![]() |
சுரைக்காய் தயிர் பச்சடி |
சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் சூடு தணிவதற்காக இதனை உணவில் சேர்ப்பது நல்லது. சிலருக்கு இதனை உண்டால் உடல்வலி உண்டாகும். சிறுநீர் கடுப்பு இருப்பவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
சுரைக்காயை நன்கு முற்ற விட்டு, அதில் கயிறை வரிந்து கட்டி நீச்சல் பழக பயன்படுத்துவது வழக்கம். அதனை இடுப்பின் பின்புறமாக கட்டி கிணற்றினுள் இறக்கி விடுவர். உள்ளே செல்லாமல் மேலேயே மிதந்தபடி நீந்தலாம். நாங்கூட அதிலதான் பழகினேன் :))
சில சமயம்
தொளைமேட்டிலிருந்து எட்டி குதிக்கும் போது சுரைப்புரடை உடைந்து போன
நிகழ்வும் உண்டு. ஒருமுறை செய்த புரடையை பத்திரமாக வைத்திருந்து அடுத்து
வரும் வருடங்களிலும் பயன்படுத்துவது உண்டு.
புரடை என்றால் காய்ந்த சுரைக்காய் என்று பொருள்.
அதே போல் பனைமரத்திலிருந்து பதநீர் இறக்கவும், சுரைக்காயின் ஒருவகையான கும்பசுரைக்காயை பதப்படுத்தியே பயன்படுத்துவர். மேல் பகுதியை ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிவிட்டு, உள்ளிருக்கும் விதைகளை எடுத்தால் அழகான சுரைக்குடுவை தயார்.
அதிகமாக பொய் பேசுபவர்களை எங்களூரில், "அடிக்கிற பொய்யும் புரடையும் தாங்க முடில என்று சொல்வார்கள். அவர் ஒரு புரடையர் என்றும் கூறுவர்.
சுரைக்காய் கதையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் :))).
தேவையானபொருட்கள்:
சுரைக்காய்...........200 கிராம் பொடியாக நறுக்கியது
பெரியவெங்காயம்................1சிறியது
தயிர்..............1கப்
வறமிளகாய்.............2
கறிவேப்பிலை.........1இணுக்கு
தாளிக்க:
கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணய்
நுணுக்க:
இஞ்சி.......சிறுதுண்டு
பூண்டு........5பற்கள்
சீரகம்........1தேக்கரண்டி
மிளகு...........1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை..........2 இணுக்கு
செய்முறை:
சுரைக்காயை பொடியாக அரியவும். பெரிய வெங்காயத்தை பொடியாக அரியவும்.
வறமிளாகாயை கிள்ளிவைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு பொரியவிடவும்.
பின்னர் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலையை போட்டு வணக்கவும்.
வணங்கியவுடன் சுரைக்காயையும் போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும்.
அதற்கு பின்னர் தேவையான அள்வு தன்ணீர் விட்டு மூடிவேகவிடவும்.
உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.
நுணுக்க கொடுத்தவற்றை நுணுக்கி பச்சையாக தயிரில் கலக்கவும்.
பின்னர் ஆறிய சுரைக்காயையும் சேர்த்து கலக்கவும்.
சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
இந்த தயிர் பச்சடி நல்ல வாசனையாக இருப்பதுடன், உடலுக்கும் மிகவும் நல்லது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் இல்லாதவன் உலகில் வாழமுடியாது. முயற்சிக்காமல் எதையும் செய்ய முடியாது.
_()_()_()_()_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்