திங்கள், 27 ஜூலை, 2015

உயர்திரு.Dr.A.P.J. அப்துல்கலாம் ஐயா!!



பாரதத்தாயின் மணிமகுடத்திலிருந்து ஒரு இரத்தினம் தன் அக்னி சிறகினை மெல்ல விரித்து பறந்து சென்று வானத்து நட்சத்திரமாய் மாறிவிட்டது :((( 

கனவு காணுங்கள் அக்கனவினை மெய்ப்படச் செய்யுங்கள் என இலட்சோப இலட்சம் மாணவர்களுக்கு எழுச்சியூட்டிய கனவு நாயகன் இன்று உறங்கச் சென்றுவிட்டார்.
அவரின் கனவுக்கு முழுவடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பினை இன்றைய இளம் குருத்துக்களிடம் விட்டுச்சென்றுள்ளார்.
அவரின் கனவு மெய்ப்படச் செய்ய வேண்டிய கடமை அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் உண்டு!!

குடியரசு தலைவரின் மாளிகை என்பது சாமான்ய மக்களுக்கு தூரத்து காட்சியே என்ற நிலையை மாற்றியவர்.
நேர்மை, எளிமை, உற்சாகம் இவற்றின் ஊற்றுக்கண்ணாய் விளங்கியவரின் உடல் துயிலுற்றாலும், ஆன்மா விழித்துக்கொண்டும் செயலாற்றிக் கொண்டும்தான் இருக்கும்.

பிறப்பென்றிருந்தால் இறப்பும் உண்டு, ஆனால் அந்த நிகழ்வு அனைவருக்கும் ஒவ்வொருவிதத்தில் அமையும்.
தங்களின் உயிர் பிரியும் தருவாயிலும், தாங்கள் ஆற்றிய கடமையை காலம் என்றென்றும் மறவாது.

தங்களுக்கு எங்களின் வீரவணக்கம் ஐயா!!





                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல, உங்களை தூங்கவிடாமல் செய்வது!!

-- Dr. A.P.J. அப்துல்கலாம்

                                              _((((())))))_

வியாழன், 23 ஜூலை, 2015

நிலக்கடலை சுண்டல்/ வேர்க்கடலை சுண்டல்/ Peanut Sundal





பச்சக் கல்லக்காயை பறித்து வேகவைத்து சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான். ஆனால் எல்லா பருவங்களிலும் பச்சக்கல்லக்காய் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளாகத்தான் பச்சையாக இருக்கும். பிறகு காயவைத்து விடுவார்கள். இல்லையேல் பூஞ்சாணம் பிடித்து காய்கள் கெட்டுப்போய்விடும்.

அதுக்காக பச்சக்கல்லை சாப்பிடும் ஆசை போய்விடுமா என்ன?
வருடம் பூராவும் பச்சக்கல்லை சாப்பிடணுமா? (இது ஏதோ மரகதக் கல், மாணிக்ககல்னு நினைக்கப்படாது. கடலைக்காயை நாங்கெளாம் கல்லக்காய்னுதான் சொல்வோம்.)
அதுக்கு ஒரே வழிதாங்க இருக்கு, காயவெச்ச வேர்க்கடலை பருப்புகளை குறைந்தது 4 மணிநேரம் நீரில் ஊறவைத்து, குக்கரில் 4 விசில் விட்டு எடுத்தா வேகவைத்த வேர்க்கடலை தயார்!!
95% அதே ருசி கிடைத்து விடுகிறது. என்னக்கேட்டா 100/100 அதே ருசினு சொல்வேன்.
ஆனா பச்சக்கடலைய பலவிதமா ஆராய்ச்சி பண்ணி சாப்பிட்டதில ஊசி போடாத மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு அதில்  5%  குறைவாகத்தான் தெரி(து)யும்!!

சரி வாங்க படத்துடன் கூடிய குறிப்புக்கு போவோம்:



இந்த கப்லருந்து அப்பிடியே வேர்க்கடலைய எடுத்து ஒவ்வொண்ணா வாயில போட்டுக்கிட்டே வந்தா குறிப்பு  வ(வெ)ந்துடும்.







 நான் வாங்கியது ஔவை பிராண்ட் நிலக்கடலை, நல்லாவே சுத்தம் செய்து தரமான நிலக்கடலைகளாவே விற்பனை செய்கிறார்கள். ஒரு பாகெட்ல ஒரு சொத்த கடலை கூட இல்லீங்!!


 கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை நீர் விட்டு ஊறவைக்கவும்.

நல்லா ஊறிடுச்சு பாருங்க!!

