நாம் என்னதான் பக்குவமாக செய்தாலும் கோவிலில் கொடுக்கும் பொங்கலுக்கு ஈடு இணை எதுவுமில்லை.
இது வீட்டில் எளிதாக செய்யக்கூடிய சர்க்கரை பொங்கல்.
தேவையான பொருட்கள்:
சோனா மசூரி கைக்குத்தல் அரிசி.....1/2 கிலோ
பாசிப்பருப்பு....200 கிராம்
வெல்லம்...600 கிராம் (விருப்பத்திற்கேற்ப)
ஏலக்காய்............6
முந்திரி, திராட்சை....ஒரு கைப்பிடியளவு
நெய்.......2 மேசைக்கரண்டி
தண்ணீர்....அரிசி, பருப்பினை அளந்து அதற்கேற்றவாறு ஒன்றுக்கு இரண்டு பங்கு வைக்கவும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்ட தனியாக இரண்டு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
அரிசியையும், பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு அளந்து வைத்த நீரினை ஊற்றி 4 விசில் விடவேண்டும்.
அதே சமயத்தில் வெல்லத்தை உடைத்து , பக்கத்து அடுப்பில் நீரை கொதிக்க விட்டு அதில் போட்டு நன்கு கரையும் வரை கரண்டியால் அலாசி விடவும்.
குக்கரில் ஆவி வெளியேறிய பிறகு, அதனை திறந்து, வெந்த அரிசி பருப்பு கலவையில் கரைந்த வெல்லத்தை வடிகட்டியால் வடித்து ஊற்றவும்.
ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சையினை வறுத்து பொங்கலில் போட்டு கலக்கவும்.
ஏலக்காயை தோல் நீக்கி சிறிது சர்க்கரையுடன் மிக்ஸி சின்ன ஜாரில் போட்டு பொடித்து எடுக்கவும். இதனையும் பொங்கல் கலவையில் போட்டு நன்கு கிளறவும்.
தீ மிதமாக இருந்தால் போதுமானது. பொங்கல் நன்கு குழைந்து, வெல்ல நீர் நன்கு கலந்து ஓரளவு கெட்டியான பதம் வந்தவுடன் அடுப்பினை நிறுத்தவும்.
சூடு குறைய குறைய பொங்கல் இஞ்சிவிடும்.
சுவையான சர்க்கரை பொங்கல் தயார் !! விரைவில் செய்து விடலாம்.
இப்பொங்கலை என் செல்ல மகளின் பிறந்த நாளுக்காக தயார் செய்தேன்.
செல்ல மகளே நீ வயிற்றில் இருக்கும் போது எப்பொழுது வெளி வருவாய் என காத்து நின்றேன்.
குப்புற விழும் வயதில் எப்பொழுது உட்காருவாய் என காத்திருந்தேன்.
உட்காரப் பழகிய வயதில் எப்பொழுது தவழுவாய் என காத்திருந்தேன்.
தவழும் வயதில் எப்பொழுது நடப்பாய் என காத்திருந்தேன்.
நடந்தாய், குறும்புகள் பல செய்தாய். பள்ளியில் சேர்த்த பிறகுதான் தெரிந்தது, நீ சிறகு முளைத்த பட்டாம்பூச்சி நான் நினைத்த பொழுதெல்லாம் உன்னை என் கரங்களில் சிறை பிடிக்க முடியாதென!!
பிறகுதான் நினைத்தது மனம், இன்னும் கொஞ்சம் ஆற அமர அனுபவித்திருக்கலாமோவென.
குட்டிக் குழந்தைகளையும், குறும்பு பூக்களையும் பார்க்கும் போதெல்லாம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நினையாமல் என் மகனும் இப்படித்தான் பண்ணுவான், என் மகளும் இதே போலத்தான் செய்வாள் என நீங்கள் பிறந்த நொடி கொண்டு சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறேன்.
இவ்விஷயத்தில் தாய்மை வெட்கமறியாது என்பது இதுதானோ....
செல்லமே என்றென்றும் வாழ்வில் வளமுடன் வாழ அம்மாவின் அன்பு வாழ்த்துக்கள்!
தெய்வத்திற்கு கோடானு கோடி நன்றிகள்!!
குறிப்பு:
பச்சரிசி எதுவாக இருந்தாலும் செய்யலாம். சிறு தானியங்களிலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம். உடன் தேங்காய் ஒரு மூடி துருவிப் போட்டு செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். ஆனால் அதனை உடனே பயன்படுத்தி விடவேண்டும். காலை செய்து மாலை வரை வைத்திருக்க முடியாது.
சுவையும் கூடுதலாகவே இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
'உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை ஒருவருக்கு கொடு'.
எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.
அன்னை தெரேசா
_(((())))_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்