திங்கள், 30 மார்ச், 2015

அழகிய குடும்பம்

நாம நினைச்'சிட்டு' இருக்கலாம், குழந்தை வளர்ப்பு, குடும்பப்பராமரிப்பு இவற்றிலெல்லாம் மனிதப்பிறவியான நம்மை விட சிறப்பா வேற யாரும் இருந்துட முடியுமானு!!

இந்த குருவி, அம்மா வீட்டுல கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிச்சிருக்காங்க. எனக்கு இவங்களோட வரலாறு என்னனு தெரில. பேரும் தெரில.

எங்க வீட்ல வெளிய திண்ணை இருக்கும்.  அந்த திண்ணைக்கு கீழ இருக்கும் வாசலுக்கு வெயில் படாம இருப்பதற்காக தென்னை ஓலைகளை வெட்டி, தடுக்குகளாக பின்னி பந்தல் வேய்திருப்போம். வேப்பமர நிழலும், தென்னை ஓலை பந்தலும் அக்குருவிக் குடும்பத்தை மிகவும் ஈர்த்துவிட்டது போலும்.

நேற்று போனப்ப, அந்த பந்தக்காலோட மேல்முனையில அழகா ஒரு குருவிக்கூடு, கூட்டுக்குள்ள மூணு குருவிக்குழந்தைங்க. அப்பாவும், அம்மாவும் அதற்கு இரை தேடி கொண்டு வந்து கொடுத்தாங்க.
இரை ஒருமுறை மட்டும்தான் கொடுப்பாங்கனு என்னைப் போலவே நினைப்பவர்கள் யாரேனும் இருந்தால், அந்நினைப்பை மாத்திக்கோங்க!!!

ஒவ்வொரு ஐந்து அதிகபடசம் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை, அம்மாக்குருவியும், அப்பாக்குருவியும் தேடி தேடி இரை சேகரம் செய்து கொண்டுவந்து ஊட்டிவிட்டாங்க.

வருவதற்கு முன்பாக கிக்கிக்கீச் கீச் என்பது போன்ற சத்தம், உடனே குருவிக்குழந்தாய்கள் அனைவரும் தமது செப்பு வாயை திறந்தபடி இரை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.

படக்னு குடுத்த அடுத்த நொடி பறந்துடுவாங்க.
இணைகள் இரண்டும் வெவ்வேறு விதமான உணவுகளையே கொண்டுவந்தனர்.

ஒருவர் மாற்றி ஒருவர் என்பதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தனர். இதெல்லாமே வியப்பை உண்டு பண்ணியது.

ஒரு முறை கொடுக்கும் போது பெரிய இரையாகப்போய்விட்ட படியால் (எங்கே குழந்தையின் தொண்டையில் மாட்டிவிடுமோ என்று நினைத்தது போல)அப்பாவா, அம்மாவானு தெரில, படக்னு தானே விழுங்கிட்டு, மீண்டும் சென்று சரியான அளவினதாக கொண்டுவந்து ஊட்டிவிட்ட செயல் ஆச்சர்யமாக இருந்தது.

செர்லாக் கலந்தா நாம ஒருவாய் சாப்பிட்டு பார்த்து கொடுப்பமே அது போலவேதான்னு வெய்ங்களேன்.

அன்பும், பாசமும், அக்கறையான பராமரிப்பும் கொண்ட அக்குருவிக்குடும்பம் மனதில்  பல்வேறு உணர்வுகளை உணர்த்திச் சென்றது.














சிட்டுக்கு ச்செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளச்சதாம்...

என் சுயநலத்திற்காக அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால், என்னால் மிகவும் துல்லியமாக படம்பிடிக்க இயலவில்லை.
 இல்லேனாலும் அப்பிடியே துல்ல்ல்ல்ல்லியமாத்தேன் படம்புடுச்சுடுவே போ....இப்படி யாரும் நினைக்கலேதானே!!