ஊறின கடலையை குக்கரில் தேவையான அளவு நீர் விட்டு, 1/2 தேக்கரண்டி கல் உப்பு 4 லிருந்து 5 விசில் விட்டு வேகவைக்க வேண்டும்.
வெந்த பிறகு அதிலிருக்கு நீரினை இருத்துவிட வேண்டும்.
படங்கொஞ்சமல்ல நிறையவே ஆடிடுச்சு
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்தவுடன் கடலெண்ணய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.

பொடியாக நறுக்கிய  இரண்டு மிளகாய்பழம்,  10 சின்ன வெங்காயம், 2 இணுக்கு கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.

 வதங்கும் பொழுதே சிறிது உப்பு (பொடி உப்பு) ஏற்கனவே கல் உப்பு போட்டிருக்கு, ஆதலால் தேவைக்கு போடவும். அதிகமாகிவிடும் வாய்ப்புள்ளது. கூடவே அரை தேக்கரண்டி அளவு சாட் மசாலா போட்டு வதக்கி, வேகவைத்த கடலையைப் போட்டு கிளறிவிடவும்.
பின்பு  துருவிய அரைமூடி தேங்காயைப் போட்டு நன்கு கிளறிவிடவும்.
 தேங்காய் போட்ட பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்க வேண்டாம். எப்பொழுதும் தேங்காய் பச்சையாக சாப்பிட்டால் நல்லது. அதுவே வறுத்து சாப்பிடும் பொழுது உடலில் கொழுப்பு தங்கும் வாய்ப்புள்ளது.


 சூடான சுவையான வேர்க்கடலை சுண்டல் தயார்!!

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றதொரு சத்துள்ள உணவு.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

உண்மையை நேசி; பிழையை மன்னித்து விடு.

                                                                   _((()))_

வெள்ளி, 17 ஜூலை, 2015

அகர் அகர்/ Agar Agar



என் முதல் முயற்சி!! இதை விட ஒண்ணு சொல்லியே ஆகணும், முதல் முறையாக அகர் அகர் பார்க்கிறேன். 

நிறைய பிளாஹ்களில் இதனைப்பற்றிய குறிப்புகளை கண்ணுற்றிருக்கிறேன். ஆனா அதிலெல்லாம் சன்னமாக சேமியா போன்றவற்றை பார்த்திருக்கிறேன்.

எங்க வீட்டுக்கு அருகில்னா ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில புதுசா ஒரு சூப்பர்மார்கெட் திறந்திருந்தாங்க. கலர்கலரா லைட்டெல்லாம் போட்டு அமர்க்களமா இருக்கவும். உடனே  உள்ளே போய் பார்க்கலாம்னு போனோம்.
ரொம்ப நாளா மனதிலிருந்த சைனாக்ராஸ் கண்ணுக்கு தட்டுப்படவும் வாங்கியாந்துட்டோம்.

இதனைப் பற்றிய  தகவல்களுக்குஇங்கே சென்று பார்க்கலாம்.

ஆமா இது செமக்க முடியாத அளவுக்கு பெரிய்ய் செமை பாருனு, இதனை பயன்படுத்தியவர்களுக்கு தோன்றலாம்.
ஆனா பாருங்க என்னையாட்டம் இருப்பவங்களுக்கு இது ஏதோ பெரிய விஷயம்னுதான் தோணும்.
அட ஒண்ணுமே இல்லீங்க, வெறும் அட்டப்பொட்டியோனு ஒரு சந்தேகம் கூட வந்துச்சு. 40 ரூபாய் ஏமாந்துட்டமோனும் நினைக்காம இருந்தா தப்புதானே?? அதுனால அப்பிடியும் நினச்சேன்!!



(தீப்பொட்டி சைஸ் அட்டப்பொட்டிக்குள்ள இவ்வளவு அதியமானு ஆச்சர்யப்பட்டு போனேன்!!)
 கொஞ்சூண்டு நொரையாட்டம் பாலீதீன் கவர்ல இருப்பதுதான் அகர் அகர் எனப்படும் கடற்பாசி.
கற்பாசி மட்டுமே (ப்ரியாணி, குருமா) இதுவரை பயன்படுத்தி இருக்கேன். கல்பாசிக்கும் கடற்பாசிக்கும் ஓரெழுத்து வித்யாசம்தான் ஆனால் குணமோ வெவ்வேறானவை.

அகர்பத்தி மட்டுமே தெரிஞ்ச எனக்கு இந்த அகர் அகர் புத்தம்புதுசுங்க!!

செய்முறைக்கு போவோம்!!

