சனி, 28 பிப்ரவரி, 2015

வாழைக்காய் பொரியல்




தேவையான பொருட்கள்:

மொந்தன் வாழைக்காய்................2

சின்ன வெங்காயம்..........10

வறுத்து பொடிக்க:

கொத்தமல்லி விதை/ தனியா.......1 மேசைக்கரண்டி

வறமிளகாய்......................3

கடலைபருப்பு..............1மேசைக்கரண்டி

தேங்காய்..............1 மேசைக்கரண்டி

தாளிக்க:

கறிவேப்பிலை............2 இணுக்கு

எண்ணைய்......1 மேசைக்கரண்டி

கடுகு, கடலைப்பருப்பு..........சிறிதளவு









செய்முறை:

வாழைக்காயை சதுரமாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் போட்டு மூழ்கும் வரை நீர் விட்டு வேகவைத்து நீரை வடித்து வைக்கவும்.

பொடிக்க கொடுத்தவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும்.

முதலில் கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பின்னர் மிளகாய், தனியா போட்டு வறுக்கவும்.

மிக்ஸியில் தேங்காய் மற்றும் வறுத்தவற்றைப் போட்டு நீர் விடாமல் அரைத்தெடுக்கவும்.

வாணலி காய்ந்தவுடன் எண்ணைய் விட்டு கடுகு, கடலைபருப்பு தாளித்து, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வணக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.

பின்னர் வேகவைத்த வாழைக்காயை போட்டு உடையாமல் கிளறவும். அதன் பிறகு அரைத்தவற்றைப் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான வாழைக்காய் பொரியல் தயார்.

                                                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.

ஸ்ரீ அன்னை.

                                                              _()_()_()_()_
                                                      




வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மை க்யூட்டீஸ் க்விலிங்

                                                                                            
                                                          
  





 என் மகளின் கைவண்ணத்தில் உருவான  வாழ்த்து அட்டை இது. பள்ளியில் ஆர்ட் அன்ட் க்ராஃப்ட் எக்ஸிப்ஷனுக்காக தயாரித்துக் கொண்டு சென்றார்.

க்விலிங் ஆர்வமே இல்லாமலிருந்தவருக்கு, திடீரென ஏற்பட்ட ஆர்வத்தில் உருவான வாழ்த்து அட்டை. 
நாந்தான் பேப்பரை சுருட்டிக்கொண்டிருந்தேன். ஆனா பாருங்க பெரிசா ஒண்ணும் பண்ணல.
இப்படித்தானு இல்லாம மனம் போன போக்கிலே சுருட்டி கொண்டிருந்தேன்.
அதனை பார்த்து உண்டான ஆர்வம்னு கூட சொல்லலாம்.
சுயதம்பட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கோ!!? :))



                                                                                                                        

பொட்டுக்கடலை பொடி


பொட்டுக்கடலை பொடி மிக மிக எளிமையாக செய்து விடலாம். இப்பொடியை சூடான சாதத்தில் நெய்விட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

மிக்ஸி சின்ன ஜாரில் அரைவாசிக்கு கொஞ்சம் அதிகமாக பொட்டுக்கடலை போட்டு, அதனுடன் காய்ந்த வறமிளகாய் 3 (காரத்திற்கேற்ப), 4 பல் பூண்டு, கல்உப்பு 1/2 தேக்கரண்டி (தேவையான அளவு) போட்டு  தண்ணீர் விடாமல் நைஸாக பொடித்து எடுத்தால், சுவையான பொட்டுக்கடலை பொடி நொடியில் ரெடி!!
அதிகமாக செய்து காற்றுப்புகாத பாட்டிலிலோ, டப்பாவிலோ போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்டநாட்கள் பயன்படுத்தலாம்.

என்னவர் பொட்டுக்கடலை விரும்பி, மாலை அலுவலகம் முடிந்து வந்து கிச்சனுள் பொட்டுக்கடலை எடுத்து சாப்பிடுவது வாடிக்கை.
(நாங்கூட ஏதோ எங்கிட்ட பேசவராறாக்கும்னு நெனச்சு ஏமாந்து போனதுண்டு!!)

என் மகளுக்கு ரொம்பவும் பிடித்த பொடி, என் மகன் அவ்வளவாக இதனை இரசித்து ருசிப்பதில்லை.

இந்த பொடி அரைத்தால் விரைவில் மாயமாகிவிடும். அதனால் இந்த பாட்டில், கீட்டில், டப்பா,கிப்பாவிலெல்லாம் போட்டு ஸ்டாக் வைப்பதில்லை.
தேவையான பொழுது அரைத்துவிடுவேன்.