இந்த பதிவு எழுதும் போது அலைமோதிய எண்ணத்தின் ஒரு துளி:  நாமளும் இப்படித்தானே சிறகு முளச்சு (திருமணம் முடித்து) தாய் வீடு விட்டு வரோம். ஆனால் அந்த பழைய வாழ்க்கை ஒரு துளிகூட மறப்பதில்லைதானே... அப்பா, அம்மா, அண்ணா, அக்கா....இந்த குருவிக்குடும்பம் ஏனோ என் பழைய நினைவுகளை அப்படியே புரட்டிச் சென்றது.

                                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

நேற்று நடந்ததைப் பற்றியும், நாளை நடக்கப்போவதைப் பற்றியும் கவலைப்படாமல், இன்று நடக்கவேண்டியதை சிரத்தையுடன் செயல்படுத்தினால், வெற்றி உங்களைத் தேடி வரும்.

                                                          _()()_()()_

கேரட் ஆம்லெட்

 ஞாயிறன்று காலை நேரவரைக்கும் தூங்கிட்டீங்களா? இல்ல காலை உணவுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சே சோர்வாகிட்டீங்களா? கவலைய விடுங்க, உங்களுக்காகவே காத்திட்டிருக்கு இக்குறிப்பு!!

தேவையான பொருட்கள்:

முட்டை..........4 (வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப, தலா 1)

கேரட்..........2 (நடுத்தர அளவிலானது)

மிளகு........1 மேசைக்கரண்டி (பொடித்தது)

உப்பு .......தேவைக்கேற்ப

கடலை எண்ணைய்........ 1மேசைக்கரண்டி ( விருப்பமான எண்ணைய் பயன்படுத்தலாம். இதனை விட குறைவாகவும் பயன்படுத்தலாம்)

செய்முறை:

கேரட்டை மிகவும் சன்னமாக துருவிக்கொள்ளவும்.

முட்டையை ஒரு சிறு பாத்திரத்தில் ஊற்றி , கேரட், உப்பு, பாதி மிளகுதூள் போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் , பாதி எண்ணைய் தடவி அடித்து வைத்த முட்டைக் கலவையை பரவலாக ஊற்றவும்.

மீதி எண்ணைய்யை மேற்பரப்பில் பரவலாக ஊற்றவும்.

அடுப்பை மிதமாக எரியவிடவும்.

கலவை தீய்ந்து போகாத அளவிற்கு வேகவிட்டு, திருப்பி போடவும்.

இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுக்கவும். மேலே மீதி மிளகுதூளை தூவிக்கொள்ளவும்.

விருப்பப்பட்டால் ரொட்டித்துண்டுகளில் வெண்ணைய் தடவி, துண்டுகளாக்கிய ஆம்லெட்டை இடையில் வைத்து உண்ணலாம்.

கூடவே பழரசம் அருந்திக்கொள்ளலாம்.

ஞாயிறு காலை உணவை இனிதே முடித்துக்கொள்ளலாம்.





இதன் சுவை மிகவும் நன்றாக இருந்தது!!

                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

உனக்கு மன அமைதி வேண்டுமானால், பிறரிடத்துக் குற்றம் காணாதே. அதற்கு பதிலாக உன் குற்றங்களையே நீ எண்ணிப்பார்.

அன்னை. சாரதாதேவி.

                                                               _()()_()()_

புதன், 25 மார்ச், 2015

கோடையும் கொத்தமல்லியும் நானும்



கொத்தமல்லி பயிரிட விரும்பி, ஒரு கைப்பிடி அளவு மல்லி விதைகளை கைகளால் அரக்கி, இரண்டாக உடைத்து , காயர்பித் மற்றும் மென்யூரை சரியான விகிதத்தில் கலந்து வைத்திருந்த தொட்டியில் போட்டு கிளறி விட்டேன்.
காயர்பித் கலவைக்கு நீர் அதிகம் விடத்தேவையில்லை. ஒரு நாளைக்கு 1 முறை மட்டுமே ஒரு டம்ளர் அளவு நீர்விட்டாலே போதுமானதாக இருந்தது. வேணா கூட இன்னும் கொஞ்சூண்டு அதிகமா ஊத்திக்கலாம்.