தேவையான பொருட்கள்:

அகர் அகர்.... 10 கிராம்பெட்டி

பால்....1/2 லிட்டர்

தண்ணீர்....3/4 கப்

சர்க்கரை...1/4 கப்(விருப்பத்திற்கேற்ப)

ரோஸ் எசென்ஸ்... 1 அல்லது 2துளிகள்

பீட்ரூட்....சிறுதுண்டு

செய்முறை:

பீட்ரூட் சிறுதுண்டினை தோல்சீவி மிக்ஸியில் சின்னஜாரில் 1/4 டம்ளர் நீர் விட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அடுப்பிலேற்றி அகர் அகர் போட்டு கரையவிடவும்.

பக்கத்து அடுப்பில் பாலினை ஊற்றி காய்ச்சவும். கூடவே சர்க்கரையும் போட்டு கிளறவும்.

அகர் அகர் கரைந்தவுடன் வடிகட்டியில் வடித்து பாலினுள் ஊற்றவும். வடித்த பீட்ரூட் சாறையும் ஊற்றி கிளறவும். ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.

ஆறியவுடன் பிடித்த மோல்டுகளில் ஊற்றி ஃப்ரிட்ஜில் அரை மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

சுவையான இனிப்பு தயார்!!


பீட்ரூட் சாறு சரியான சாயமேற்றி...ஃபுட்கல்ர் ஏதுமே பயன்படுத்தவில்லை.


பீட்ரூட்டினை பாலூற்றி அரைத்ததாலோ, இல்லை பாலினுள் பீட்ரூட் கலந்ததாலோ கலவை திரிந்தாற் போல் ஆயிற்று. ஆனால் சுவை குறையவில்லை.

உடலுக்கு குளிர்ச்சி தரும் இன்னும் பலப்பல அகர் அகர் குறிப்புகளை காண நேரிடும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இதனை எழுதும் தருவாயில் என் மகன் என்னிடம், அம்மா அக்கா கேட்கிறாங்க   (என் அக்கா மகள்) எப்படி இருந்துச்சுனு..வாட்ஸாப்பில் அனுப்பியதன் விளைவு....

அதற்கு என் மகள் கூறுகிறாள்... டேய் நல்லா இருந்துச்சுனே சொல்லிடுடா.. வேற வழியே இல்லை...அவ்வ்வ்...

இதனைக்கேட்டு என் இதயம் இப்படி சிதறிடுச்சு...



ஹீ!! ஹீ!! இப்பிடிலாம் புது பலகாரம் செய்யீல கொஞ்சம் அப்பிடி இப்பிடினுதான் ஆகும்னு சொல்லி மறுக்கா என் இதயத்தை ஒட்ட வெச்சுக்கிட்டேன்!!

                                                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது!!

புது விஷயங்களில் இருந்து ஒதுங்கக்கூடாது. திறமை மிக்கவர்களின் கீழ் பணியாளாக இருந்து தொழிலைப் பழகிக் கொள்ள வேண்டும்.

--பாரதியார்

திங்கள், 13 ஜூலை, 2015

மிளகு குழம்பு/ Pepper kuzhampu

காரசாரமான மிளகு குழம்பு:

தேவையான பொருட்கள்:

மிளகு.....1 1/2 மேசைக்கரண்டி

குண்டு உளுந்து....1 மேசைக்கரண்டி

புளி.......பெரிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள்....1/4 தேக்கரண்டி

சாம்பார்தூள்....1/2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை...4 இணுக்கு

நல்லெண்ணைய்....2 மேசைக்கரண்டி

கடுகு...1/4 தேக்கரண்டி

உப்பு....தேவையான அளவு











 செய்முறை:

புளியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.

நன்கு கரைத்து சக்கைகளை அகற்றிவிடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் மிளகு, குண்டு உளுந்து, கறிவேப்பிலை போட்டு வறுத்து எடுக்கவும்.

இவை ஆறியவுடன் மிக்ஸி சின்ன ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் சூடானவுடன்  எண்ணைய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை போட்டு பொரியவிட்டு, கரைத்து வைத்த புளித்தண்ணீரை ஊற்றி, சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். உப்பு போட்டு நன்கு கலக்கிவிடவும்.
பின்னர் அரைத்த பொடியினைச் சேர்த்து எண்ணைய் பிரியும்வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

சூடான சுவையான மிளகுகுழம்பு தயார்!! சாதம், இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.

சளி, காய்ச்சல், உடல் அசதிக்கு மிகவும் நல்லது. உடல் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடியது. குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாகும்.



முள்ளங்கிசாம்பார், செங்கீரை பொரியலுடன், மிளகுகுழம்பு கூட்டணி அமைத்த ஒரு மழைநாளைய மதிய உணவு.
பின்குறிப்பு:

வறுக்கும் பொழுது சீரகம் சேர்த்து வறுக்கலாம்.

