புதன், 8 ஜூலை, 2015

சேமியா உப்மா/ semiya upma


 சேமியா உப்மா சொல்லவே தேவையில்லை, மிகவும் எளிமையாக செய்யக்கூடிய வஸ்து :)) ஆத்ர அவசரத்துக்கு கை கொடுக்கும் ஆபத்பாந்தவன் அன்ட் விருந்துகளில் கடைசியில் தயிர் சேமியாவாக அவதாரம் எடுத்து அதுவரை காரமும், இனிப்பும் மாறி மாறி விழுந்து நொந்து போன  வயிற்றுக்கு தற்காலிக குளு குளு நிவாரணி :))

தேவையான பொருட்கள்:

வறுத்த சேமியா....2 பாக்கெட்

கேரட்.....1 பெரியது

பச்சை மிளகாய்...4

தக்காளி.....1

எலுமிச்சை....1/2 மூடி (பெரிதாக இருந்தால், இல்லையேல் முழு பழம்)

பெரியவெங்காயம்.......2

கறிவேப்பிலை.......2 இணுக்கு

பொடியாக சீவிய இஞ்சி, பூண்டு....1 மேசைக்க்கரண்டி

கடலெண்ணைய்....... 1மேசைக்கரண்டி

கடுகு, கடலைப்பருப்பு...தேவைக்கு

உப்பு...தேவையான அளவு

செய்முறை :

வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி விதைகளை அகற்றி விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணைய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரியவிடவும்.

சேமியா வறுத்ததாகவே கடைகளில் கிடைக்கிறது. அவ்வாறில்லையெனில் சிறிது நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலை போட்டு வதக்கி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். நல்ல வாசனை வந்தவுடன் தக்காளியைப் போட்டு குழைய வதக்கவும்.

6 டம்ளர் (சிறிய டம்ளர்) நீர் விட்டு கொதித்தவுடன் சேமியாவை போட்டு கிளறவும். வெந்து வரும் தருவாயில் எலுமிச்சையை பிழிந்து விடவும். விருப்பப்பட்டால் வறுத்த முந்திரி போட்டு அலங்காரம் செய்யலாம்.
சுவையான சேமியா உப்மா தயார்!!.


படித்ததில் பிடித்தது:

 தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு மனித சக்தியும் நிற்கமுடியாது! எனவே சோதனை நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்.
--ஸ்ரீ அன்னை

                                                                 _((()))_


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்