ட்யூப் வழியாகவே நீர் பாய்ச்சிவிடுவதால், பூவாளியின் பயன் எங்களுக்கு இது வரை தேவையாயிருந்ததில்லை. ஆயினும் பூவாளி ஒன்று வாங்க வேண்டும் என்ற மிகப்பெரிய அவா இருந்து கொண்டே இருந்தது.

சமீபத்தில் ஒரு நர்ஸரிக்கு செடி வாங்க போனோம், அங்கு பூவாளியும் இருந்தது.
ஆனால் விலை கொஞ்சம் அதிகமோ என்று மனதிற்கு பட்டதால் என்னவரிடம் வேண்டாம் என கூறிவிட்டேன்.
ஒரு ப்ராடக்ட் எவ்வளவு உழைப்பு,பொருட்செலவு, நேரச்செலவு செய்து தயாரிக்கணும் தெரியுமா? போற போக்குல வெலை அதிகம்னு சொல்லிட்டு போய்ட்டே இருக்கிறது சரியா? ஆச்சா, போச்சான்லாம் அறிவுரையை ஆரம்பிச்சார்.இருந்தாலும் நம்ம சிக்ன நடவடிக்கையால வாங்கல.

ஆனா இந்த கொத்தமல்லி விதை முளைக்க ஆரம்பிச்சவுடனே தண்ணிய நேரிடையா ஊத்தினா அடிப்பட்ட குருவி மாதிரி சாய்ஞ்சிடுது. பூவாளியோட தேவை நிச்சயம் வேணும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ஆனா பாருங்க என்னோட்ட அறிவான மூளையை பயன்படுத்தி, கீழ் உள்ள பூவாளிய (!!??) தயாரிச்சுப்புட்டம்ல!!

ஒரு காலி தண்ணி பாட்டில் மூடிய, மைகோதி அல்லது பணியாரம் திருப்பியோட கூரான பகுதிய வெச்சு நாலஞ்சு ஓட்டை போடணும்.
பாட்டில்ல தண்ணிய நிரப்பி, மூடிய போட்டு ஊத்துனா, ஆஹா, என்ன அழகு, செடி அடிபடாம தண்ணி ஊத்திடலாம்.


மெதுவா வெளிய எட்டிப்பாக்குறாங்க


கொஞ்சம் கொஞ்சமாக உலகினைக்கான....வெளியே வந்தார்கள்

ஏய்!! வாங்கப்பா எல்லாரும் வெளிய, இங்க ஒரு அழகான உலகம் இருக்கு!!

அறிவாளியின் பூவாளி

ஹே..!!!

ஸூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கொத்தமல்லி நிழலான இடத்திலும் வளர்ந்துவிடுகிறது. ஒரு இடத்தில் சிறிய அளவில் போட்டு 10 நாட்கள் கழித்து, வேறு தொட்டியிலோ, இடத்திலோ மீண்டும் ஒருமுறை போட்டால், மல்லி இழை தட்டுப்பாடு இல்லாமல் நம் வீட்டு தோட்டத்திலேயே பறித்துக்கொள்ளலாம்.
கோடை வெயில் கொளுத்தினாலும் கொத்தமல்லி குளுகுளுனு பறிச்சுக்கலாம்!!

                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.

                                                             _()()_()()_

திங்கள், 23 மார்ச், 2015

தக்காளிச்சட்னி






தக்காளிச்சட்னி இதுவும் இரண்டு மூன்று விதமாக செய்யலாம். இந்த முறையில் செய்வது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

நாட்டுத்தக்காளி..........4 (நடுத்தர அளவிலானது) வெட்டும்பொழுது, காம்பின் அடையாளத்தை(கெட்டியான ) எடுத்துவிட்டு அரியவும்.

