திங்கள், 2 பிப்ரவரி, 2015

பாகற்காய் குழம்பு

பாகற்காய் குழம்பு

 

 பாகற்காயில் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து இருப்பதின் காரணமாக வாரத்தில் ஒருநாளாவது  உணவில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். மேலும் குடற்புழுக்களை அழிக்கும் சக்தியும் பாகற்காயிற்கு உண்டு.

நாட்டு மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காயை தவிர்க்க வேண்டும். இல்லையேல் மருந்தின் பலன் கிட்டாமல் போய்விடும்.மருந்தினை முறிக்கும் சக்தி பாகற்காயிற்கு உண்டு.

நார்மலாக இருப்பவர்களுமே வாரத்தில் ஒருநாள் மட்டுமே பாகற்காய் சாப்பிட வேண்டும். அகத்தி கீரையும் இதே போல்தான்.

சில பேர் கேட்பாங்க "எப்படித்தான் பாகக்காய இப்படி வார ஒருக்கா சமைக்கிறீங்களோ..பரவால்ல உங்க புள்ளைங்க சாப்பிட்டுறாங்க..."என என்னிடமே கூறி இருக்கின்றனர்.

எங்க வீட்டு புள்ளைங்க ஒண்ணும் பாகக்காயை சமைச்சுக் கொடுத்தா அப்பிடியே சிரிச்சுக்கிட்டு, கொடுங்க கொடுங்க, இன்னும் கொஞ்சம் கொடுங்கனுலாம் கேட்கமாட்டாங்க.
ஆனாஎப்படியும் அம்மா விடமாட்டாங்க என்ற எண்ணத்திலேயே ஆரம்ப நாட்களில் சாப்பிட ஆரம்பிச்சாங்க. இப்ப அதே தொடர்ந்து பழக்கமானதால அந்த ருசி அவங்களுக்கு பிடிச்சு போச்சு என்று கூறுவேன்.

ஆனா இன்னிக்கு இந்த குழம்பு செய்து, இதனை தொட்டு சாப்பிட சப்பாத்தி செய்தேன்.  இட்லிக்கு தொட்டுக்கொள்ள பாகற்காயில் வேறுவிதமான குழம்புகள் வைத்ததுண்டு.
சப்பாத்திக்கு இதுவே முதல் முறை.

என் மகன் பார்த்த உடனே சொன்னது இதுதான்" அம்மா நீங்களே சொல்லுங்க, இப்படி ஒரு காம்பினேஷன் யாராவது சமைச்சு இருப்பாங்களா? நீங்க சொல்லி சொல்லி பாகக்காயை சாப்பிட பழகிட்டோம்.  அதுக்காக சப்பாத்திகலாம் சைடிஷா வெக்கிறீங்களேனு கேட்டார்".

வேறு வழியில்லாமல் சாப்பிட ஆரம்பித்து பிறகு ருசி பிடித்து போயிற்று.

நிஜமாவே நல்லா இருந்துச்சுங்க, நீங்களும் சமைத்துதான் பாருங்களேன்.


தேவையான பொருட்கள்:

பாகற்காய்..........2

தக்காளி........2 (பெரியது)

பெரியவெங்காயம்........1

சாம்பார் பொடி............2 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள்.........1/4 தேக்கரண்டி

உப்பு.........தேவையான அளவு

அரைக்க:

சோம்பு........1/2 மேசைக்கரண்டி

புளி.....பெரிய நெல்லிக்காய் அளவு

தேங்காய்..........1/2 மூடி

தாளிக்க:

கடலைஎண்ணய்........1 மேசைக்கரண்டி

சோம்பு...1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை........1 இணுக்கு

செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி, இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி, பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்.

தக்காளியை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்.

அரைக்க கொடுத்தவற்றை நன்கு மை போல் அரைக்கவேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து காய்ந்தவுடன், எண்ணய் ஊற்றி சோம்பினை பொரியவிடவேண்டும்.

பின்னர் அரிந்து வைத்த பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும்.

பின்னர் தக்காளியை போட்டு குழைய வதக்கி, சாம்பார் தூள் , மஞ்சள் தூள் போடவேண்டும்.

பின்னர் பாகற்காயை போட்டு நன்கு வதக்கி உப்பு சேர்க்கவேண்டும்.

அரைத்த விழுதினை ஊற்றி, தேவையான அளவு நீர் விடவேண்டும்.

காரம் அதிகமாக சேர்ப்பவர்கள் தாளிக்கும் போது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

குழம்பு நன்கு கொதித்து, காய் வெந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.




சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

                                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~

எவரொவருவர் சந்தேகத்தையும், பயத்தையும் வெற்றி கொள்கிறாரோ, அவரே தோல்வியை ஜெயிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்