திங்கள், 9 மார்ச், 2015

இட்லிப்பொடி




இட்லிப்பொடி முதன்முறையாக முயற்சி செய்தது. எங்கள் வீட்டில் இட்லி பொடியினை விரும்பி சாப்பிடாதவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே இதன் மேல் அவ்வளவாக நாட்டம் ஏற்பட்டதில்லை. இங்கு அனைத்து உணவகங்களிலுமே இட்லி, தோசை கேட்டால் கண்டிப்பாக எண்ணைய் கலந்த பொடி இல்லாமல் இருக்காது.
ஆனா பாருங்க யாருமே துளிக்கூட தொடாமலே வைத்து விடுவோம்.

திடீர்னு ஒருநாள் ஏற்பட்ட ஆர்வக்கோளாறுல இட்லி பொடி செய்தேன். அந்த ஆர்வத்துக்கு காரணம், ஊர்ல இருந்து கொண்டு வந்த கறிவேப்பிலைதான்  என்று சொன்னால், அதில் எள் முனையளவும் பொய்யில்லை.

கொண்டுவந்த கறிவேப்பிலை முழுவதும் வீணாப்போய்டும் போல இருக்கேனு கவலையோடு நெட்டை போட்டதில், சிக்கிய மீன்களெல்லாமே காரசாரமாக காட்சியளித்தன.
நமக்குத்தான் காரமே கண்ல காட்டப்படாதே!! எப்பவோ வரப்போகும், அலசருக்கும், வயிறு எரிச்சலுக்கும் (சத்யமா, அந்த வயித்தெரிச்சல் இல்லீங்கோ ஓ ஓ ஓ ஓ, நா நம்ப நல்லவ!!) இப்பவே முன்னெச்சரிக்கையா காரம் காட்டாம வளக்கப்படுறேன். பின்ன நம்ம இஷ்டத்துக்கு சாப்பிடக்கூட முடிறதில்லே :( சரி விடுங்க சொந்தக்கதைய பொறவு பாக்கலாம்.

அந்த காரசாரத்தை அடிப்படையாக கொண்டு, நமக்கு தவுந்தாப்புல அரைச்சதுதான் இந்த இட்லிபொடி என்கிற கறிவேப்பிலை பொடி :))

வாங்க செய்முறைய பாப்போம்:

தேவையான பொருட்கள்:

போட்டாவுல இருக்கிற அத்தனையும் தேவைதான்.



வெள்ளை எள் , கறுப்பு உளுந்து , கடலபருப்பு , வறமிளகாய், கறிவேப்பிலை (நாலஞ்சு கைப்பிடி போட்டிருக்கேன்) எல்லாமே ஒரு சின்ன கப் வெச்சு அளந்து போட்டுக்கோங்க. எச்சூஸ்மீ வற மொளகா மட்டும் எண்ணிக்கைல போட்டுக்கோங்க அதே போல வெள்ளை எள் மத்த பொருட்களை விட பாதியளவு போட்டா போதும்.
காரம், உங்கூட்டு காரத்துக்கேத்தாப்புல கூட, கொறச்சு போட்டுக்கோங்க.

வெறும் வாணலில முதல்ல கடலை பருப்பை போட்டு லேசா சிவக்கும் படி வறுக்கணும். தீயக்கூடாது.  எடுத்துக்கொட்டி வெச்சிட்டு, கறுப்பு உளுந்து போட்டு அதேபோல சிவக்க வறுத்துக்கணும்.
அப்பறமா வெள்ள எள் சட சடனு பொரியும் அப்ப எடுத்துக்கொட்டிடணும். அப்படியே வடசட்டியோட வெச்சா தீஞ்சிடும்.



அப்பறமா கறிவேப்பில போட்டு வறுக்கணும், மொறு மொறுனு ஆகிறாப்புல. அதுக்கபுறம் வறமிளகா போட்டு வறுத்து அடுப்பை நிறுத்தணும்.
எல்லாம் ஆறுனதுக்கப்புறம், மிக்ஸில போட்டு அரைச்சு எடுத்து, ஒரு பராத்துல கொட்டிவெக்கணும். அப்பத்தான் மிக்ஸில அரச்ச சூடு கொறையும்.

அதுக்கப்புறம் காத்து பூதாத டப்பால போட்டு வெச்சுக்கணும். நா எல்லா பொடி, மாவு வகைகளை ஃப்ரிட்ஜல தான் வெப்பேன்.
எத்தனநாள் ஆனாலும் தீரவே தீராது..ஸாரி....கெடவே கெடாது.

                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

உண்ணும் போது பரபரப்பு, அக்கறையின்மை, பதட்டம், அதிக பேச்சு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

                                                   _()_()_()_()_


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்