பெரியவெங்காயம்.....1

பூண்டு...........5பற்கள்

கறிவேப்பிலை......2 இணுக்கு

மல்லிப்பொடி......1 மேசைக்கரண்டி

புளி...சிறுநெல்லியளவு (பெங்களூர் தக்காளியாக இருப்பின் இன்னும் சிறிது சேர்க்கலாம்)

உப்பு.......தேவையான அளவு

 தாளிக்க:

சீரகம்........1 தேக்கரண்டி

கடுகு, கடலைப்பருப்பு

கடலைஎண்ணைய்.....1 மேசைக்கரண்டி
அரிந்த பெரியவெங்காயம், சீரகம், கறிவேப்பிலை (பொறுமையும் நேரமும் இருந்தால் சின்னவெங்காயம் போடலாம்).




1) கடலை எண்ணைய் 1 மேசைக்கரண்டி ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு சீரகம் போட்டு பொரியவிடவும்.

2) கறிவேப்பிலையை போட்டு, பெரியவெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

3). தக்காளியை நறுக்கி வைக்கவும்.

4) வதக்கியவற்றுடன் இதனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

 1 மேசைக்கரண்டி மல்லிப்பொடி சேர்க்கவும்.



சிறு நெல்லிக்காய் அளவு புளி சேர்க்கவும்.
 வதங்கிய கலவையின் அடிப்பகுதியில் புளியை ஒளித்து வைக்கவும்.
 ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
 சுவையான தக்காளிச்சட்னி தயார். இட்லி, தோசை, பணியாரத்திற்கு மட்டுமே தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

                                                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோவொரு இடத்தில், அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள்தாம், அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணம் ஆகும்.

சுவாமி. விவேகானந்தர்.

                                                                  _()_()_()_()_

புதன், 18 மார்ச், 2015

கம்பஞ்சோறு மற்றும் கம்பங்கூழ்



கம்பங்கூழ்
மதியம் பள்ளிக்கூடம் என்பதால், வேன் வரும் வரை கம்பங்ககூழ் குடிச்சு (குடிக்கவெச்சு) டைம்பாஸ் பண்ணும் எனது பொண்ணரசி :))

இந்த கம்பஞ்சோறாக்குற வேலை கொஞ்சம் கடுசுதான் போங்க!! கம்பு தோலோட இருந்துச்சுனு வெய்ங்க், அது அதவிட கடுசு!!

எங்கிட்ட இருக்கிறது தோலோடுதான். அதனை ஒரு 10 நிமிடங்கள் நீரில் போட்டு ஊறவெச்சேன்.
பொறவு நல்லா தண்ணிய சுண்ட வடிச்சிட்டு,  மிக்ஸில போட்டு ஒரு சுத்து விட்டேன். உடனே தோலெல்லாம் கழண்டுக்கிச்சு.
அப்பரமா அதைய தண்ணில போட்டு நல்லா கழிஞ்சேன். தவிடெல்லாம் வெளியேறி நல்லா சுத்தமாகிடுச்சு.
உடனே அதைய அளவா தண்ணி விட்டு கல் இல்லாம அரிச்சு, மறுக்கா மிக்ஸி ஜார்ல போட்டேன். இப்பவும் தண்ணிய சுண்ட வடிச்சு போடோணும்.

நல்லா ரவைய விட கொஞ்சம் நைசா வாராப்பில அரைச்சுக்கணும்.

இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடியே நாம எவ்வளவு கம்பு எடுக்கறோம்னு அளந்துக்கணும். அப்பத்தான் தண்ணி செரியா ஊத்தமுடியும்.

ஒரு கப் கம்புக்கு 3 கப் தண்ணி ஊத்தணும்.

உடனே அட இவ்வளவுதானா? எனக்குத்தான் இது தெரிமேனு நெனைக்காதீங்க. அப்பரமாத்தான் வேலையே இருக்கு.

குக்கர்ல கம்பு மாவுமில்லாத, ரவை பதமாவும் இல்லாதை போட்டு, தண்ணி ஊத்தி நல்லா கலந்து விட்டு, தண்ணி கொதிக்கிறாப்பில ஆனவுடனே குக்கர மூடி , ஆவி வெளிய வரத்துவங்கின உடனே வெயிட் போடணும்.