நெய் விரும்பாதவர்கள் நல்லெண்ணய் சேர்த்து உண்டு மகிழலாம்.

                                                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

சுவாமி. விவேகானந்தர்.
                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

வயலட் முட்டைகோஸ் பொரியல்



 வயலட் முட்டைகோஸ் இந்த கலருக்காகவே  இதனை  அடிக்கடி வாங்கி சமைத்து மகிழ்வேன்.  எங்கூட்லயும் இது எல்லோருக்கும் ரொம்ப புடிக்கும்.

ஒரே முட்டைகோஸ் இருவேறு நிறங்களில் தோற்றமளிக்கிறது. முட்டைகோஸ் ஒரே கலராத்தான் இருந்தது. நம்ம போட்டா புடுச்ச அழகு அப்பிடி :)))


 வயலட் முட்டைகோஸ் பொரியலை கீழ்க்கண்டவாறு தயாரிக்கலாம்.

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி,மீண்டும் குறுக்காக வெட்டவும்.  பச்சைமிளகாயை நீளவாக்கில் வெட்டி, விதைகளை நீக்கிவிடவும். கறிவேப்பிலை ஒரு ரக்கு கிள்ளி வைக்கவும்.
அனைத்தையும், வாணலியை சூடாக்கி, ஒரு மேசைக்கரண்டி எண்ணைய் ஊற்றி, அதில் கடுகு, கடலைபருப்பு பொரிந்தவுடன் போட்டு நன்கு வணக்கவும்.
பின்பு முட்டைகோஸை போட்டு நன்கு வணக்கிவிட்டு, உப்பு போட்டு, கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடிவைக்கவும். அவ்வப்பொழுது திறந்து பார்த்து கிளறிவிடவும்.
முட்டைகோஸ் நன்கு வெந்தவுடன் விருப்பப்பட்டால் தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
அழகான வண்ணத்தில் முட்டைகோஸ் பொரியல் தயார்.

                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்தடையும்.

சுவாமி விவேகானந்தர்.

                                                            _()_()_()_()_

திங்கள், 16 பிப்ரவரி, 2015

வெண்ணைய் எடுத்தல்




தயிர் சிலுப்பி வெண்ணைய் எடுப்பதை சிறு வயதிலிருந்தே அறிந்திருக்கிறேன்.

எல்லா வீட்டு சமையலறைகளிலும் தயிர் சிலுப்புவதற்கென்றே ஒரு இடம் அமைக்கப்பட்டிருக்கும். சுவரில் சிறு வளைவுகளுடன் கூடிய இரண்டு கம்பிகளை வைத்தே கட்டியிருப்பர். அதற்கு ஒண்டி என்று பெயர். அளவில் சிறியதாக இருக்கும். ஒண்டிகள் மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த ஒண்டிகளில் பனை மட்டையை உரித்தால் கயிறு போல கிடைக்கும். அதற்கு பெயர் அவுனி(ணி). அதனை ஓவல் வடிவத்தில் கட்டி, அவற்றிற்கு இடையில் மத்தினை வைத்து, அவற்றிலிருக்கும் கயிறால் சிலுப்புவர். தினமும் காலை வேளையில் இந்த வேலை கட்டாயம் நடக்கும்.

அதுவும் நேரம் கழிய ஆரம்பித்தால் வெண்ணய் திரண்டு வராமல் உருகி போய்விடும். இப்போதைய  போன்று அப்பொழுதெல்லாம் ஃப்ரிட்ஜ் கிடையாது.

எருமைப்பால் என்றால் வெண்ணைய் நன்கு வெள்ளை நிறத்துடன் இருக்கும். மாட்டுப்பால் என்றால் பேர்ல் எல்லோ கலரில் இருக்கும்.



தினமும் தயிரில் இருக்கும் ஆடைகளை சேகரம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு வாரத்திற்கான ஆடைகளை மிக்ஸியில் போட்டு, குளிர்ந்த நீர் விட்டு நன்கு அடிக்க வேண்டும்.
குளுமை போதாவிட்டால் கூட ஒன்றிரண்டு ஐஸ் கட்டிகளும் போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் செய்தால் வெண்ணைய் நன்கு திரண்டு மேலே வந்துவிடும்.










நன்கு நீரில் அலச வேண்டும்


மாட்டுப்பால் வெண்ணைய்

எடுத்த வெண்ணைய் அடுத்த நிமிடம் காலியாயிற்று :)
தினமும் இரவு வேளையில் ஒரு சிறு உருண்டை வெண்ணைய் சாப்பிட்டால் தோல் மிருதுவாக இருப்பதுடன், குடல் நோய்கள் வராது.