இதனுடன் லேசாக எண்ணய்விட்டு பூண்டு 10 பற்கள் சேர்த்து வதக்கி அரைத்த விழுதினை சேர்த்தால் சுவை கூடும்.

வெறும் வாணலியில் வறுக்காமல் சிறிது எண்ணைய் சேர்த்து வறுத்தும்  இக்குழம்பினை வைக்கலாம்.

தாளிக்கும் பொழுது 10, 15 சின்னவெங்காயம் சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் சேர்ப்பதினால் வைத்திருந்து பயன்படுத்தமுடியாது.

மிளகு சேர்த்து வறுக்கும் பொழுது மிளகானது வெடித்து சிதறும் அபாயம் உள்ளது, கவனமுடன் செயலாற்ற வேண்டும் .

                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

தான் செய்த குற்றத்தை சுண்டைக்காயாகவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காயாகவும் நினைப்பது கூடாது.

--பாரதியார்
    
                                                              _((()))_ 

ஞாயிறு, 12 ஜூலை, 2015

வெந்தயக்கீரை காளான் ப்ரியாணி/ Methi Mushroom Biryani






வெந்தயக்கீரை காளான் ப்ரியாணி சுவையும் மணமும் நிறைந்தது.

தேவையான பொருட்கள்:

மொட்டுக்காளான் ...2 பாக்கெட்

பாஸ்மதி அரிசி.... 500 கிராம்

வெந்தயக்கீரை....2 கைப்பிடி அளவு

பெரிய வெங்கயாம்...2

தக்காளி....1

எலுமிச்சை...1/2 மூடி

தயிர் ஆடை...1 மேசைக்கரண்டி

நெய்....1 மேசைக்கரண்டி (விருப்பப்பட்டால்)

கடலெண்ணய்...1 மேசைக்கரண்டி

உப்பு....தேவையான அளவு

அரைக்க:

இஞ்சி....பெருவிரல் அளவு துண்டு

பூண்டு......15 பல்

பச்சை மிளகாய்...2

வறமிளகாய்...3

பட்டை...1 அங்குலத்துண்டு

கிராம்பு.....2

கசகசா...1/2 தேக்கரண்டி

சோம்பு...1 மேசைக்க்ரண்டி

ஏலக்காய்...3

அன்னாசிமொக்கு...1

மராட்டி மொக்கு...1/2 யாக உடைத்தது

ஜாதிக்காய்...சிறு துண்டு

தக்காளி....2



காளானை சுத்தம் செய்து இரண்டாக வெட்டி வைக்கவும். வெங்கயாத்தை நீளவாக்கில் சன்னமாக வெட்டி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைத்து வைக்கவும். புதினாவை நீரில் போட்டு வைத்து, நன்கு கழுவி வைக்கவும். வெந்தயக்கீரையை இலைகளை மட்டும் பறித்து சுத்தம் செய்து வைக்கவும்.

பாஸ்மதி அரிசியை அளந்து,  மூன்று முறை கழுவி ஒன்றுக்கு இரண்டு பங்கு நீர்விட்டு, அதில் எலுமிச்சையை கொட்டைகளில்லாமல் பிழிந்து வைக்கவும்.




அடுப்பில் குக்கரை ஏற்றி சூடானவுடன் எண்ணைய் ஊற்றவும். காய்ந்தவுடன் சோம்பு தாளித்து அரிந்த வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வதக்கவும். பின்பு அரைத்த விழுதினைப்போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


பின்பு தக்காளியைப் போட்டு வதங்கியவுடன், காளானைப் போட்டு நீர்விடும் வரை வதக்கவும்.
பின்னர் தயிர் ஆடையை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நன்கு கிளறிவிட்டு, அளந்து வைத்த நீரினை விட்டு உப்பு சரி பார்த்து குக்கரை 3 விசில் விடவும்.
ஆவி அடங்கியவுடன் எடுத்து, அரிசியைப் போட்டு,  மீண்டும் குக்கரை மூடி மேலே அவி வந்த பிறகு, வெயிட்போட்டு சரியாக 7 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
ஒரு வேளை 7 நிமிடங்களுக்கு மேலாகி விட்டால், குக்க்ரின் வெயிட்டினை மேலே படத்திலுள்ளவாறு ஆவியை வெளியேறச் செய்யலாம். முழுவதுமாக பிடுங்கி எடுக்கக்கூடாது.
சூடான சுவையான ப்ரியாணி தயார்!!