நல்லா 3, 4 சத்தம் போட விட்டுடணும். அப்பரமா அடுப்பை நிறுத்திட்டு, முழுசா ஆவி வெளியேறினப்புறம், குக்கரை நீக்கி, உள்ள இருக்கிற கலவைய நல்லா கலந்து விடணும்.

நெல்லுச்சோறாட்டம் , பக்குவமா ஆகி இருக்கும்னு தப்பு கணக்கு போட்டுடக்கூடாது.
அடில கெட்டியாவும், மேல தண்ணியாட்டவும் இருக்கும். நல்லா கலந்து விட்டு, மறுக்கா குக்கரை மூடி ஒரு ரெண்டு அல்லது மூணு சத்தம் விடணும்.

மறுக்கா அதே போல, ஆவி, வெயிட் இதெல்லாந்தான்.......

இப்ப கெளறுனா, ஓரளவுக்கு கெட்டியா இருக்கும்.
இந்த ஸ்டேஸ்(ஜ்)ல கை பொறுக்கிறாப்பில ஆனதுக்கப்புறமா, உருண்டைகளா உருட்டி, ஒரு குண்டால போட்டு, மூழ்கும் வரைக்கும் தண்ணிய ஊத்தி வெச்சுக்கிட்டு, ரெண்டு நாளைக்கு அதையே குடிக்கலாம்.
முக்கியமா ஃப்ரிட்ஜ்ல வெக்கிறது ரொம்ப நல்லது.

ஆனா பாருங்க  எனக்கு கொஞ்சம் உருண்டை பிடிக்க வரல.
அதுக்காக பூராவும் வீண் என்று மனம் தளர்ந்து விடக்கூடாது.
என்ன செய்யலாம்னா, குக்கர்ல இருந்து, கரண்டில அள்ளி வேற குண்டால போட்டு, நல்லா சமனா பண்ணி விடணும். கொஞ்ச நேரம் ஆறவிட்டா ஓரளவு இஞ்சிக்கும்.
அதுக்கு அப்பறமா மூழ்குற அளவுக்கு தண்ணிய ஊத்தி ஃப்ரிட்ஜ்ல வெச்சுக்கோணும்.
போடுறப்ப குழிக்கரண்டியால ஐஸ்க்ரீம் மாதிரி  போட்டுக்கலாம்.

இதுக்கு பச்சபயிறும் பீ(ர்)க்கங்காயும் போட்ட கொழம்பு நல்லா இருக்கும்.

தட்டப்பயிறும் சொ(சு)ரக்காயும் போட்ட கொழம்பும் நல்லா இருக்கும்.
தயிர் ஊத்தியும் சாப்பிடலாம்.

தண்ணியாட்டம் கரைச்சு, தயிர் போட்டு, உள்ள சின்ன வெங்காயத்தையும் மல்லி தழையும் பொடிசா நறுக்கி போட்டு குடிக்கலாம்.
நான் புதினா போட்டிருக்கேன்.

இந்த வெயிலுக்கு இது ரொம்ப ரொம்ப நல்லது.

படம் பாக்கலாம் வாங்க:

மிக்ஸியில் பொடியாக்கிய கம்பு

குக்கரை மூடி வெயிட் போடும் நிலையில்

முதல் முறை சத்தம் வந்து இறக்கிய பிறகு

இரண்டாம் முறை சத்தம் வந்து இறக்கிய பிறகு

உருண்டை பிடிக்க முடில

இப்படி போட்டு மூழ்கும் வரை நீர் விட்டாச்சு


கம்பு சோறு ஆக்கி முடிக்கிறதுக்குள்ள குக்கர் நிலமை இப்படி ஆகிடுச்சு :(





இவ்வளவு கஷ்டத்தையும் தாண்டி கூழ் தயார்!!
நிஜமாவே கம்பு சோறும், கூழும் அபார சுவையுடன் இருந்துச்சுங்க!!

                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்,  உன்னை வலிமை படைத்தவன் என்று நினைத்தால் வலிமையுடையவனாவாய்.
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

சுவாமி. விவேகானந்தர்.

