி கொடுப்பது வழக்கம். இன்றும் இப்பழக்கம் பின்பற்றப்பட்டே வருகிறது. ஒரு மாற்றம் என்னனா, உரலில் இடிப்பதற்கு பதிலாக மிக்ஸியில் பொடித்து எடுக்கப்படுகின்றது.
தினை உடல்சூடு என்பதால் கர்ப்பகாலத்தில் பெண்கள் பயன்படுத்தக் கூடாது.
ஆனா குழந்தை பெற்றபின்பு தினை உணவை வழங்குவது, உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
தினை இட்லி:
தேவையான பொருட்கள்:
தினை.........4 கப்
உளுந்து........1 கப்
வெந்தயம்...1 மேசைக்கரண்டி
செய்முறை:
தினையை நன்கு கழுவி 4 மணிநேரம் மூழ்கும் வரை நீர் விட்டு ஊறவைக்க வேண்டும்.
உளுந்தையும் வெந்தயத்தையும் நன்கு கழுவில் மூழ்கும் வரை நீர் விட்டு ஃப்ரிட்ஜில் தினை ஊறவைக்கும் பொழுதே ஊறவைத்து விடலாம்.
மிக்ஸியில் (இந்த முறை மிக்ஸியில்தான் அரைத்தேன்) தினையைப் போடும் முன்பாக நன்கு அரித்து, சிறு சிறு கற்கள் இல்லாமல் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
உளுந்தை போட்டு பாதி அரைந்தவுடன் இரண்டு ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்க வேண்டும்.
மாவு நன்கு உபரியாகும்.
அரைத்த மாவினை உப்பு போட்டு கலக்கி எட்டு மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
மாவு அரைத்தவுடன் எடுத்து வைக்கும் பாத்திரத்தில் அரைவாசி அளவு இருக்கும் படி பார்த்துக் கொள்வது அவசியம்.
இல்லையேல் மாவு பொங்கி வழிந்துவிடும்.
இரவு அரைத்து வைத்தால் காலையில் இட்லி செய்ய ஏதுவாக இருக்கும்.
இட்லி பாத்திரத்தில் நீர்விட்டு, தட்டில் துணியை ந்னைத்து இறுக பிழிந்து போட்டு, குழிகளுக்குள் மாவினை ஊற்றி வேகவைத்து எடுக்க வேண்டும்.
தினை இட்லி தயார்!!
தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்!!
தினை பணியாரம்:
தேவையான (இட்லிக்கு அரைத்த மாதியே) மாவினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் காய்ந்த வடசட்டியில் ஒரு ஸ்பூன் கடலெண்ணய் விட்டு அதுவும் காய்ந்தவுடன் கடுகு, கடலைப் பருப்பு போட்டு பொரியவிட்டு அரிந்தவற்றைப் போட்டு நன்கு வதக்கி மாவில் கொட்டி நன்கு கலக்க வேண்டும். தேவையான் அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் கலக்கிய மாவினை ஸ்பூனால் ஊற்ற வேண்டும். மேலே சிறிது நெய்விடவேண்டும். (விரும்பினால்)
மூடிவைத்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.
பின்பு திருப்பி போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும்.
சுவையான தினை பணியாரம் தயார். விரும்பிய சட்னி, குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தினை சந்தவை:
2 கப் தினையை கல்நீக்கி, நன்கு களைந்து மூழ்கும் வரை நீர்விட்டு 4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு போட்டு கலக்கி, உடனே இட்லி பாத்திரத்தில் ஊற்றி இட்லிகளாக வேகவிட்டு எடுத்து சந்தவை மரத்தில் பிழிந்து எடுக்க வேண்டும்.
இனிப்பு சந்தவையாக வேண்டுமானால் தேங்காய் பால், மற்றும் நெய்யும் சர்க்கரையும் சேர்த்து உண்ணலாம்.
ஆவியில் வேக வைத்து எடுப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. தினை கெட்டி தன்மை உடையதாக இருப்பதன் காரணத்தால் பிழிவது கொஞ்சம் சிரமமாக இருந்தது.
இவையாவும் தினையரிசி கொண்டு தயாரிக்கப்படும் சிற்றுண்டிகளாகும்.
தினையரிசி கொண்டு இன்னும் பலப்பல உணவு பதார்த்தங்கள் செய்யலாம். இனி வரப்போகும் வாரங்களில் அவற்றைப் பார்ப்போம்!.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் ஒரே கருவி ஒழுக்கம் தான். அதை உயிராக மதித்து போற்றுங்கள்.
---கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
_(((())))_
ஆரோக்கியமான சுவையான குறிப்பு. அசத்துங்க. வீட்டார் எல்லாம் செளபாக்கியவான்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க ஜெய் :)
நீக்கு