வெங்காய பச்சடியுடன் பரிமாறவும். ஆனியன் ரைத்தாகாண இங்கே செல்லவும்.

படித்ததில் பிடித்தது:

திறமை எல்லாருக்கும் இருக்கிறது; அது நடத்திச் செல்லும் இருண்ட, பாதைகளில் பின் தொடரத்தான் துணிச்சல் தேவைப்படுகிறது.

                                                                _((()))_ 


புதன், 8 ஜூலை, 2015

சேமியா உப்மா/ semiya upma


 சேமியா உப்மா சொல்லவே தேவையில்லை, மிகவும் எளிமையாக செய்யக்கூடிய வஸ்து :)) ஆத்ர அவசரத்துக்கு கை கொடுக்கும் ஆபத்பாந்தவன் அன்ட் விருந்துகளில் கடைசியில் தயிர் சேமியாவாக அவதாரம் எடுத்து அதுவரை காரமும், இனிப்பும் மாறி மாறி விழுந்து நொந்து போன  வயிற்றுக்கு தற்காலிக குளு குளு நிவாரணி :))

தேவையான பொருட்கள்:

வறுத்த சேமியா....2 பாக்கெட்

கேரட்.....1 பெரியது

பச்சை மிளகாய்...4

தக்காளி.....1

எலுமிச்சை....1/2 மூடி (பெரிதாக இருந்தால், இல்லையேல் முழு பழம்)

பெரியவெங்காயம்.......2

கறிவேப்பிலை.......2 இணுக்கு

பொடியாக சீவிய இஞ்சி, பூண்டு....1 மேசைக்க்கரண்டி

கடலெண்ணைய்....... 1மேசைக்கரண்டி

கடுகு, கடலைப்பருப்பு...தேவைக்கு

உப்பு...தேவையான அளவு

செய்முறை :

வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி விதைகளை அகற்றி விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.

சேமியா வறுத்ததாகவே கடைகளில் கிடைக்கிறது. அவ்வாறில்லையெனில் சிறிது நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை போட்டு வதக்கி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். நல்ல வாசனை வந்தவுடன் தக்காளியைப் போட்டு குழைய வதக்கவும்.

6 டம்ளர் (சிறிய டம்ளர்) நீர் விட்டு கொதித்தவுடன் சேமியாவை போட்டு கிளறவும். வெந்து வரும் தருவாயில் எலுமிச்சையை பிழிந்து விடவும். விருப்பப்பட்டால் வறுத்த முந்திரி போட்டு அலங்காரம் செய்யலாம்.
சுவையான சேமியா உப்மா தயார்!!.


படித்ததில் பிடித்தது:

 தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு மனித சக்தியும் நிற்கமுடியாது! எனவே சோதனை நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்.
--ஸ்ரீ அன்னை

                                                                 _((()))_


செவ்வாய், 7 ஜூலை, 2015

ஈஸி முட்ட பரோட்டா/ முட்டை பரோட்டா/ egg paratha



முட்ட பரோட்டா, இதனை சப்பாத்தியை வைத்து செய்தேன்.
 அதனால முட்ட கொத்து சப்பாத்தினும் சொல்லிக்கலாம்.....

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி........12 (வீட்டு நபர்களின் எண்ணிக்கைக்கேற்ப)
முட்டை....4 or 5
பெரிய வெங்காயம்....2
தக்காளி.....2
பச்சை மிளகாய்....2 (காரத்திற்கேற்ப, விதைகளை அகற்றிவிடவும்)
ஏலக்காய்...2
கறிவேப்பிலை...3 இணுக்கு


 சப்பாத்தியினை  எவ்வளவு பொடியாக வெட்ட முடியுமோ வெட்டிக்கொள்ளவும்.
 வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரிந்தவுடன் ஏலக்காய் போட்டு,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
 வதங்கியவற்றுடன் நறுக்கிய சப்பாத்தியை போட்டு,  முட்டைகளை நல்லதா என சோதித்து பிறகு உடைத்து ஊற்றவும்.
 (முட்டையை சோதனை செய்ய  இங்கே செல்லவும்.)

தீயைக் கூட்டி கைவிடாமல் நன்கு கிளறவும். அடிபிடிக்கும் வாய்ப்புள்ளதால் கவனமாக பார்க்க வேண்டும்.

சூடான முட்ட பரோட்டா தயார்!!  மல்லி இலை தூவி அலங்கரிக்கவும். தயிர் பச்சடி, சால்னாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்!!

                                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:

காலத்தின் மதிப்பு உனக்கு தெரியும் என்றால் வாழ்வின் மதிப்பும் உனக்கு தெரியும்.

                                                                  _((()))_