பிறகு ஒரு நாள் யாருக்கும் தெரியாம வெண்ணைய் எடுத்து, புகைப்படம் எடுத்தது..
க்ருஷ், க்ருஷி கண்ணுக்கு தட்டுப்படாமல் கவனமாக எடுக்கப்பட்ட வெண்ணைய் :))

 எடுத்த வெண்ணையை நெய்யாக்கியது எப்படினு பாருங்களேன்!!

                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பழைய சோறு








 பழைய சோறு, பொதுவா பழைய சோறு சாப்பிடுவது என்பது கொஞ்சமல்ல நிறையவே கௌரவ ப்ரச்சனையாக நிறைய பேர் நினைப்பதுண்டு.
ஆனால் அது எவ்வளவு தவறு என்பது புரிந்தால் தினமும் காலை வெறும் வயிற்றில் நீராகாரம் என்னும் பழைய சோறு தண்ணியை தவறாமல் குடிக்க தொடங்கிவிடுவார்கள்.

வயிற்றுப்புண்ணுக்கு பெரும் நிவாரணியாக இருப்பது, இந்நீராகார நீர்தான்.

முந்தியநாள் மீதியான சாதத்தில் இரவு கொதிக்க வைத்து நன்றாக ஆறிய சுத்தமான நீரை ஊற்றி வைக்கவேண்டும்.
மறுநாள் காலையில் அந்நீரை பருகவேண்டும்.

அதிலிருக்கும் சாதத்தை நன்கு கரைத்து,  தயிர் ஊற்றி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,  தோல் சீவி நறுக்கிய வெள்ளரி சேர்த்து உண்டால் சுவை அபிரிமிதமாக இருக்கும்.

இங்கு படத்தில் இருக்கும் பழையசாதத்தை மிக்ஸியில் போட்டு, உடன் சின்னவெங்காயம், இஞ்சி, புதினா ஆகியவற்றை போட்டு அரைத்து, மேலே வெள்ளரி தூவியுள்ளேன்.
ஒருநாள் ஞாயிறன்று இதனை காலையில் செய்தேன், சொன்னா நம்பமாட்டீங்க, ஒரு துளி இல்லாமல் சாப்பிட்டாயிற்று.

பொதுவா ஞாயிறுனாவே, ஒரு சோம்பேறிதனம் தானே வந்து ஒட்டிக்கொள்ளும்.

காலையில் நேரம் கழித்து எழுவது, அதன் பிறகு காலை உணவுக்கு, வெண்ணைய் தடவியரொட்டியோ, தோசையோ செய்து சாப்பிடுவது.

ஆனா இந்த முறை மிகவும் பயனுள்ளதா இருக்குனு சொல்லலாம். 



பொடியாக ந்றுக்கிய வெள்ளரி

புதினா ,இஞ்சி சேர்த்து அரைத்த சாதம்
அதனுடன் சி.வெங்காயம், வெள்ளரி






நீங்களும் முயற்சித்து பாருங்களேன்!!







வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கைகுத்தல் அரிசி பணியாரம்



ப்ரவுன் ரைஸ்தான் நாங்கலாம் கைகுத்தல் அரிசினு சொல்வோம்.  மிஷின்ல கொடுத்து அரைச்சதுதான். ஆனா ரொம்பவும் பாலீஷ் போடாம, மேட்டாப்பில நெல்லோட தோலை மட்டும் எடுக்கிற அளவுக்கு அரைக்கிறது. அதுனால இதுல நார்ச்சத்து மிகுந்து காணப்படும். கிரைண்டர்ல ஊறவெச்சு அரைக்கும் போதே சீக்கிரம் அரைபடுறதில்ல. என்ன சொல்றது கோதுமை அரைக்கிறாப்பில கொஞ்சம் கடிசாதான் இருக்கு.
இதுல சாப்பாடு செய்தாலும் சுவை ரொம்ப நல்லா இருக்கு.


தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அரிசி..........4 கப்

குண்டு உளுந்து...........................1கப்

வெந்தயம்..........1 மேசைக்கரண்டி

கேரட்.................1கப் துருவியது

சீரகம்..........1தேக்கரண்டி

உப்பு............தேவையான அளவு

கடலை எண்ணைய்........தேவையா அளவு

செய்முறை:

கைகுத்தல் அரிசியை நன்கு கழுவி 5 மணிநேரம் ஊறவைக்கவும்.

உளுந்தம் பருப்பையும், வெந்தயத்தையும் கழிந்து ஃப்ரிட்ஜில் 5 மணிநேரம் வைக்கவும்.

அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக அரைக்கவும்.

8 மணிநேரம் புளிக்கவிடவும்.

பின்பு கேரட்டை நன்கு துருவி மாவில் போடவும்.

சீரகத்தை கைகளால் நன்கு தேய்த்து  மாவில் போடவும்.

மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.

அடுப்பில் பணியாரக்கல் வைத்து சூடானவுடன் எண்ணைய் தடவி, இக்கலவையை சிறு கரண்டியால் ஊற்றவும்.

பணியாரக்கல்லை மூடி வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து திருப்பி விட்டு, மீண்டும் வேக விடவும்.

பணியாரம் வெந்து விட்டதா என்று கறிவேப்பிலை குச்சியினால் குத்தி பார்த்து எடுக்கவும்.

சுவையும், மணமும், சத்தும் நிறைந்த பணியாரம் தயார்.

சட்னி அல்லது விருப்பப்பட்ட குழம்பு வகையுடன் பரிமாறவும்.














காலிஃப்ளவர் குழம்புடன் பணியாரம் செய்துள்ளேன். தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, நிலக்கடலை சட்னி ஆகியவை மிகவும் பொருத்தமாக இருக்கும்.

                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வியாழன், 5 பிப்ரவரி, 2015

உருளைகிழங்கு காலிஃப்ளவர் கறி





மிகவும் எளிதாக செய்யக்கூடிய கறிவகை இது.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர்.............15 துண்டுகள் (ஒரு பூவில் பாதியை போட்டிருக்கேன்)

உருளைக்கிழங்கு........1

பெரியவெங்காயம்.........1

பச்சை மிளகாய்.....1 (காரத்திற்கேற்ப)

தக்காளி..................1

சீரகம்..........1தேக்கரண்டி

மல்லிபொடி........2மேசைக்கரண்டி

மஞ்சள்தூள்........1/2 தேக்கரண்டி

கரம்மசலா பொடி..........1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை......1 இணுக்கு

உப்பு.........தேவையான அளவு

கடலை எண்ணைய்.......1மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் காலிஃப்ளவரை தனித்தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சுடுநீர் வைத்து கொதித்த உடன், அதில் உப்பு போட்டு காலிஃப்ளவரை போட்டு மூடி வைக்கவேண்டும். நீர் கொதிதவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு இது போல் செய்யவேண்டும்.

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், எண்ணைய் ஊற்றி சீரகம் போட்டு பொரியவிடவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளியை போட்டு குழைய விட்டு, தூள் வகைகளை சேர்க்கவும். 

உருளைக்கிழங்கை போட்டு பிரட்டவும். தேவையான அளவு உப்பு போடவும்.

பின்னர் சுடுநீரில் உள்ள காலிஃப்ளவரை நீரை வடித்துவிட்டு எடுத்து போட்டு நன்கு கிளறி மூடவும்.
1 நிமிடம் கழித்து நீர் விட்டு மூடிவைக்கவும்.
இடையிடையே திறந்து கிளறவும்.

பூவும், கிழங்கும் வெந்தவுடன்  மல்லித்தழை போட்டு அடுப்பை நிறுத்தவும்.












பின்குறிப்பு: 

காலிஃப்ளவரை அறிக்கி அல்லது மீன்கரண்டியால் (துளைகளுடன் இருக்கும்) எடுத்து போடவும். அப்பொழுதுதான் அதிலிருக்கும் புழுக்கள் அடியில் நிற்கும்.  சுடு நீரில் போடும் முன்பாகவே ஒரு முறை பச்சத்தண்ணீரில் கழுவிவிட்டு போடுவது நல்லது.

காரம் அதிக விரும்புவர்கள் தனி மிளகாய்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 வெற்றி என்பது சக்தியின் அடிப்படையில் ஏற்படக்கூடியது; அந்த சக்தி திட்டமிட்ட செயல்முறையின் மூலம் உருவாகிறது.

                                                  _()_()_()_()_
 

புதன், 4 பிப்ரவரி, 2015

முளை கட்டிய பச்சைபயறு

ஒண்ணார மொளச்சிருக்கு



வாவ்வ்வ்!!!


முளைகட்டிய பயறு வகைகள் உடல்நலத்துக்கு மிகவும் நல்லதுனு நாம சிறிய வயதிலிருந்தே படிச்சிருப்போம்.

 அதை எப்படி செய்வதுனு தெரியாமலே நிறைய நாட்கள் இருந்திருக்கேன்.