                                                               _()_()_()_()_

திங்கள், 16 மார்ச், 2015

பேபி கார்ன் 65



பேபிகார்ன் எங்க வீட்டு சமையலில் அடிக்கடி இடம்பிடிக்கும் பொருள். க்ரேவி செய்வதுண்டு. எண்ணையில் போட்டு பொரிப்பது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விசயமே!!
அத்தி பூத்தாப்பில பொரிச்செடுத்த பேபிகார்ன் 65 எப்படி தயாராகுதுனு இப்ப பார்க்கலாம் வாங்க!!

தேவையான பொருட்கள்:

பேபிகார்ன்........1பொட்டலம்.

இஞ்சி, பூண்டு விழுது.........1 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள்..........காரத்திற்கேற்ப

கரம்மசாலா பொடி........1/4 தேக்கரண்டி

மைதாமாவு............4 மேசைக்கரண்டி

கார்ன்மாவு (சோளமாவு).........2 மேசைக்கரண்டி

கடலை எண்ணைய்.........பொரிக்கதேவையான அளவு

உப்பு.........தேவையான அளவு


செய்முறை:

பேபிகார்னை தோல் நீக்கி நீள் சதுர துண்டுகளாக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுதினை போட்டு பேபிகார்னை பிசறி வைக்கவும்.

அரைமணிமுதல் ஒரு மணிவரை காத்திருக்கலாம். ஊட்டு சனத்தோட பொறுமைக்கேத்தாப்புல நேரம் எடுத்துக்கலாம்.

ஒரு பேஸனில் (வாயகன்ற பாத்திரம்) மைதாமாவு, கார்ன்மாவு, கரம்மசலா பொடி, மிளகாய்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு கட்டிகளின்றி ஓரளவு நீர்க்க கரைத்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன், எண்ணைய் ஊற்றவும்.

எண்ணைய் காய்ந்ததா என சோதிக்க, ஒரு துளி கரைத்த மாவினை எண்ணையில் போடவும். மாவு எண்ணையில் குதித்தெழுந்தால் எண்ணைய் காய்ந்துவிட்டது என்று அர்த்தம்.

கரைத்த மாவில் பேபிகார்ன்களை இரண்டு, மூன்றாக போட்டு நனைத்து, காய்ந்த எண்ணையில் போடவும்.

ஓரளவு வெந்தவுடன் எடுத்துவிடவும்.

மீதம் உள்ள அனைத்தையும் அதே போல் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முதலில் போட்டு எடுத்தவற்றை மீண்டும் காய்ந்த எண்ணையில் இரண்டாவதாக போட்டு எடுக்க வேண்டும்.
இப்பொழுது மொறு மொறுப்பான பேபிகார்ன் 65 தயார்.

இரண்டு முறை பொரித்தெடுத்தால்தான் மொறு மொறுப்புடன் இருக்கும். எல்லாத்தையும் ஒரே மூச்சில் ஒருமுறை போட்டு எடுத்துவிட்டு, பிறகு இரண்டாவது போடவேண்டும் என்பதில்லை.
இரண்டு அடசல்களோ அல்லது அதற்கு மேலோ எடுத்துவிட்டு, அதனை இரண்டாவதாகவும் போட்டு எடுத்துவிடலாம்.


மூன்றாவது படத்தில் இருக்கும் பட்சத்தில் எடுத்துவிட்டு,  ஒன்றாக சேர்ந்து இருக்கும் கார்ன்களை தனித்தனியாக பிரித்து மீண்டும் அதே எண்ணையில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
 



வளையல் போல  பெரியவெங்காயத்தையும்,  பல்லுச்சக்கரம் போல்  கேரட்டையும், சிறு சதுர துண்டுகளாக எலுமிச்சையையும் வெட்டி வைத்து அலங்காரம் செய்யலாம்னு நினைக்கிறதுக்குள்ள பொரித்த கார்ன்கள் தீர்ந்துவிட்டது.
இருந்த கார்ன்களில் இவற்றை மட்டுமே காப்பாற்றி புகைப்படம் எடுக்கமுடிந்தது:))))).

இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம், இந்த பலகாரம் எவ்வளவு சுவையானது என்று!!