அப்புறம் படிப்படியா புத்தகம், வலைத்தேடல் மூலமா தெரிஞ்சுக்கிட்டு, தானியங்களை முளைகட்டி குழம்பு வகைகளாகவும், ஆவியில் வேகவைத்து தாளித்தும் உண்டதுண்டு. இப்பலாம் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவதுண்டு.
பொதுவா பச்சைபயறு எளிதா முளைவிட்டுவிடும். சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

பயறை இரவு நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதிலுள்ள நீரை வடித்து விட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் அன்று மாலையே லேசாக முளைவிடத் தொடங்கிவிடும். மாலை நேரத்தில் வெங்காயம் ,மிளாகய் போட்டு தாளித்து குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்.


எப்ப நெட் ஓபன் பண்ணாலும் sprout maker விளமபரம் கண்ணுக்கு தட்டுப்பட்டுக்கிட்டே இருந்துச்சு.

சரி அப்படி என்னதான் இருக்கும் வாங்கி பார்க்கலாமேனு, வாங்கி அதில பச்சை பயறையும், கொள்ளையும் இரண்டு அடுக்களிலும் தனித்தனியாக நீர் ஊற்றி வைத்தேன்.

11/2 நாள் கழிச்சு பாத்தா லேசா பச்சை பயறுல வெள்ளையாக முளைப்பு தென்பட ஆரம்பிச்சது.
அதுக்கு முன்னாடியே பல தடவை திறந்து திறந்து பார்த்தோம்னு வெய்ங்க, அதெல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான் இல்லீங்களா?

ஒரு வழியா இன்னிக்கு காத்தால எடுத்து திறந்து வெக்கும் போது லேசா அங்கொண்ணும் இங்கொண்ணுமா தென்பட்ட முளைப்பு கட கடனு வளர ஆரம்பிச்சிட்டுது!!!.
அட நிசமாதாங்க!!!  இதோ நீங்களே பாருங்களேன்!!!

Sprout maker





ஸ்பரவுட் மேக்கர்:

நான் இந்த மேக்கர ஏதோ சாண்ட்விச் மேக்கர், டோனட் மேக்கர் இப்படிலாம் போல இருக்கு. உள்ள பயறை போட்டு ஸ்விட்ச் போட்டா, முளைச்சிடும்னு நினைச்சேன்.
ஹீ ஹீ நமக்கு அறுவு அம்புட்டுதே!! கோழிகுஞ்சு பொரிக்கிற மிஷின்லாம் இருக்கிறப்ப....இதுக்கு ஒண்ணு கண்டுபிடிக்காமலா இருப்பாங்கனு நெனச்சிட்டேன்.

இது 3 அடுக்குகளை கொண்ட ஒரு பிளாஸ்டிக் டப்பா. முதல் அடுக்கில் ஒரு பயறும், இரண்டாம் அடுக்கில் வேறு ஒரு பயறும் போட்டு ஊறவெக்கலாம். கடைசி அடுக்கு காலியா விடணும்.

நான் 2ஆம் அடுக்கில் கொள்ளு போட்டிருந்தேன், ஆனா அது அவ்வளவா முளைக்கும் திறன் எய்தல.
ஒருநாள் கழிச்சு பார்த்தா, தண்ணியெல்லாம் உறிஞ்சி இருக்கும். கீழே அதாவது கடைசி தட்டில் மிக சொற்பமான அளவே தண்ணீ ர் இருந்தது.

ஆனாலும் எங்க பயறு காஞ்சு போய்டுமோனு இடைல அதாவது ஒருநாள் முடியும் தருவாயில் ஒரு அரை டம்ளர் தண்ணி ஊத்தி, மறுக்கா அதே போல மூடி வெச்சுட்டேன்.
அதுக்கப்புறமும் ஒரு முறை திறந்து பார்த்து லேசா கிளறுனாப்பில பண்ணேன். ஏனா எதாச்சி பூசணம் கீசணம் புடுச்சுடுமோனு ஒரு பயம்.

கிட்டத்தட்ட 2 நாள் ஆகிடுதுனு வெய்ங்களேன்.

நான் போட்டது ரொம்பவே புரியலேனா இதுக்கான விளக்கப்படம் யூ ட்யூப்ல இருக்கு, தேடி பாத்திடுங்க  இந்த டப்பா வாங்கும் முன்னாடி.

தானியங்களை முளை கட்டுவது பெரிய வித்தைனு நினைச்சிருந்த எனக்கு, இவ்வளவு எளிதான விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.  "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"

                                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்கள் மனதை உறுதியாக உற்சாகமுடன் ஊக்கமாக வைத்திருங்கள் ;
வெற்றி தானாக தேடி வரும்.

                                                    _()_()_()_()_