                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 படித்ததில் பிடித்தவை:

1.வேலையை மாற்றிச் செய்வது ஓய்வுக்கு சமம்.

2. வெறும் அதிர்ஷ்டத்தால் கிடைக்கும் முன்னேற்றம், நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது.

3.பிரச்சனைகள்தான் மனிதர்கள் யாரென்று காட்டுகின்றன.

                                                                _()_()_()_()_
 

வெஜ் குருமா




இந்த குருமாவிற்கு, இந்த காய்கறிகள் மட்டும்தான் என்றில்லை. அவரவர்க்கு விருப்பமான காய்கறிகளை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் வண்ணமயமாக வேண்டும் என்று நினைத்தால் கூட ஒரு பீட்ரூட் சேர்த்து செய்யலாம்.

இக் குருமா,மிகவும் எளிமையான ஒன்று!!

கீழ்க்கண்டவாறு இக்குருமா செய்முறையினை பற்றி விரிவாகக் காண்போம்.
( மகளுக்கு தமிழ் ஆசிரியைப் பணியை செவ்வனே செய்வதால் அதே பாணியிலேயே எழுத்தும் பேச்சும் உள்ளது :))) )

தேவையான பொருட்கள்:

காய்கறிகள்.......தலா ஒரு கப் (நான் பயன்படுத்தியிருப்பவை = பட்டாணி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர்)

பெரியவெங்காயம்...........1

 அடிக்கோடிட்ட பொருட்களை அரைத்துக்கொள்க:

தக்காளி............2

இஞ்சி..............சிறு துண்டு

பூண்டு............6 பற்கள்

தேங்காய்........1/2 மூடி

பொட்டுக்கடலை......2 மேசைக்கரண்டி

வறமிளகாய்.......4 (காரத்திற்கேற்ப) 

கசகசா.......1/4 தேக்கரண்டி

சோம்பு..........1/2 தேக்கரண்டி

கிராம்பு.........2

பட்டை........சிறுதுண்டு

ஏலக்காய்.........2

முந்திரி........5 (விரும்பினால்)

தாளிக்க:

கடலை எண்ணய்...........1 மேசைக்கரண்டி

சோம்பு........1/4 தேக்கரண்டி

செய்முறை :

அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்தெடுக்கவும்.

கேரட், பீன்ஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

பச்சைப் பட்டாணியை தோலுரித்து வைக்கவும்.

காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் மஞ்சள்தூள், உப்புடன் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அடுப்பில் குக்கரை ஏற்றவும்.  குக்கர் சூடானவுடன் கடலைஎண்ணைய் ஊற்றி, காய்ந்தவுடன் சோம்பு போடவும்.

சோம்பு பொரிந்தவுடன் பெரியவெங்காயம் போட்டு நிறம்மாறும் வரை வதக்கவும்.

பின்னர் அரைத்தவற்றைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் காய்கறிகள் அனைத்தையும் போட்டு வதக்கி, தேவையான அளவு நீர்விடவும்.

உப்பு சரி பார்த்து குக்கரை மூடிவைக்கவும். குக்கர் ஆவி வந்தவுடன் வெயிட் போட்டு, நான்கு சத்தம் விடவும்.

ஆவி முற்றிலுமாக இறங்கியவுடன் குக்கரை திறந்து, குருமாவினை கரண்டியால்  நன்கு கலக்கிவிடவும். தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து பொடியாக்கிய மல்லிதழையை பொடியாக அரிந்து,  மேலேதூவி பரிமாறவும்.

விளக்கமான படங்களை கீழே காணலாம் வாருங்கள்!!

























 இக்குருமா சப்பாத்தி, ரொட்டிக்கு சுவையானதொரு இணையுணவாகும். இவ்வாறாக சுவையானதொரு காய்கறிக்குழம்பினை எவ்வாறு தயாரிப்பது என்பதை மிகத்தெளிவாக பார்த்தோம்.

                                                            ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் புடித்தது:

 உனது கௌரவம் உனது நாக்கின் நுனியில் இருக்கின்றது.

                                                       _()_()_()_()_